திங்கள், 26 ஜனவரி, 2026

உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது யாருமில்லை

உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது யாருமில்லை!.

மனிதன் வாழ்க்கையில் அடிக்கடி தேடும் ஒன்று உண்டு—
“என்னைவிட உயர்ந்தது எது?” என்ற கேள்வி.
பணம், பதவி, புகழ், அதிகாரம், அறிவு, ஆன்மிகம் என
ஒவ்வொன்றையும் அளவுகோலாக்கி
தன்னைத் தாழ்த்திக் கொள்வதிலும்
மற்றவர்களை உயர்த்திக் கொள்வதிலும்
அவன் காலத்தை கழிக்கிறான்.

ஆனால் உண்மையில்
உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது யாருமில்லை
என்பது அகங்காரச் சொல்லல்ல;
அது ஆத்ம சத்தியம்.

இந்த உடல் ஒரு உடை.
இந்த மனம் ஒரு கருவி.
ஆனால் இவை இரண்டையும் உணர்ந்து நிற்கும்
அந்த “நான்” —
அதுவே மனிதனின் உச்ச நிலை.

உலகம் பெரியது போல தோன்றுகிறது.
மலைகள் உயரமாக,
கடல்கள் ஆழமாக,
நட்சத்திரங்கள் தொலைவில்.
ஆனால் அவையனைத்தையும்
“இவை மலை”, “இது கடல்”, “அது வானம்”
என்று அறியும் அறிவு எங்கு எழுகிறது?
உன்னிடம்தான்.

உன்னை அறியாமல்
உலகத்தை அறிய முடியாது.
உன்னை உணராமல்
உயர்வு என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லை.

ஒரு மனிதன்
தன்னைத் தாழ்த்திக் கொண்டால்
உலகமே அவனுக்கு மேலாகத் தோன்றும்.
ஆனால்
தன்னை உணர்ந்து கொண்டால்
உலகம் அவனுக்குள் அடங்கும்.

“நான் உயர்ந்தவன்” என்று சொல்வது அகந்தை.
ஆனால்
“என்னுள் உயர்ந்தது ஒன்று இருக்கிறது”
என்று உணர்வது ஞானம்.

அந்த உயர்வு
பிறரை மிதிப்பதில் இல்லை;
பிறரை மதிப்பதில் உள்ளது.
அந்த உயர்வு
எடுத்துக் காட்டுவதில் இல்லை;
உள்ளே அமைதியாக இருப்பதில் உள்ளது.

எனவே
உன்னைவிட இந்த உலகத்தில்
உசந்தது யாருமில்லை—
ஏனெனில்
உலகத்தையே அனுபவிக்கும்
மூலமே நீ.

நீ உன்னை உணர்ந்த நாளே
உலகம் உனக்கு
ஒரு பாடமாக மாறும்.

அன்புடன்,
சி எஸ் சிவா

அபிராமி அந்தாதி பாடல் 18

அபிராமி அந்தாதி பாடல் 
பாடல் 18.

"வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே".

உரைநடை விளக்கம்.

அம்மையே! அபிராமியே! உன்னையும் சிவனையும் ஒன்றாகக் காணும் அர்த்தநாரீசுவரத் திருக்கோலமும், உங்கள் திருமணக் கோலமும் என் உள்ளத்தில் நிலைத்திடும்போது என்னுள் இருந்த ஆணவம் கரைந்து விடுகிறது. அந்த நிலையில், உங்களின் பொலிவு பெற்ற திருவடிகள் என்னை ஆட்கொண்டு அருளாக நிற்கின்றன. அப்போது உயிரைப் பறிக்க வரும் காலனைக் கண்டும் எனக்குப் பயமில்லை ; அவன் வருகைக்குமுன் நீங்கள் தரிசனமாக நிற்பதால், மரணம் முடிவல்ல—அருளின் வாசலாக மாறுகிறது.


யோக–ஞான விளக்கம் :

அபிராமி அந்தாதியின் இந்தப் பாடல், வெளிப்புற பக்தி மொழியில் தோன்றினாலும், உள்புற யோக அனுபவத்தின் உச்சியைச் சுட்டுகிறது.
“வவ்விய பாகத்து இறைவரும், நீயும்” என்று அபிராமி பட்டர் கூறுவது, சக்தி–சிவம் ஒன்றாய் நிலைக்கும் தத்துவ அனுபவத்தின் சுட்டுரை ஆகும்.

சிவம் – சித்தம்.
சக்தி – இயக்கம்.
இவை இரண்டும் தனித்தனியாக இயங்கும் வரை மனிதன் இருமையில் தான் நிற்கிறான்.

இடகலை எனும் சந்திரகலை மேலோங்கினால், மனிதனுள் உலகியல் உணர்ச்சியின் செயல் மேலெழுகிறது.
இன்பம்–துன்பம், பாசம்–வெறுப்பு, பற்றுதல் போன்ற உணர்ச்சிகள் மேலோங்கி, மனம் உலகச் சுழற்சியிலேயே தன்னைப் பிணைத்துக் கொள்கிறது.

பிங்கலை எனும் சூரியகலை மேலோங்கினால், மனிதனுள் ஞானச் செயல் முன்னேறுகிறது.
விவேகம் கூர்மையடைகிறது; சிந்தனை தெளிவடைகிறது; செயல் அகநோக்கில் நகர்கிறது.

அபிராமி பட்டர் கூறும் “உங்கள் திருமணக்கோலம்” என்பது வெளிப்புற கல்யாணம் அல்ல.
அது இடகலையும் பிங்கலையும் தாண்டி சுழுமுனையில் நிகழும் யோகக் கல்யாணம்.

இந்த ஒன்றுதல் நிகழும் போது, சக்தியும் சிவமும் இரண்டாக இல்லாமல் ஒன்றாய் அனுபவமாகின்றன.
அந்த நிலையையே யோகம் பிரம்மசிவ நிலை என அழைக்கிறது.

சுழுமுனையில் நிலைபெறும் மனிதன், பிறப்பு–இறப்புகளை ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்கிறான்.
அதனால் தான் அபிராமி பட்டர், “சிந்தையுள்ளே” இந்த நிலை உறைய வேண்டும் என்று வேண்டுகிறார்.

பாடலில் வரும் “காலன்” என்பது உடல் மரணம் மட்டும் அல்ல;
அது அகங்காரம், அறியாமை, பயம் ஆகியவற்றையும் குறிக்கும்.
பிரம்மசிவ நிலையில் நிலைத்தவனுக்கு காலன் அதிகாரம் இழக்கிறான்.
அதனால் தான் “வெளிநிற்கவே” என்று அருள் வேண்டப்படுகிறது.

இந்த நிலையில் நின்றவன், சக்தியை உள்ளடக்கிய சிவம் தரும் பரமசுகத்தில் திளைத்திருப்பான்.
அது உணர்ச்சிச் சுகமல்ல; மாறாத ஆனந்தம்.
அதனால் அவன் உள்ளம் இளைஞனைப் போல குதூகலமாகவும்,
மார்க்கண்டேயனைப் போல காலத்தால் தொட முடியாத நிச்ச்சலத்திலும் இருக்கும்.


சக்தி–சிவம்
சுழுமுனையில் ஒன்றானால்,
காலனும் மௌனமாக நிற்கிறான்.

இதுவே அபிராமி பட்டர் காட்டிய வழி.
இதுவே யோகம் உணர்த்தும் உண்மை.

அன்புடன்
சி. எஸ். சிவா

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

கற்க கசடற

கற்க கசடற 

மனித வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் வெளிப்புற வெற்றிகள் அல்ல;
உள்ளார்ந்த தெளிவே.
அந்தத் தெளிவுக்கான முதல் படி தான்
“கற்க கசடற” என்ற உன்னதக் கொள்கை.

இந்த ஒரு சொற்றொடர், வழங்கிய ஆன்மீக வழிகாட்டியாகும்.
இது வெறும் கல்வி குறித்த உபதேசம் அல்ல;
ஞானத்தை அடையும் முறையையே சொல்லுகிறது.

கற்றல் என்றால் புத்தகங்களைப் படிப்பது மட்டும் அல்ல.
கேள்வி கேட்பது, சிந்திப்பது,
தன்னுள் நடப்பதை கவனிப்பது —
இவையெல்லாம் சேர்ந்ததே உண்மையான கற்றல்.

ஆனால் அந்தக் கற்றல்
அஹங்காரம், முன்னறிவு,
பாகுபாடு, பிடிவாதம்
இவையால் மாசுபட்டால்
அது அறிவாக மாறாது.

அதனால் தான்
“கசடற” என்று வலியுறுத்தப்படுகிறது.

ஆன்மீகத்தில் கசடு என்றால்
“நான் தெரிந்தவன்” என்ற அகம்பாவம்,
அனுபவம் இல்லாத நம்பிக்கைகள்,
பயம், ஆசை, கோபம் போன்ற
மனக் குழப்பங்களே.

இந்தக் கசடு நீங்கும் வரை
எவ்வளவு கற்றாலும்
அது ஞானமாக மாறாது.

கசடற கற்றவன்
அதிகம் பேச மாட்டான்,
எளிமையாக இருப்பான்,
எல்லோரிடமும் கற்றுக்கொள்வான்,
தன்னைத் தானே கவனிப்பான்.

அவனுக்கு வாழ்க்கையே ஒரு குரு.
ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம்.

உண்மையான ஆன்மீகம்
புதியதைச் சேர்ப்பது அல்ல;
தவறானதை கழிப்பதே.

கற்றுக் கொண்டே இருங்கள்,
ஆனால் ஒவ்வொரு கற்றலிலும்
உங்களைத் தாண்டிச் செல்லுங்கள்.

அப்போது
அறிவு — அனுபவமாகும்;
அனுபவம் — ஞானமாகும்.

அதுவே
“கற்க கசடற”.

அன்புடன்,
சி. எஸ். சிவா

சனி, 24 ஜனவரி, 2026

குறையொன்றுமில்லை

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா !

“குறையொன்றுமில்லை”
என்று மனம் சொல்வது ஒரு வார்த்தை அல்ல.
அது ஒரு ஆன்மீக நிலை.

கண்ணா,
நீ கண்களுக்குப் புலப்படாத மறை மூர்த்தி.
ஆனால் உள்ளத்தின் ஆழத்தில்
நிறைவாக உறையும் நித்ய சாட்சி.

உலகம் எப்போதும்
குறை காட்டிக்கொண்டே இருக்கும்.
இல்லாததை எண்ணச் சொல்லும்,
இழந்ததை நினைவூட்டும்,
எதிர்பார்ப்பை பெருக்கிக்கொள்ளச் செய்யும்.

ஆனால் கண்ணா,
நீ சொல்லும் மௌன மொழி வேறு—

“உனக்கு என்ன இல்லை?”
என்று கேட்பதல்ல,
“உன்னிடம் நான் இருக்கிறேனே”
என்று உணரச் செய்வது.

கண்ணனை தேடுகிறவன்
கோயில்கள் சுற்றுவான்.
கண்ணனை உணருகிறவன்
உள்ளத்திலேயே அமர்வான்.

அங்கே
குறை கரைகிறது.
நிறை பிறக்கிறது.

போர் நிறைந்த குருக்ஷேத்திரத்திலும்
கண்ணன் அமைதியாக இருந்தான்.
ஏனெனில்
அவன் வெளிப்போரில் இல்லை;
உள்ளத்தின் மாயையை
அவன் கடந்திருந்தான்.

நம் வாழ்க்கையும் அப்படித்தான்.
பிரச்சினைகள் தீர வேண்டியதில்லை;
பிரச்சினைகளைப் பார்க்கும்
நம் பார்வை மாறினால் போதும்.

பார்வை மாறும்போது
புகார் மறைகிறது.
நன்றி பிறக்கிறது.
அந்த நன்றியில்
குறை என்ற சொல்லே இல்லாமல் போகிறது.

அப்போது மனம்
ஆழத்திலிருந்து சொல்கிறது—

“குறையொன்றுமில்லை கண்ணா…
நீ உள்ளத்தில் குடியிருக்க,
என்ன குறை?”

இது பக்தியின் உச்சம் அல்ல.
இது ‘நான்’ கரையும் தருணம்.
அகந்தை ஒளியும் பொழுது
அருள் நிறைகிறது.

அந்த நிறைவில்தான்
கண்ணன் தெய்வமாக இல்லை—
நம் உணர்வாக,
நம் மௌனமாக,
நம் சுவாசமாக மாறுகிறான்.

அப்போது தான்
ஆன்மீகம் ஆரம்பமாகிறது.
அப்போது தான்
குறையொன்றுமில்லை
என்ற உண்மை
உயிர் பெறுகிறது.

அன்புடன்,
சி. எஸ். சிவா

வெள்ளி, 23 ஜனவரி, 2026

நீங்கள் நல்லா இருக்கனும் நாடு முன்னேற

நீங்கள் நல்லா இருக்கனும் – நாடு முன்னேற

நீங்கள் நல்லா இருக்கனும்…
இது ஒரு தனிப்பட்ட ஆசை மாதிரி தோன்றலாம்.
ஆனால் உண்மையில்,
இது ஒரு நாட்டின் எதிர்காலத்துக்கான பிரார்த்தனை.

ஒரு மனிதன் நல்லா இருந்தால்
அவன் மனம் சுத்தமாகும்.
மனம் சுத்தமானால்
அவனின் சொல் சீராகும்.
சொல் சீரானால்
செயல் நேர்மையாகும்.
செயல் நேர்மையானால்
அந்த ஒரு வாழ்க்கை மட்டுமல்ல,
அதைச் சுற்றியுள்ள பல வாழ்க்கைகளும்
ஒளி பெறத் தொடங்கும்.

நாடு முன்னேறுவது
பெரிய திட்டங்களால் அல்ல.
பெரிய மேடைகளில் பேசப்படும்
பெரிய வார்த்தைகளாலும் அல்ல.
அது ஆரம்பிக்கிறது
ஒரு சாதாரண மனிதன்
“நான் நல்லா இருக்கனும்”
என்று உள்ளுக்குள் உறுதி கொள்வதில்.

நல்லா இருக்கிறேன் என்பதற்கு
பணம் மட்டும் காரணம் அல்ல.
புகழ் மட்டும் அடையாளம் அல்ல.
உள்ளத்தில் நிம்மதி,
சிந்தனையில் தெளிவு,
செயலில் கருணை —
இவை இருந்தால்
அவனே ஒரு வளர்ச்சியின் மையம்.

ஒரு வீட்டில் ஒருவர் நல்லா இருந்தால்
அந்த வீடு அமைதியாகும்.
ஒரு தெருவில் பலர் நல்லா இருந்தால்
அந்த தெரு பாதுகாப்பாகும்.
ஒரு சமூகத்தில் மனிதர்கள் நல்லா இருந்தால்
அந்த சமூகம் நியாயமாகும்.
அதுவே மெதுவாக
ஒரு நாட்டின் முதுகெலும்பாக மாறும்.

ஆன்மீகம் என்பதும்
உலகத்தை விட்டு ஓடுவது அல்ல.
உலகத்துக்குள் இருந்தே
உள்ளத்தை சீராக்கிக் கொள்வதே.
நான் அமைதியாக இருந்தால்
நான் யாரையும் காயப்படுத்த மாட்டேன்.
நான் நிதானமாக இருந்தால்
நான் அநீதிக்கு இடம் தர மாட்டேன்.
இதுவே ஆன்மீகம் சமூகமாக மாறும் தருணம்.

“நீங்கள் நல்லா இருக்கனும்”
என்று சொல்வது
ஒரு வாழ்த்தல்ல மட்டும்.
அது ஒரு பொறுப்பு.
ஏனெனில்
நீங்கள் நல்லா இருந்தால்தான்
இந்த நாடும் நிம்மதியாக
முன்னேற முடியும்.

நாடு என்பது
ஒரு வரைபடம் அல்ல.
நாடு என்பது
நீங்களும் நானும்.
நாம் நல்லா இருந்தால்
நிச்சயமாக
நாடு முன்னேறும்.

அன்புடன்,
சி எஸ் சிவா

வியாழன், 22 ஜனவரி, 2026

நிதானம் தான் உயர்ந்த தானம்

நிதானம் தான் உயர்ந்த தானம்:

ஆன்மீகப் பாதையில் மனிதன் தேடுவது அமைதியையே. ஆனால் அந்த அமைதிக்கு வழிகாட்டுவது நிதானம் தான். நிதானம் என்பது வெளிப்புற அமைதி அல்ல; அது உள்ளத்தின் சமநிலை ஆகும். சூழ்நிலைகள் எவ்வாறு மாறினாலும் மனம் தடுமாறாமல் இருப்பதே நிதானத்தின் அடையாளம்.

அவசரத்தில் பிறக்கும் சொற்கள் உறவுகளைச் சிதைக்கும்; நிதானத்தில் பிறக்கும் சொற்கள் உறவுகளைச் சீராக்கும். கோபம் எழும்போது அதைக் கட்டுப்படுத்தும் சக்தியும், துன்பம் வந்தபோது அதைத் தாங்கும் பொறுமையும் நிதானத்திலிருந்தே பிறக்கின்றன. இதுவே மனிதனை மனிதனாக்கும் தானம்.

பணம் பொருள் புகழ் என அனைத்தும் காலத்தால் அழியும். ஆனால் நிதானம் உள்ள மனிதன் எங்கு இருந்தாலும் ஒளியாய் விளங்குவான். அவன் வாழ்க்கை பிறருக்குப் பாடமாகும். நிதானம் என்பது ஒருவருக்குள் மட்டும் நிற்கும் செல்வம் அல்ல; அது சுற்றியுள்ளவர்களுக்கும் அமைதியைப் பரப்பும் அருள்தானம்.

ஆன்மீகம் என்பது மலையிலும் மடத்திலும் மட்டும் இல்லை. தினசரி வாழ்க்கையில் நிதானமாக நடப்பதே உயர்ந்த சாதனை. அதனால் தான் சொல்லலாம்—
தானங்களிலே தலைசிறந்த தானம் நிதானம் தான் என்று.

அன்புடன்,
சி எஸ் சிவா

குந்துக்கல் விவேகானந்தர் மடம்

18/01/2026 – என் அனுபவம்

ஞானத்துடன் எவர் வந்தாலும்
அவர் தலையில் கிரீடம் சூட்டி,
அவர் பாதங்களை கையில் ஏந்தி,
வரவேற்று அழகு பார்க்கவே
சூட்சுமமாய் பேராற்றல் கொண்ட
ஆன்மாக்கள் அலைஅலையாய் கூடும்
இடம்…
ராமநாதபுரம் மாவட்டத்தில்,
ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள
குந்துக்கல் விவேகானந்தர் மடம்.
சி. எஸ். சிவா

புதன், 21 ஜனவரி, 2026

திருமந்திரம் 1

திருமந்திரம் – பாடல் 1

பாடல் :

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.

உரைநடை விளக்கம் :

இந்தப் பாடலில், திருமூலர் மனித உடலுக்குள் நிகழும் முழு ஆன்மப் பயணத்தையும் எண்ணிக்கை மொழியில் மறைநூலாக வெளிப்படுத்துகிறார்.
இங்கு ஒன்று முதல் எட்டு வரை கூறப்படுவது கணக்கல்ல; அது அனுபவ நிலைகள்.

ஒன்று – மூலாதாரம் (ஓரிதழ்):
உயிர் உடலோடு உறைந்து நிற்கும் அடிப்படை நிலை.
சக்தி உறங்குகிறது. இருப்பு மட்டும் உள்ளது.

இரண்டு – சுவாதிஸ்டானம் (ஈரிதழ்):
இரட்டை இயக்கம் தொடங்குகிறது.
இன்ப–துன்பம், ஆசை–விருப்பு.
சக்தி விழிப்பெடுக்க ஆரம்பிக்கிறது.

மூன்று – மணிபூரகம் (மூவிதழ்):
செயல், விருப்பு, அறிவு ஆகிய மூன்று குணங்கள் இயங்கும் நிலை.
அக்னி சக்தி வலுப்பெறுகிறது.
சாதகனுக்குள் தன்னம்பிக்கை உருவாகிறது.

நான்கு – அநாகதம் (நாவிதழ்):
உணர்வு விரிவடைகிறது.
கருணை, சமநிலை, உள்ளுணர்வு மலர்கிறது.
‘நான்’ மெலிந்து, உயிர்கள் ஒன்றென உணரும் நிலை.

ஐந்து – விசுத்தி (ஐயிதழ்):
புலன்களின் பிடி தளர்கிறது.
சொல், மனம், உண்மை ஒரே ஓட்டமாகிறது.
நாத அனுபவம் தெளிவாகிறது.

ஆறு – ஆஜ்ஞை (ஈரிதழ், ஒளியுடன்):
அகங்காரம் வெல்லப்படுகிறது.
இருவிழி ஒன்றாகிறது.
உள் ஒளி அனுபவமாகிறது.
குரு அருள் தெளிவாக வெளிப்படும் நிலை.

ஏழு – சகஸ்ராரம் (ஆயிரம் இதழ்):
சக்தி எல்லையற்ற விரிவை அடைகிறது.
தனித்த ‘நான்’ இல்லை.
இருப்பே உணர்வாகிறது.

எட்டு – துரியம் (பிரபஞ்ச விரிவு):
உயிர், சக்தி, சிவம் ஒன்றாகிறது.
அனுபவிப்பவன் இல்லை.
அனுபவமும் இல்லை.
இருப்பு மட்டும்.

அதன் பின் :
முழுமையான வெட்டவெளி.
அங்கே அனுபவம் கூட இல்லை.
வேறொன்றுமில்லை.

இந்த முதல் பாடலிலேயே,
திருமூலர் —
முழு யோகப் பாதையையும்,
முழு ஞானப் பயணத்தையும்
ஒரே செய்யுளில் நமக்கு வெளிப்படுத்தி விடுகிறார்.

துணிச்சல்

துணிச்சலின் பயணம்.

வாழ்க்கை சில நேரம்
கடினக் காற்றாய் மோதும்,
நம்மை சிதறடிக்க நினைக்கும்
சோதனைகளின் வீச்சில்.

விழுந்த இடம் மண்ணல்ல,
எழும் இடம் நம்முள்ளம்,
தோல்வி நம்மை முடிக்காது,
துணிச்சல் தான் நம்மை உருவாக்கும்.

நாம் தப்பித்தவர்கள் அல்ல,
தாங்கி வந்த வீரர்கள்,
வலி கற்றுத் தந்த பாடமே
நம் வலிமையின் மூலவேர்.

வாழ்க்கை எதை எறிந்தாலும்,
அதை தாங்கும் நெஞ்சமுண்டு,
புயலும் பயம் காணும்
நம் மனத் துணிச்சலைக் கண்டு.

இன்று ஒரு புதிய நாள்,
நம்பிக்கை மலரும் நேரம்,
நம் நடை உலகம் காணும்,
நாம் வெல்லும் பாதையை.

சிவா 

பாலமுருகன் எழுதிய கட்டுரை

தாயுமானவர் ஞானசபை அன்பர்கள் அனைவருக்கும்
திருச்செந்தூர் கிளைச் செயலாளர் பாலமுருகன் எழுதிக் கொள்வது…

நமது குருநாதர் நமக்கு கொடுத்த பயிற்சி — பொக்கிஷத்திலும் பொக்கிஷம்.
அவர் அருளிய அந்த பயிற்சியை நாம் தினந்தோறும் செய்து கொண்டே இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் நம் உள்ளத்தில் பல பழைய சுமைகளை மறந்து விடுகிறோம்.

பயிற்சி செய்து முடித்தவுடன்
“நாம் சும்மாதானே இருக்கிறோம்” என்று தோன்றும்.
ஆனால் சும்மா இருப்பதாக நாம் நினைத்தாலும்,
வெளியுலகத்தில் பிறருடன் பேசும்போது,
நம்மையே நாம் கவனிக்கும்போது,
நாம் எவ்வளவு மாறி இருக்கிறோம் என்பதைக் கண்டிப்பாக உணர முடிகிறது.

நம் நடை, நம் பேச்சு, நம் அணுகுமுறை—
எல்லாமே மெதுவாக மாற்றம் அடைகிறது.

ஆனால் இந்த மாற்றத்தை மனம் உடனே ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
ஏனென்றால் இதற்கு முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கை,
இந்த நிலையை அடையும் போது,
“இது சரியா?” என்று மனம் சந்தேகப்பட ஆரம்பிக்கிறது.

உண்மையிலேயே வாழ்க்கை சிறப்பாக மாறுகிறது என்று தெரிந்தாலும்,
மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
பயிற்சியில் அமரும்போதும்,
மனம் ஒத்துழைக்காமல் இருக்கிறது.

ஏனென்றால்—
மனத்திற்கு எப்போதும் ஏதாவது ஒன்று வேண்டும்.
ஆசை, கோபம், பொறாமை,
பிறரை குற்றம் சொல்வது,
அவர்களை தாழ்த்தி, நம்மை உயர்த்திக் காட்டுவது—
இவையெல்லாம் மனத்திற்கு பழகிய உணவு.

ஆனால் இவையனைத்தையும் விட்டு,
அமைதியாக,
எதிர்பார்ப்பில்லாமல்,
உண்மையாக வாழ ஆரம்பித்தால்,
மனம் அதற்கு உடனே ஒத்துழைக்காது.

அதனால் தான்,
அனைவரும் நமது குருநாதர் கொடுத்த பயிற்சியை
தினந்தோறும் தவறாமல் செய்யுங்கள்.
அது மெதுவாக, மெதுவாக,
எல்லா மாசுகளையும் கரைத்து விடும்.

அப்பொழுது வாழ்க்கை உண்மையிலேயே
மிகச் சிறப்பாக மாறும்.
நாம் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும்.

இந்த பயிற்சி—
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு அருள் பொக்கிஷம்.

அதனால்,
நமக்கு கிடைத்த குருநாதரும்,
ஞானசபை அன்பர்களும்—
ஒரே பெரிய குடும்பம்.

இந்த குடும்பத்தில்:
போட்டி இல்லை,
பொறாமை இல்லை,
வஞ்சகம் இல்லை,
கோபம் இல்லை,
எதிர்பார்ப்பும் இல்லை.

அதனால்,
அனைவரும் பயிற்சி செய்யுங்கள்,
இன்பமாய் வாழுங்கள்,
சிறப்பாக வாழுங்கள்.

இப்படிக்கு,
பாலமுருகன்
திருச்செந்தூர் கிளைச் செயலாளர்
தாயுமானவர் ஞானசபை

வியாழன், 15 ஜனவரி, 2026

பொருளாளர் குருபூஜை உரை

தாயுமான சுவாமிகள் – பாடல்

ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த
ஒருமொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த
குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்
கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்

கருமொழியிங் குனக்கில்லை மொழிக்குமொழி ருசிக்கக்
கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங்கண்டனைமேல்
தருமொழியிங் குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத்
தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே.

---

மேடை உரை


அன்பிற்குரிய சபையோர்களே,
இப்போதுதான் நாம் ஒரு ஆழமான பாடலை வாசித்தோம்.
அந்த பாடல் சொல்லும் மையம் ஒன்றே –
குரு மொழி.

இந்த உலகத்தில் பல மொழிகள் இருக்கின்றன.
ஆனால் எல்லா மொழிகளுக்கும் அடிப்படையாக
ஒரே ஒரு மொழி இருக்கிறது.
அது நாவால் பேசும் மொழி அல்ல.
அது இதயத்தால் உணரும் மொழி.
அது தான் குருவின் மொழி.

நாம் நிறைய பேசுகிறோம்.
நிறைய வாதம் செய்கிறோம்.
நிறைய நூல்கள் படிக்கிறோம்.
ஆனால் உள்ளத்தில் இருக்கும்
அகந்தை, ஆசை, பொறாமை, பொய்
இவைகளை எது கழுவுகிறது?
வார்த்தைகள் அல்ல.
வாதங்கள் அல்ல.
அறிவுச் சாகசம் அல்ல.
அதை கழுவுவது குருவின் அருள்.
குருவின் பார்வை.
குருவின் மௌனம்.

அதனால் தான் குரு மொழி
“மலம் ஒழிக்கும் மொழி” என்று சொல்லப்படுகிறது.
அது நம்மை தூய்மையாக்கும்.
அது நம்மை எளிமையாக்கும்.

நாம் “என் கருத்து, உன் கருத்து” என்று
பல கோடுகள் போடுகிறோம்.
அந்த கோடுகளுக்குள் தான்
சண்டை, பகை, வாதம்.
ஆனால் குரு காட்டும் வழி
கோடில்லாத வட்டம்.
அதில் யாரும் பெரியவர் இல்லை,
யாரும் சிறியவர் இல்லை.
அதில் எல்லாரும் பயணிகள்.

உண்மையை அலங்கரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதை இனிப்பாக மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
உண்மை உண்மையாக இருந்தாலே போதும்.
குரு தேடுவது
வார்த்தையின் அழகு அல்ல,
அதற்குள் இருக்கும் சாறு –
அதாவது ஞானம்.

குரு பக்தி என்றால்
வார்த்தைகளில் சிக்குவது அல்ல.
உருவங்களில் சிக்குவது அல்ல.
“நீ இல்லாமல் நான் இல்லை”
என்று உள்ளம் ஒப்புக்கொள்வது தான்.

குரு நம்மை விட்டு நீங்க மாட்டார்.
ஆனால் நாம் தான்
ஆசை, அகந்தை, அலட்சியம் காரணமாக
குருவை விட்டு விலகுகிறோம்.
அதனால் தான் நம் வேண்டுகோள் ஒன்று தான் –
“என்னை விட்டு நீங்காதே.
நான் உன்னை விட்டு விலகிவிடாமல்
என்னை காப்பாற்று.”

இந்த குருபூஜை நாளில்
நாம் அதிகம் பேசாமல்,
உள்ளத்தில் ஒரு உறுதி கொள்ள வேண்டும்.

அந்த உறுதி:
நான் எளிமையாய் வாழ்வேன்.
நான் பொய்யை குறைப்பேன்.
நான் அகந்தையை தளர்த்துவேன்.
குரு காட்டிய வழியில்
ஒரு படி நடந்தாலும் நடப்பேன்.

அதுதான் குருவுக்கு கொடுக்கும்
உண்மையான பூஜை.
அதுதான் குருவுக்கு கொடுக்கும்
உண்மையான காணிக்கை.

குரு அருள் நம்மை
அமைதிக்குக் கொண்டு போகட்டும்.
குரு ஒளி நம்மை
உண்மைக்குக் கொண்டு போகட்டும்.
குரு வழி நம்மை
ஆனந்தத்துக்குக் கொண்டு போகட்டும்.

வாழ்க குரு அருள்!
வளர்க தாயுமானவர் ஞான சபை!

அன்புடன்,
அஜீத் குமார்
பொருளாளர்,
தாயுமானவர் ஞான சபை

விமல் குருபூஜை உரை


பாடல் – 1

சிவன்செய லாலே யாதும் வருமெனத் தெறேன் நாளும்
அவந்தரு நினைவை யெல்லாம் அகற்றிலேன் ஆசை வெள்ளங்
கவர்ந்துகொண் டிழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட்டையோ
பவந்தனை ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவியேனே.

---

பாடல் – 2

பாவியேன் இனியென் செய்கேன் பரமனே பணிந்துன் பாதஞ்
சேவியேன் விழிநீர் மல்கச் சிவசிவ என்று தேம்பி
ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ
சாவிபோஞ் சமயத் தாழ்ந்து சகத்திடைத் தவிக்கின்றேனே.

---

மேடை உரை

தாயுமானவர் ஞான சபை – செயலாளர்
திரு. விமல் பொன்ராஜ்

அன்பிற்குரிய சபையோர்களே,

இப்போதுதான் நாம் “சிவன் செயல்” என்ற பாடலை வாசித்தோம்.
இந்த பாடலில் தாயுமானவர் தன் உள்ளத்தின் உண்மையையே வெளிப்படையாகச் சொல்கிறார்.

“சிவன் செயலால் எதுவும் வரும்” என்று தெரிந்தும்,
அதற்கு எதிராக நான் போராடவில்லை என்றாலும்,
என்னை இழுத்துச் செல்கிறது ஆசை வெள்ளம் என்று அவர் சொல்கிறார்.
உலகம் ஒரு பெரிய ஒழுங்கில் நடக்கிறது என்று தெரிந்தும்,
நான், என் ஆசை, என் விருப்பம் என்ற எண்ணம்
என்னை விடாமல் பிடித்துக் கொள்கிறது.
அந்த ஆசை தான் என்னை பிறவி பிறவியாக இழுத்துச் செல்கிறது.

இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது –
எது தேவை? எது ஆசை?

தேவை என்றால் –
உயிர் வாழ, குடும்பம் நடத்த,
நேர்மையாக வாழ வேண்டிய அளவு.
உணவு, உடை, உறைவிடம், கல்வி, உடல்நலம் –
இவை தேவைகள்.

ஆசை என்றால் –
அதைத் தாண்டி “இன்னும், இன்னும்” என்று ஓடும் மனம்.
பெற்றாலும் திருப்தி இல்லாத நிலை.
போட்டி, ஒப்பீடு, அகந்தை.

தேவை நம்மை வாழ வைக்கும்.
ஆசை நம்மை அடிமையாக்கும்.
தாயுமானவர் சொல்லும் “ஆசை வெள்ளம்”
இந்த அடிமைத்தனத்தைத்தான் குறிக்கிறது.

இரண்டாவது பாடலில் அவர் சொல்கிறார்:
“நெல்லில் சாவியாம் பதர் போன்றவை சமயங்கள்.”
நெல் என்பது உண்மை.
பதர் என்பது ஓடு – வெளிப்புறம்.

சமயம் தவறு இல்லை.
ஆனால் சடங்கு, பெயர், வாதம் இவற்றிலேயே சிக்கி,
உண்மையை மறந்தால்,
நாம் பதரிலே கிடந்து தவிப்பது போலாகிறது.

அதனால் தான் அவர் அழைக்கிறார் –
“பரமனே… சிவசிவ என்று தேம்பி அழைக்கிறேன்.”
இது வாதம் அல்ல.
இது அகந்தை அல்ல.
இது கண்ணீரோடு வரும் சரணாகதி.

இந்த பாடல் நமக்கு சொல்லும் பாடம்:

உலகம் என் விருப்பப்படி நடக்காது.
ஆசை எது, தேவை எது என்று
நாம் தெளிவாக அறிய வேண்டும்.
தேவை வாழ வைக்கும்,
ஆசை அடிமையாக்கும்.
சமயம் வழி மட்டுமே – இலக்கு உண்மை.
அகந்தையால் அல்ல,
தாழ்மையாலும் சரணாகதியாலும் தான்
உண்மை கிடைக்கும்.

எது தேவை, எது ஆசை என்று
நாம் வாழ்வில் தெளிவுபெற்றால்,
ஆசை வெள்ளம் நம்மை இழுக்காது.
சிவன் செயலை ஏற்றுக் கொண்டு,
அகந்தையை குறைத்து,
ஆசையை தணித்து,
உள்ளத்தில் அமைதி கொண்டால்,
அதே வாழ்க்கை
ஞான வாழ்க்கையாக மாறும்.

வாழ்க தாயுமான சுவாமிகள் அருள்!
வளர்க ஞானம்!
குறையுக ஆசை!

அன்புடன்,
விமல் பொன்ராஜ்
செயலாளர்,
தாயுமானவர் ஞான சபை

சிவா இரண்டாம் ஆண்டு துவக்க விழா உரை

அன்பு உள்ளங்களே,

தாயுமானவர் அருளால் இங்கே கூடின ஞான சபை குடும்பத்தாரே,
உங்கள் எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

இன்று நாம எல்லாரும் ஒரு சந்தோஷமான நாள்ல இருக்கோம்.
ஏன்னா – இந்த ஞான சபைக்கு இரண்டாம் ஆண்டு ஆரம்பம்.
இரண்டு வருஷம் என்றது சின்ன காலம் மாதிரி தோணலாம்.
ஆனா ஒரு விதை மண்ணுல விழுந்து, முளைச்சு, வேர் பிடிச்சு,
இப்போ ஒரு மரமா வளர ஆரம்பிச்சிருக்கு அப்படின்னா –
அது பெரிய விஷயம் தான்.

இந்த சபை, வெறும் கூடுற இடமா இருக்கக்கூடாது.
இது மனசு மாறுற இடமா இருக்கணும்.
கோபம் குறையுற இடமா இருக்கணும்.
அமைதி அதிகரிக்குற இடமா இருக்கணும்.

நாம எல்லாரும் வாழ்க்கைய ஓட்டிக்கிட்டிருக்கோம்.
காலை எழுந்தா வேலை,
பிறகு ஓட்டம், கவலை, பணம், உறவு, பொறுப்பு –
எல்லாம் கலந்த வாழ்க்கை.

ஆனா ஒருநாள் உட்கார்ந்து யோசிச்சா ஒரு கேள்வி வரும் –
நாம ஓடுறோம்… ஆனா எங்க?
நாம தேடுறோம்… ஆனா என்ன?

உண்மையா சொன்னா,
நாம நினைக்கிற மாதிரி வாழ்க்கைய நாம நடத்தல.
ஒரு சக்தி நம்மள நடத்துது.
நாம சுவாசிக்கிறதே நம்ம கையில இல்ல.
அது நமக்கு கிடைக்கிற அருள்.

அந்த அருளுக்கு நாம கைம்மாறு கொடுக்க முடியாது.
ஆனா நாம மாறலாம்.
கோபத்தைக் கொஞ்சம் குறைக்கலாம்.
பொறாமையை விட்டுவிடலாம்.
அடுத்தவனைப் புரிஞ்சுக்க பழகலாம்.
அதுதான் அருளுக்கு நாம கொடுக்குற பதில்.

நம்ம பிரச்சினை வெளியில இல்லை.
உள்ளே தான்.
வெளியில் உலகம் எப்பவும் சத்தம் போடும்.
ஆனா உள்ளே சத்தம் இல்லாம இருக்கணும்.
உள்ளே அமைதி இருந்தா,
வெளியில யாராலும் நம்ம உடைக்க முடியாது.

அமைதி என்றது பேசாம இருக்கறது மட்டும் இல்ல.
உள்ளே கலக்கம் இல்லாம இருக்கறது தான்.

நாம வாழுறோம் அப்படின்னு நினைக்கிறோம்.
ஆனா உண்மையா சொன்னா,
நாம அழைக்கப்பட்டதால தான் வாழுறோம்.
ஒரு நொடி அந்த அழைப்பு நிறுத்தப்பட்டா,
இந்த உடல், இந்த பெயர், இந்த பதவி, இந்த உறவுகள் –
எல்லாம் நிழலா போயிடும்.

இத நினைச்சா,
அகந்தை குறையும்.
“நான் பெரியவன்”ன்னு நினைக்குறது தளரும்.
மனசு பணிவா ஆகும்.

நம்ம மனசு ஒரு பானை மாதிரி.
அதுல நாம என்ன ஊத்துறோமோ,
அதே தான் வெளில வரும்.
கோபம் ஊத்தினா – காயம் வரும்.
அன்பு ஊத்தினா – ஆறுதல் வரும்.

அதனால தான்,
உலகத்த மாற்றுறதுக்கு முன்னாடி,
நம்மள நாம மாற்றணும்.
நம்ம மாறினா,
உலகம் தானே மாறும்.

பயம் தான் நம்ம அடிமையாக்குது.
இழந்துடுவோமோன்னு பயம்.
தோத்துடுவோமோன்னு பயம்.
மரணம் பற்றின பயம்.

ஆனா ஒருத்தன் மனசார சரணடைஞ்சுட்டா,
அவனுக்கு பயம் இருக்காது.
ஏன்னா “நான்”ன்னு பிடிச்சிருந்தத விட்டுட்டான்.
இனிமே காப்பாத்த ஒண்ணுமே இல்ல.
அதனால தான் அவன் சுதந்திரன்.

துன்பம் தண்டனை இல்ல.
அது பாடம்.
வலி சாபம் இல்ல.
அது விழிப்பு.

நம்மள காயப்படுத்த வந்தது இல்ல துன்பம்.
நம்மள நினைக்க வைக்க வந்தது தான் துன்பம்.
அத புரிஞ்சுக்கிட்டா,
துன்பமும் நம்ம நண்பனாகிடும்.

உலகத்துல நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு.
இன்பமும் இருக்கு, துன்பமும் இருக்கு.
ஆனா அறிவு இருந்தா,
கெட்டதும் நமக்கு கற்றுக்கொடுக்கும்.
துன்பமும் நம்மை உயர்த்தும்.

அறிவு இல்லனா,
இன்பமே கூட நம்மள அடிமையாக்கும்.

உலகம் ஓடிக்கிட்டே இருக்கு.
நாமும் ஓடிக்கிட்டே இருக்கோம்.
ஆனா அந்த ஓட்டத்தையே நடத்துற சக்திய,
நாம மறந்துடுறோம்.

ஒரு நிமிஷம் நின்று நினைச்சா போதும் –
ஓட்டம் மெதுவாகும்.
மனம் சாந்தமாவும்.
வாழ்க்கை தெளிவாகும்.

உலக அழகு நிழல் மாதிரி.
இன்று இருக்கு, நாளை இல்ல.
இன்று கவரும், நாளை விலகும்.

ஆனா அருள் மட்டும் நிலை.
அமைதி மட்டும் உண்மை.
அன்பு மட்டும் அழியாதது.

இந்த ஞான சபை,
பெயருக்காக இல்ல,
போஸ்டருக்காக இல்ல,
பெருமைக்காக இல்ல.

மனசு மாறணும்.
வாழ்க்கை மாறணும்.
நடத்தை மாறணும்.

இந்த இரண்டாம் ஆண்டுல,
நாம எண்ணிக்கையில இல்ல,
உள்ளத்துல வளரணும்.
சத்தத்துல இல்ல,
அமைதியில வளரணும்.
பெருமையில இல்ல,
பணிவில வளரணும்.

தாயுமானவர் அருள்,
நம்ம வாழ்வா மாறட்டும்.
அமைதி நம்ம சுவாசமா மாறட்டும்.
அன்பு நம்ம அடையாளமா மாறட்டும்.

உங்கள் எல்லாருக்கும்
என் அன்பும்,
அருளும்,
மனமார்ந்த வாழ்த்துகளும்.

அன்புடன்,
சி. எஸ். சிவா

சிவா குருபூஜை விழா உரை

தாயுமான சுவாமிகள் அருளிய பாடல் 

பூத லயமாகின்ற மாயைமுத லென்பர்சிலர்
  பொறிபுலன் அடங்குமிடமே
பொருளென்பர் சிலர் கரண முடிவென்பர் சிலர் குணம்
  போனஇட மென்பர்சிலபேர்

நாதவடிவென்பர் சிலர் விந்துமய மென்பர்சிலர்
  நட்டநடு வேயிருந்த
நாமென்பர் சிலர் உருவமாமென்பர் சிலர்கருதி
  நாடில் அருவென்பர்சிலபேர்

பேதமற வுயிர்கெட்ட நிலையமென் றிடுவர் சிலர்
  பேசில்அரு ளென்பர்சிலபேர்
பின்னும்முன் னுங்கெட்டசூனியம தென்பர்சிலர்
  பிறவுமே மொழிவர்இவையால்

பாதரச மாய்மனது சஞ்சலப் படுமலால்
  பரமசுக நிட்டை பெறுமோ
பார்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
  பரிபூர ணானந்தமே.

---


அருள்மிகு தாயுமான சுவாமிகளின் குருபூஜை விழாவில்
கூடியிருக்கும் அன்பு உள்ளங்களே,
அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.

இப்போது நாம் வாசித்து நீங்கள் கேட்ட இந்தப் பாடல்,
ஒரு கவிதைச் செய்யுள் மட்டும் அல்ல.
மனித மனத்தின் தேடல்,
அந்த தேடலில் வரும் குழப்பம்,
அதற்கும் அப்பால் இருக்கும் உண்மைச் செய்திகள்–
இதையெல்லாம் காட்டும் ஒரு ஆன்மிக வரைபடம் ஆகும்.

“பூதலயமாகின்ற மாயை முதல் என்பர் சிலர்…”
சிலர் சொல்கிறார்கள் – இந்த உலகமே கடவுள்.

சிலர் சொல்கிறார்கள் – புலன்கள் அடங்கும் இடமே கடவுள்.

சிலர் சொல்கிறார்கள் – அறிவு முடியும் இடமே கடவுள்.

சிலர் சொல்கிறார்கள் – குணங்கள் எல்லாம் ஒடுங்கும் இடமே கடவுள்.

ஒவ்வொருவரும் தன் அனுபவத்தின் அளவுக்கு
கடவுளை வரையறுக்க முயல்கிறார்கள்.

உண்மை ஒன்று தான் –
விளக்கங்கள் தான் பல.

“நாதவடிவென்பர் சிலர்…
விந்து மயமென்பர் சிலர்…
உருவம் என்பர் சிலர்…
அருவென்பர் சிலர்…”

சிலர் கடவுளை ஒலியாகச் சொல்கிறார்கள்.
சிலர் சக்தியாகச் சொல்கிறார்கள்.
சிலர் உருவமாகச் சொல்கிறார்கள்.
சிலர் உருவமற்றதாகச் சொல்கிறார்கள்.

உருவம் – உருவமற்றது என்று
சண்டை போட தேவையில்லை.
உண்மை – இந்த இரண்டையும் கடந்தது.

“பேதமற உயிர்கெட்ட நிலையம்…”
சிலர் சொல்கிறார்கள் –
எல்லா வேறுபாடும் போய்,
“நான்” என்பதும் இல்லாமல்,
உயிரே ஒடுங்கும் நிலை தான் உண்மை.

சிலர் அதை “அருள்” என்பார்கள்.
சிலர் “சூனியம்” என்பார்கள்.
சிலர் “பிறப்பற்ற நிலை” என்பார்கள்.

ஒரே கடலுக்கு பல பெயர்கள் இருப்பது போல,
ஒரே உண்மைக்கு பல பெயர்கள்.

தாயுமான சுவாமிகள் எச்சரிக்கிறார் –
பெயருக்காக சண்டை போடாதீர்கள்.
மொழிக்காகப் பிரியாதீர்கள்.
அனுபவத்தையே நோக்குங்கள்.

பிறகு அவர் கேட்கிறார்:

“பாதரசமாய் மனது சஞ்சலப்படுமலால்
பரமசுக நிட்டை பெறுமோ?”

மனம் ஒரு இடத்தில் நிற்காமல்
எங்கும் ஓடிக்கொண்டே இருந்தால்,
நாம் எப்படி நிலையான ஆனந்தத்தை பெற முடியும்?

இன்று மனம் எங்கே?
பணம் – ஒரு பக்கம்,
புகழ் – ஒரு பக்கம்,
போட்டி – ஒரு பக்கம்,
கவலை – ஒரு பக்கம்.
அதனால் அமைதி இல்லை.

மனத்தை ஒரே இடத்தில் நிறுத்து.
பிரிவை விட்டுவிடு.
ஒப்பிடுவதை நிறுத்து.
அப்போது தான் உண்மை தெரியும்.

அதனால் அவர் முடிவில் சொல்கிறார்:

“பார்க்குமிடம் எங்கும்
ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே…”

எங்கு பார்த்தாலும் ஒரே உண்மை.
நான் – நீ – அவன் என்ற பிரிவு இல்லாத நிலை.
அனைத்திலும் ஒரே ஒளி தெரிகிற நிலை.
அதுவே பரிபூரண ஆனந்தம்.

அன்புள்ள சகோதரர்களே,

ஞானம் என்றால்
அதிகம் பேசுவது அல்ல.
மனத்தை அமைதியாக்குவது.

ஞானம் என்றால்
மற்றவரை குறை சொல்லாமல்,
தன்னைத் திருத்திக் கொள்வது.

ஞானம் என்றால்
“என் மதம் பெரியது” என்று சொல்லுவது அல்ல.
“மனிதன் பெரியவன்” என்று உணர்வது.

இந்த ஞான விழாவில்
நாம் ஒரு தீர்மானம் எடுப்போம்:

– சண்டையை குறைப்போம்.
– அகம்பாவத்தை குறைப்போம்.
– பிரிவை குறைப்போம்.
– அன்பை அதிகரிப்போம்.
– அமைதியை வளர்ப்போம்.

அதுவே தாயுமான சுவாமிகளின் வழி.
அதுவே உண்மையான ஞான விழிப்புணர்வு.

வாழ்க தாயுமான சுவாமிகள் அருள்!
வளர்க ஞான ஒளி!
அனைவருக்கும் என் நன்றியும் வணக்கமும்.

அன்புடன்,
சி. எஸ். சிவா

தியானத்தின் முன்னர்

தாயுமான சுவாமிகள் அருளிய இந்தப் பாடலை
முழு உணர்வோடு ஒருமனதாகக் கூறிய பின்,
அமைதியாக தியானத்தில் ஈடுபட வேண்டும்.

பொருள் வணக்கம் செய்வோம்.

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய் தூரமுமாய் சமீபமுமாய்த் துரியநிறை
சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக் கெட்டாச்
சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
சிந்தை செய்வாம்

மாணிக்கவாசகர் பாடல்

பாடல் :

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதேபொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்புழுத்தலைப் புலையனேன் றனக்குச்செம்மையே ஆய சிவபதம் அளித்தசெல்வமே சிவபெருமானேஇம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்எங்கெழுந்தருளுவ தினியே.

— மாணிக்கவாசகர்


உரைநடை விளக்கம்

இந்தப் பாடலில் மாணிக்கவாசகர், இறைவனை மட்டும் அல்ல; இறைவனை அறியச் செய்த குருநாதரையும் உள்ளடக்கியே புகழ்கிறார். அவருடைய பார்வையில், இறைவன் மூல உண்மை; குருநாதர் அந்த உண்மையை மனிதனுக்குத் தெளிவாக்கும் அருள் வடிவம்.

“அம்மையே அப்பா ஒப்பிலா மணியே, அன்பினில் விளைந்த ஆரமுதே” என்ற வரிகளில், இறைவனை தாய், தந்தை, ஒப்பற்ற மணியாகவும், அன்பில் இருந்து பிறந்த அமுதமாகவும் அழைக்கிறார். இதே உணர்வோடு, குருநாதரும் வாழ்க்கையில் தாய் போலக் காத்தவர், தந்தை போல வழி காட்டியவர், ஆன்மீகப் பயணத்தின் அரிய மணியாக இருந்தவர் என்பதும் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

“பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும், புழுத்தலைப் புலையனேன்” என்று தன்னைத் தாழ்த்திப் பேசுகிறார். உலக மாயையில் சிக்கி, நேரத்தை வீணாக்கிய தன்னை, இறைவனும் குருநாதரும் கருணையுடன் திருத்தினார்கள் என்பதே இதன் உட்கருத்து.

“செம்மையே ஆய சிவபதம் அளித்த” என்ற வரியில், “சிவபதம் அளித்த” என்பது முக்கியம். அந்த உயர்ந்த நிலை, குருநாதரின் உபதேசம், வழிகாட்டல், அனுபவப் பாதை மூலமாகவே கிடைத்தது. ஆகவே, சிவபெருமானைச் சொல்லிக்கொண்டே, அந்த சிவனின் அருளை மனித வடிவில் கொண்டு வந்த குருநாதரையும் அவர் நினைவில் வைத்திருக்கிறார்.

“இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்” என்ற வரி, இறைவன்–குரு இருவரும் வேறு அல்ல, ஒரே தத்துவம் என்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. வெளியில் குருவாக வந்தவர், உள்ளார்ந்த உண்மையில் சிவனே; சிவனின் கருணை தான் குருவாக வெளிப்பட்டது.

முடிவாக, இந்தப் பாடல்,
இறைவன் – அருளின் மூலாதாரம்,
குருநாதர் – அந்த அருளின் செயல்படும் வடிவம்,
என்று மாணிக்கவாசகர் உணர்ந்ததை வெளிப்படுத்துகிறது.
அவர் இறைவனைப் புகழும் போதே, இறைவனை அறியச் செய்த குருநாதரின் கருணையையும் சேர்த்தே புகழ்கிறார்.

சி எஸ் சிவா

புதன், 14 ஜனவரி, 2026

காகம் பறந்தாலும் மேகம் மிதந்தாலும் ஆகாயம் தான் அழுக்காகாது.

காகம் பறந்தாலும் மேகம் மிதந்தாலும் ஆகாயம் தான் அழுக்காகாது!.


உலகத்தில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன. நல்லதும் நடக்கிறது, கெட்டதும் நடக்கிறது. மனிதர்கள் பேசுகிறார்கள், பழிக்கிறார்கள், புகழ்கிறார்கள், தூற்றுகிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் ஒரு உண்மை இருக்கிறது. அதுதான் — “காகம் பறந்தாலும் மேகம் மிதந்தாலும் ஆகாயம் தான் அழுக்காகாது.”

ஆகாயம் என்பது எல்லாவற்றையும் தாங்கிக்கொள்கிறது. காகம் பறந்தால் அதனால் ஆகாயம் கெட்டுப் போகிறதா? மேகம் கருப்பாக வந்தால் ஆகாயத்தின் சுத்தம் குறையுமா? இல்லை. ஆகாயம் எப்போதும் ஆகாயமே. அது எதனாலும் களங்கமடைவதில்லை.

அதே போல தான் உண்மையான ஞானியின் உள்ளமும். உலகம் எத்தனை விதமாக பேசினாலும், எத்தனை வகை குற்றச்சாட்டுகள் வந்தாலும், அவன் உள்ளம் அசையாது. அவன் உள்ளம் ஆகாயம் போன்றது. வார்த்தைகள் காகங்கள் போல பறக்கலாம். எண்ணங்கள் மேகங்கள் போல வந்து போகலாம். ஆனால் அந்த உள்ளத்தின் இயல்பு மாறாது.

மனிதன் பெரும்பாலும் பிறர் சொல்வதிலேயே தன்னை இழக்கிறான். ஒருவர் குறை சொன்னால் உடனே மனம் கலங்குகிறது. ஒருவர் புகழ்ந்தால் மனம் பறக்கிறது. இதெல்லாம் காகத்தின் பறப்பையும், மேகத்தின் மிதப்பையும் பார்த்து ஆகாயம் மாறுகிறது என்று நினைப்பதுபோல தான். உண்மையில் ஆகாயம் மாறுவதில்லை. மாறுவது நமது பார்வை.

ஆன்மீகம் என்பதின் சாரம் இதுவே. “நான் யார்?” என்று உணர்வது. நான் உடலல்ல, நான் பெயரல்ல, நான் புகழும் அல்ல, நான் பழியும் அல்ல. நான் இவையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் சாட்சியாய் இருக்கிறேன். அந்த சாட்சியின் இயல்பு ஆகாயம் போன்றது — தூய்மை, அமைதி, எல்லையற்ற தன்மை.

காகம் போல குற்றச்சாட்டுகள் வரலாம். மேகம் போல துக்கம், கோபம், ஆசை, பயம் எல்லாம் வந்து மறைக்கலாம். ஆனால் அவை எல்லாம் தற்காலிகம். ஆகாயம் நிரந்தரம். அதுபோல, மனத்தின் மேற்பரப்பில் அலைகள் எழலாம். ஆனால் உள்ளத்தின் ஆழத்தில் அமைதி எப்போதும் இருக்கிறது.

ஞானம் என்றால் உலகத்திலிருந்து ஓடிப்போவது அல்ல. உலகத்தின் நடுவே இருந்து, உலகம் தன்னை தொட்டதாக எண்ணாமல் வாழ்வதே ஞானம். காகம் பறந்தாலும், “என்னை மாசுபடுத்திவிட்டது” என்று ஆகாயம் நினைப்பதில்லை. மேகம் மிதந்தாலும், “என்னை மூடிவிட்டது” என்று ஆகாயம் வருந்துவதில்லை. அது எல்லாவற்றையும் அனுமதிக்கிறது, ஆனால் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.

நாமும் அப்படியே வாழ கற்றுக்கொள்ள வேண்டும். யார் என்ன சொன்னாலும், அது அவர்களின் மனநிலையின் வெளிப்பாடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது நம்மை வரையறுக்காது. நமது உண்மையான இயல்பு அமைதி, அன்பு, தெளிவு. அதை யாராலும் களங்கப்படுத்த முடியாது.

ஆகாயம் போல இருக்க கற்றுக்கொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும். புகழும் நம்மை உயர்த்தாது, பழியும் நம்மை தாழ்த்தாது. இரண்டும் கடந்து போகும் காகங்களும் மேகங்களுமே. நாம் ஆகாயம் — எப்போதும் தூய்மை, எப்போதும் விரிவானது, எப்போதும் அமைதியானது.

அதனால் தான் சொல்லப்படுகிறது:
காகம் பறந்தாலும் மேகம் மிதந்தாலும் ஆகாயம் தான் அழுக்காகாது.

அதே போல, உண்மையை அறிந்த ஞானியின் உள்ளமும் எதனாலும் களங்கமடையாது.

சி எஸ் சிவா

செவ்வாய், 13 ஜனவரி, 2026

உள்ளதைச் சொல்வேன்

உள்ளதைச் சொல்வேன், நல்லதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது!

இந்த வாக்கியம் ஒரு முழு வாழ்க்கை தத்துவம். இது சொல் அலங்காரம் அல்ல; ஆன்மாவின் நேர்மையான குரல். மனிதன் வெளியில் பல வேடங்களை அணிகிறான். ஆனால் ஆன்மீகப் பாதையில் வேடம் இல்லை. அங்கே உள்ளம், சொல், செயல் – மூன்றும் ஒன்று ஆக வேண்டும்.

“உள்ளதைச் சொல்வேன்” என்பதன் பொருள் பிறரை காயப்படுத்துவது அல்ல. உண்மையை அன்போடு பேசுவது. அகம்பாவமின்றி, ஆணவமின்றி, கருணையோடு சொல்லப்படுகிற உண்மை தான் ஞானத்தின் மொழி. கத்தி போல் குத்தும் உண்மை ஞானம் அல்ல; அது அகங்காரம். மலர் போல் மணம் வீசும் உண்மை தான் ஆன்மீகம்.

உண்மையைப் பேசும் பழக்கம் மனிதனை வெளியில் எளியவனாக காட்டலாம். உலகம் அவனை “நேர்மை அதிகம்” என்று சிரிக்கலாம். ஆனால் அந்த நேர்மை தான் உள்ளத்தின் சுத்தம். உள்ளம் சுத்தமானால் தான் இறைவன் குடியிருப்பான்.

“நல்லதைச் செய்வேன்” என்பது பெரிய சாதனைகள் செய்வதல்ல. ஒரு புன்னகை, ஒரு கருணை பார்வை, ஒரு நேர்மையான செயல் – இவை எல்லாம் நன்மை. நல்லது செய்ய வேண்டும் என்று திட்டமிடத் தேவையில்லை. நல்லது ஆகி விட்டால், செயல்கள் தானாகவே நல்லதாகும். சூரியன் வெளிச்சம் கொடுக்க முயற்சி செய்வதில்லை; அது இயல்பாகவே ஒளிர்கிறது. அதுபோல ஞானி நல்லதைச் செய்ய முயற்சி செய்வதில்லை; அவன் இயல்பே நன்மை.

நன்மை விளம்பரத்திற்காக செய்யப்படும்போது அது வணிகமாகி விடுகிறது. ஆன்மீகத்தில் நன்மை ஒரு கடமை அல்ல; அது உள்ளத்தின் இயல்பு.

“வேறொன்றும் தெரியாது” என்பது அறியாமை அல்ல. அது கபடம் தெரியாத தன்மை. பொய் பேசத் தெரியாது, சூழ்ச்சி செய்யத் தெரியாது, வேஷம் போடத் தெரியாது – இந்த “தெரியாத” தனமே ஆன்மாவின் தூய்மை. உலகம் கற்றுக் கொடுக்கும் பல விஷயங்கள் மனிதனை புத்திசாலியாக்கலாம்; ஆனால் அவை அவனை தூயவனாக்காது. தூய்மை என்பது மறப்பில் இல்லை; எளிமையில் இருக்கிறது.

உள்ளம் ஒன்றாகவும், சொல் வேறாகவும், செயல் வேறாகவும் இருக்கும்போது மனிதன் உடைந்த நிலையில் வாழ்கிறான். அந்த உடைதலே துக்கத்தின் காரணம். உள்ளம்–சொல்–செயல் மூன்றும் ஒன்றாகும் போது மனிதன் முழுமை அடைகிறான். அந்த முழுமையே ஆன்மீக நிலை.

“உள்ளதைச் சொல்வேன், நல்லதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது” என்று வாழ்பவன் உலகத்தில் தோற்றவன் போல தோன்றலாம். ஆனால் அவன் தான் உண்மையில் வென்றவன். அவன் வெளி உலகத்தை வெல்லவில்லை; ஆனால் தன்னையே வென்றவன். தன்னை வென்றவன் தான் உண்மையான ஞானி.

ஆன்மீகம் என்பது கோயிலில், மடத்தில், நூல்களில் மட்டும் இல்லை. அது தினசரி வாழ்க்கையில், நாம் பேசும் வார்த்தையில், செய்யும் செயல்களில் இருக்கிறது. நேர்மை, நன்மை, எளிமை – இந்த மூன்றும் சேர்ந்த இடமே ஆன்மீகம்.

இந்த மூன்றையும் வாழ்க்கையாக மாற்றியவன், வேறு எந்த யோகமும் செய்ய வேண்டியதில்லை. அவனது வாழ்க்கையே யோகம். அவனது நடத்தை தான் தியானம். அவனது நேர்மை தான் பூஜை.

அன்புடன்,
சி எஸ் சிவா

சிவவாக்கியர் பாடல் 49

சிவவாக்கியர் பாடல் 49.

"அறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?"

உரைநடை விளக்கம்:

 


 

சிவவாக்கியர் பாடல் 5

சிவவாக்கியர் பாடல் – 5

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாதம் உண்மையே.

உரைநடை விளக்கம்:

மனித உடலில் ஓடும் உயிர்ச் சுவாசம் (வாயு) சில முக்கியமான நாடிகள் வழியாகச் செல்கிறது. அந்த உயிர்வாயுவை மன ஒருமைப்பாட்டால் கட்டுப்படுத்தி, உள்ளே அடக்கி வைத்து, தலை உச்சி வரை (கபாலம்) ஏற்றக்கூடிய யோகத் திறன் ஒருவருக்கு இருந்தால்,

அந்த நிலையில் முதியவர்கள்கூட இளமை பெறுவார்கள். உடலும் மனமும் புத்துணர்ச்சியடையும். மேனி ஒளிவீசும்; உள்ளார்ந்த சக்தி வெளிப்படும்.

இந்த உயர்ந்த யோக நிலையை அடைய வழிகாட்டியவர் குருநாதர் – அதாவது குரு, சிவம். அவருடைய திருவடிகளே நம்மை காத்து வழி நடத்தும் தாய் பாதம் போன்ற உண்மையான அடைக்கலம்.

அன்புடன்,
சி எஸ் சிவா

திங்கள், 12 ஜனவரி, 2026

சிவவாக்கியர் பாடல் 152

சிவவாக்கியர் பாடல் – 152

ஈணெருமை யின்கழுத்தி லிட்டபொட்ட ணங்கள்போல்
மூணுநாலு சீலையில் முடிந்தவிழ்க்கும் மூடர்காள்
மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணியூணி நீர்முடிந்த வுண்மையென்ன வுண்மையே.

உரைநடை விளக்கம்:

கன்று ஈன்ற எருமை மாட்டின் கழுத்தில்,
கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக
மூன்று பொட்டணங்களை வைத்து முடிச்சுப் போட்டு வைப்பார்கள்.
அதுபோலவே சிலர் குளிக்கும்போது
ஒரு துண்டில் மூன்று முடிச்சுப் போட்டு
கழுத்தில் போட்டுக்கொண்டு தண்ணீரில் மூழ்குவார்கள்.

பின்னர் அந்த முடிச்சுக்களை அவிழ்த்துத்
தண்ணீரிலே போட்டுவிட்டு,
“முன்ஜென்மம், இந்த ஜென்மம், மறுஜென்மம்”
என்ற முப்பிறவிகளின் கர்மவினையை
தொலைத்துவிட்டேன் என்று சொல்வார்கள்.
“ஆணவம், கன்மம், மாயை” என்ற
மும்மலங்களையும் விட்டுவிட்டேன் என்றும்
விளக்கம் சொல்லுவார்கள்.

ஆனால் உண்மையில்
இந்த மாதிரி முடிச்சு அவிழ்த்தால்
ஆணவம் அகலுமா?
கர்மம் கரையுமா?
மாயை விலகுமா?

ஏழு உலகங்களையும் தாண்டி,
ஆதியும் அந்தமும் இல்லாத
அநாதியான ஈசன்,
எந்த முடிச்சுக்குள்ளும் அடங்காதவன்.
எந்த சடங்குக்குள்ளும் சுருங்காதவன்.

அந்த ஈசனை
வெளியில் தேடாதே.
உன் ஊண் உடம்புக்குள்ளே,
உன் உள்ளத்திலே உணர்ந்து பார்.
அவனில் ஊன்றி நில்.

அறிவு, உணர்வு, மனம்
இந்த மூன்றையும் அவனிலே முடித்து,
உள்ளம் ஒருமுகமாக தியானி.

அப்பொழுது
மும்மலங்களும் தானே விலகும்.
மூவினைகளும் தானே கரையும்.
இதுதான் சடங்கால் கிடைக்காத
உண்மையான வழி.
இதுவே –
இறைவனை உண்மையாக அடையும் பாதை.

அன்புடன்,
சி எஸ் சிவா

பணம் புகழ் அதிகாரம்

பணம் புகழ் அதிகாரம்:

யாரிடம் பணம், புகழ், அதிகாரம் பற்றிய எண்ணங்கள் நிறைந்து இருக்கிறதோ, அவர்களிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது என்ற வார்த்தை கடுமையாகத் தோன்றினாலும், அதில் ஒரு ஆழமான உண்மை மறைந்திருக்கிறது. மனிதன் இயல்பாகவே அன்பிற்காகத்தான் பிறக்கிறான். ஆனால் அவன் மனம் ஆசை, அகம்பாவம், பெருமை என்ற மூன்றால் நிரம்பும்போது, அந்த அன்பு மெதுவாக ஒளிந்து போய்விடுகிறது.

பணம் வாழ்க்கைக்கு தேவையானது. ஆனால் அது வாழ்க்கையின் இலக்கு ஆகிவிட்டால், மனிதன் மனிதனாக இல்லை; ஒரு இயந்திரமாக மாறிவிடுகிறான். காலை முதல் இரவு வரை கணக்கு, லாபம், போட்டி, வெற்றி என்ற எண்ணங்களே அவனை இயக்குகின்றன. அவன் சிரிக்கலாம், பேசலாம், மக்களோடு இருக்கலாம்; ஆனால் அந்த எல்லாவற்றிலும் உள்ளம் இல்லை. உணர்வு இல்லை. அன்பு இல்லை. வெளியே மனிதன் போல இருந்தாலும், உள்ளே இயந்திரம் போல வாழ்கிறான்.

புகழும் அதிகாரமும் இதைவிட ஆபத்தானவை. புகழ் வந்தால் மனிதன் தன்னை மற்றவர்களைவிட உயரமாக நினைக்க ஆரம்பிக்கிறான். அதிகாரம் வந்தால், மற்றவர்களை தன் கீழே உள்ளவர்கள் என்று பார்க்க ஆரம்பிக்கிறான். இந்த உயர்வு–தாழ்வு எண்ணம் உள்ளத்தில் வந்தவுடனே, அன்பு அங்கிருந்து வெளியேறிவிடுகிறது. ஏனென்றால் அன்பு சமத்துவத்தை விரும்புகிறது. அகம்பாவம் வேற்றுமையை விரும்புகிறது. இரண்டும் ஒரே இடத்தில் வாழ முடியாது.

“கல்லறைகளால் அன்பை அறிந்து கொள்ள முடியாது” என்பதில் பெரிய உண்மை இருக்கிறது. கல்லறை அமைதியாக இருக்கும்; ஆனால் அந்த அமைதி உயிருள்ள அமைதி அல்ல. அது உணர்வில்லாத அமைதி. அதுபோல, ஆசை மற்றும் அகம்பாவத்தில் உறைந்த மனமும் வெளியே அமைதியாக இருக்கலாம்; ஆனால் அதில் உயிரின் வெப்பம் இல்லை. அந்த மனத்தில் இருந்து அன்பு பிறக்க முடியாது.

அன்பு பிறக்க வேண்டுமென்றால், மனம் காலியாக வேண்டும். “நான் பெரியவன், நான் மேலானவன், நான் அதிகம் வைத்தவன்” என்ற எண்ணங்கள் கரைய வேண்டும். பிறரின் துயரத்தை தன் துயரமாக உணரக் கூடிய உள்ளம் உருவாக வேண்டும். அதற்குப் பணம் தடையாகும், புகழ் தடையாகும், அதிகாரம் தடையாகும் – அவை மனத்தை நிரப்பிக் கொண்டால்.

உண்மையான செல்வம் அன்புதான். உண்மையான புகழ் மனிதராய் இருப்பதுதான். உண்மையான அதிகாரம் பிறரின் உள்ளத்தை காயப்படுத்தாமல் வாழ்வதுதான். இவற்றை உணர்ந்தவன் பணம் வைத்திருந்தாலும் அதில் அடிமையாக மாட்டான். புகழ் வந்தாலும் அதில் மயங்க மாட்டான். அதிகாரம் இருந்தாலும் மனிதத்தன்மையை இழக்க மாட்டான்.

ஆகவே, அன்பை விரும்பும் மனிதன், முதலில் தன் உள்ளத்தை காலியாக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆசை, அகம்பாவம், பெருமை இவற்றை மெதுவாக விட வேண்டும். அப்போதுதான் மனிதன் இயந்திரம் அல்லாமல், உணர்வுள்ள உயிராக வாழ முடியும். அப்போதுதான் அவன் வாழ்வில் அன்பு மலர முடியும்.

அன்புடன்,
சி எஸ் சிவா

வெள்ளி, 9 ஜனவரி, 2026

ஞானப் பாடல் சி எஸ் சிவா

அன்புள்ள சீடனே,

ஞான உபதேசம்

உன்னை உனக்கு காட்டுவதே
என் வேலை.

என்னை எனக்கு காட்டியவரும்
அவரை எனக்கு காட்டவில்லை;
ஆனால்
நான் அவரானேன்,
அவர் நானானார்.

இது
கண்ணால் காணும் காட்சியல்ல,
கரைந்து போகும் அனுபவம்.

குரு சீடனாக நிற்பதில்லை;
சீடன் குருவாக மாறுவதுமில்லை.
இருவரும்
தங்கள்தங்களை இழந்தபோது
ஒன்றே ஒன்று
மட்டுமே மிஞ்சும்.

நீ
நீயாகி நிற்கும் வரை
பயணம்.
நீயெனும் எல்லை
கரைந்தபின்
முடிவில்
நானாவாய்.

அங்கே
நான் இல்லை,
நீ இல்லை,
காட்டியதும் இல்லை,
காட்டப்பட்டதும் இல்லை.

அங்கே
உண்மை மட்டுமே.

அன்புடன்,

சி எஸ் சிவா

செல்வாராஜுக்கு சிவா எழுதிய கடிதம்

அன்புடைய மாணவன் செல்வராஜ் அவர்களுக்கு,

வணக்கம்.
இறைஅருளும் குருவருளும் உன்னுடன் நிலைத்திருக்கட்டும்.

நீ தாயுமானவர் ஞான சபையின் வழியில், தியானப் பயிற்சிகளில் ஒழுங்குடன் ஈடுபட்டு வருவது அறியக் கிடைக்கிறது. அதற்காக முதலில் என் பாராட்டையும் ஆசீர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், உனக்கு சமீப காலமாக திடீரென காரணமற்ற மனக் குழப்பம், தெளிவின்மை அல்லது உள்ளார்ந்த கலக்கம் போன்ற அனுபவங்கள் தோன்றுகின்றன என்றால், அதனை ஒரு குறைபாடாகவோ தவறாகவோ எண்ண வேண்டாம் என்பதை தெளிவாக அறிந்து கொள்.

தியானம் ஆழமடையும் போது, மனத்தின் ஆழத்தில் நீண்ட காலமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த மனப் பதிவுகள், அடக்கப்பட்ட எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் மெதுவாக மேலெழுவது இயல்பான ஒன்றாகும். இது மனம் சுத்திகரிக்கப்படும் ஒரு கட்டமாகும். அந்தச் செயல்முறையில் சில காலம் மனம் நிலை தடுமாறுவது தியானப் பாதையில் ஏற்படும் இயற்கையான அனுபவமே.

மேலும், மனம் பழைய பழக்கங்களிலேயே நிலைத்திருக்க விரும்பும். தியானம் அந்த பழைய ஓட்டத்தை மாற்றி, மௌனத்திற்கும் விழிப்புணர்விற்கும் அழைக்கும் போது, மனம் தன் பழக்கங்களைப் பாதுகாக்க சிறு எதிர்ப்பை வெளிப்படுத்தும். அந்த எதிர்ப்பே காரணமற்ற குழப்பமாக வெளிப்படும். இதனைப் பற்றி அஞ்சுவதற்கோ, சந்தேகப்படுவதற்கோ அவசியமில்லை.

தியானம் தொடரும் போது “நான்” என்ற அகம்பாவத்தின் நுண்ணிய பிடி மெதுவாக தளர ஆரம்பிக்கும். அந்தப் பிடி தளர்வதை மனம் ஏற்க மறுக்கும் போது, உள்ளார்ந்த கலக்கம் தோன்றுவது இயல்பு. இது அபாயத்தின் அடையாளம் அல்ல; அகம்பாவம் கரையத் தொடங்கியதற்கான நல்விளைவாகும்.

சில காலங்களில் உடலும் மனமும் ஒரு புதிய ஒழுங்கிற்கு மாறும் கட்டத்தில், அசதி, சலிப்பு, தெளிவின்மை போன்ற உணர்வுகள் தோன்றலாம். இவை அனைத்தும் தற்காலிகமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் நீ கடைப்பிடிக்க வேண்டிய வழி மிகவும் எளிதானது.
தியானத்தை நிறுத்த வேண்டாம்.
அனுபவங்களை மாற்ற முயல வேண்டாம்.
காரணங்களைப் பிடித்து மனதை மேலும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

“இது வருகிறது… இது போகும்” என்ற சாட்சிப் பார்வையுடன் அமைதியாக இருந்து, தியானத்தை தொடரு. பார்ப்பவனாக மட்டும் இருப்பதே போதுமானது. உள் ஒழுங்கு தானாகவே தனது பணியைச் செய்து கொள்ளும்.

மாணவனே, உறுதியாக நினைவில் கொள்: உண்மையான தியானப் பாதையில் முன்னேறுபவர்களுக்கே இத்தகைய மனநிலை மாற்றங்கள் ஏற்படும். அது தடையல்ல; ஒரு வாசல். அந்த வாசலை நம்பிக்கையுடன் கடந்து சென்றால், அதற்கு அப்பால் மேலும் ஆழமான அமைதியும் தெளிவும் உன்னை எதிர்நோக்கி நிற்கும்.

இறைஅருளும் குருவருளும் என்றும் உன்னுடன் நிலைத்திருக்கட்டும்.

அன்புடன்,
சி. எஸ். சிவா
தலைவர் / குருநாதர்
தாயுமானவர் ஞான சபை

ஞானப் பாடல் சி எஸ் சிவா

அன்புள்ள சீடனே,

ஞானப் பாடல் – யோக உபதேசம்

என்னை இந்த உலகில்
தானே வாழ்கிறான் என்று சொல்வார்கள்.
இவன் இந்த நாடு தானே,
இந்த மாநிலம் தானே,
இந்த மாவட்டம் தானே,
இந்த ஊர் தானே என்று
அளவிடுவார்கள்.

இவன் இந்த ஜாதி தானே,
இந்த குடும்பம் தானே,
இந்த தாய்–தந்தையர் மகன் தானே,
இவர்களின் சகோதரன் தானே,
இவரின் கணவன் தானே,
இவர்களின் தகப்பன் தானே,
இந்தத் தொழில் செய்பவன் தானே என்று
பெயரும் பதவியும்
அடையாளங்களும்
அடுக்கு அடுக்காக
சுமத்திவைப்பார்கள்.

இவன் இப்படிப்பட்ட ஒருவன் தானே,
எனக்கு இவனைத் தெரியும் தானே என்று
பார்த்துவிட்டு
பேசிவிட்டு
போய்விடுவார்கள்.

அவர்கள்
பார்க்கட்டும்,
பேசிவிட்டு
போய்விடட்டும்.

ஆனால் நீ
அப்படி பார்த்துவிடாதே,
அப்படி பேசிவிடாதே.

ஞான யோகம்
பார்ப்பதில் அல்ல,
பார்ப்பவனை மறப்பதில்.
பேச்சில் அல்ல,
மௌனத்தில்.

கண்ணால் காண்பது
உருவத்தின் எல்லை;
உள்ளே உணர்வது
உண்மையின் வாசல்.

என்னால் தீட்சை பெற்ற நீ
என்னை ஒரு மனிதராக அல்ல,
ஒரு காற்றாக
ஏற்றுக்கொண்டால் போதும்.
காற்றுக்கு
பெயரும் இல்லை,
ஜாதியும் இல்லை;
ஆனால்
அது உயிர் கொடுக்கும்.

அதேபோல்
ஞானம் கற்பிக்கப்படுவதில்லை;
அது ஊற்றாக
உன்னுள்ளே
பாய்ந்து வரும்.
விளக்கு ஏற்றினால்
இருள் ஓடுவது போல,
அறிவு வந்தால்
அகந்தை விலகும்.

இதனை
நீ அப்படியே
ஏற்றாக வேண்டும் என்றில்லை.
மண் தயார் ஆனால்
விதை தானே முளைக்கும்.
மனம் பக்குவமானால்
ஞானம் தானே மலரும்.

ஏற்று வரமுடிந்தால்
இணைந்து வாழலாம் —
வாழ்வாங்கு.
நதியும் கடலும்
வேறல்ல என்பதுபோல்.

ஏற்காத நிலையில்
நீயாக வந்த வழியே
சென்று விடுவது
உனக்கும் நலம்,
எனக்கும் நலம்.
பூ மலர மறுத்தாலும்
மரம் கோபப்படுவதில்லை.

நான் கடைசியாக
கூறிய ரகசியம்
வார்த்தையில் இல்லை;
அனுபவத்தில் உள்ளது.
அது உனக்கு
கடைசியில் அல்ல —
காலம் வந்தால்
தானாகவே
தெரிய வரும்.

அன்புடன்,

சி எஸ் சிவா
நிறுவனர் தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை

விதைக்கப்பட்ட விதைகளே! கவிதை

விதைக்கப்பட்ட விதைகளே! 

கொஞ்சம் கொஞ்சமாக வளர்வாய் —
பொறுமை அவசியம்.
ஆறு கடலை அடைவது ஒரே நாளில் அல்ல;
மலைக் கண்ணீரைத் துளிகளாகச் சேகரித்தே
பெருங்கடலாகிறது.

விதைத்தது வீண் போகாது.
விதைத்தவன் காத்திருக்கிறேன்
நம்பிக்கையுடன்.
விவசாயி விதையை மண்ணில் போடும் போது
அவன் கண்களில் கனியைப் பார்க்கிறான்;
அதேபோல்
நீ இன்னும் முளைக்காத போதும்
நான் உன்னில் மரத்தைப் பார்க்கிறேன்.

காலம் வரும் வேளை
நீ வளர்ந்து வருவாய்.
சூரியன் உதயமாகும் முன்
வானம் இருளைத் தாங்குவது போல,
உன் இருளும்
ஒளிக்கான பயிற்சியே.

நீ முளைத்து வந்ததும்
உன்னை ஆடு, மாடு
மேய்ந்து விடாமல்
பாதுகாக்க வேண்டும்.
ஏனெனில்
முளை பலவீனம் அல்ல;
அது எதிர்காலத்தின் வாக்குறுதி.

உன்னை மரமாக்க வேண்டும்;
அந்த மரத்தில் பூ பூக்க வேண்டும்.
பூவிலே வாடிவிடாமல்
காத்திட வேண்டும்.
பூ அழகுக்காக மட்டுமல்ல,
பலனுக்கான அழைப்பிதழ்.

பூ பிஞ்சாக வேண்டும்;
பிஞ்சிலே வெம்பி
பழுத்து விடக்கூடாது.
அடுப்பில் வேகும் கனியும்
வெயிலில் வெம்பும் கனியும்
ஒரே சுவை அல்ல.
அனுபவம் வேண்டும்;
அவசரம் வேண்டாம்.

பிஞ்சு காயாக வேண்டும்.
காயை கல்லால் அடித்து
பறிக்கப் பார்க்கும் காலம் வரும் —
பொறாமையும், இகழ்ச்சியும்
அந்தக் கற்களே.
அதிலிருந்தும் உன்னை
காக்க வேண்டும்;
ஏனெனில்
உடைந்த காய் விதையாவதில்லை.

முடிவில்
நீ பழமாகும் வரை
உன்னைக் காக்கும் ஒருவன் உண்டு —
கலங்காதே!

உன் கனி ருசிக்கப்படும்;
அந்த கனியின் விதை
மீண்டும் பல மரங்களை தரும்.
நீ ஒருவருக்கான நன்மை அல்ல,
ஒரு தலைமுறைக்கான தொடக்கம்.
நீ பலன் கொடுப்பாய்.

உன்னை நான்
இந்த உலகிற்கு
பலன் தருபவனாகவே
வளர்க்கிறேன் —
வருங்காலத்தில் பலன் தரும் மரமே!

ஒன்றுமில்லை என்று நின்ற என்னை,
விதையாக்கி விதைத்தது முதல்
இன்று வரை வளர்த்து வரும்
என் குருவே — துணை!

அன்புடன்,

சி எஸ் சிவா
நிறுவனர் தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை

திங்கள், 5 ஜனவரி, 2026

ஆனந்த குமாருக்கு எழுதிய கடிதம்

அன்பும் மரியாதையும் உடைய
சகோதரரான
ஆனந்த குமார் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் ஆன்மீகப் பயணம் மேலும் ஆழ்ந்து தெளிவுப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்
சில ஆலோசனைகளை அன்புடனும் கருணையுடனும் பகிர்கிறேன்.

நம் பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில்,
“கல்லுக்குள் தெய்வம் இருக்கிறது” என்று நாம் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.
இந்த நம்பிக்கை பக்தியை வளர்ப்பது உண்மைதான்.
ஆனால் அதே நேரத்தில்,
அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளும் ஞானச் சிந்தனை
நமக்குத் தேவையாகிறது.

ஒரு விஷயம் சிந்தித்துப் பாருங்கள்:

நாம் தினமும் வழிபடும் அந்த புனிதமான கல்லை
யாராவது எடுத்துப்
சாலையோரம், தூசி படியும் இடத்தில் வைக்கிறார்கள் எனக் கொள்வோம்.

அப்போது அந்த அதே கல்லுக்குள்
தெய்வம் இருக்கிறது என்று நம்பி
அதே மரியாதையுடன்
கை கூப்பி வணங்குவோமா?

இந்தக் கேள்வியின் நோக்கம்
நம்பிக்கையை குறைப்பது அல்ல —
அதன் உண்மையான தன்மையை உணர்த்துவதே.

இதுபோலவே,
தேசியக் கொடியையும் எடுத்துக் கொள்ளலாம்.

அந்தத் துணிக்கு நாம் மரியாதை செலுத்துவது,
அது வெறும் துணி என்பதற்காக அல்ல —
அதன் பின்னால் நிலைத்து நிற்கும்
நாட்டின் ஒற்றுமை, தியாகம், நீதி, மரியாதை —
இவற்றின் அர்த்தத்திற்காகத்தான்.

அதேபோல்,
கல்லுக்கும் நாம் மரியாதை தருவது
அதன் கல் தன்மைக்காக அல்ல —
அது தெய்வ சின்னமாக நினைவூட்டுவதற்காகத்தான்.

ஆனால் உண்மையான ஞானம் கூறுவது:

தெய்வம்
ஒரே கல்லுக்குள் அடைந்து கிடப்பதில்லை.
அது எல்லா இடங்களிலும் பரந்து நிற்கிறது —
முக்கியமாக நம் உள்ளுணர்வின் ஒளியில்தான்
அது தெளிவாக வெளிப்படுகிறது.

ஆகையால்,

  • கல் தெய்வமல்ல
  • ஆனால் அது தெய்வத்தை நினைவூட்டும் சின்னம்
  • உண்மையான தெய்வம் —
    அறிவின் விழிப்பு,
    மனத்தின் சுத்தி,
    கருணையின் வெளிப்பாடு.

பக்தி நமக்கு வழியைக் காட்டும்.
ஞானம் அந்த வழியின் அர்த்தத்தை உணர வைக்கும்.

இந்த உண்மைக்கு அருகில் இருக்கும் இந்த ஞானப் பார்வையை
அமைதியாக உள்ளத்தில் நிலைநிறுத்தி
உங்கள் ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்தால் —
அது உங்களை நிச்சயம் உயர்ந்த
பூரண தெளிவுக்கும் அழைத்துச் செல்லும்.

என்றும் அன்புடனும்

சி. எஸ். சிவா





ஞாயிறு, 4 ஜனவரி, 2026

கர்ம யோகம் பக்தி யோகம் ஞான யோகம் வாழ்க்கை வழிகாட்டி பின்னட்டை

சி. எஸ். சிவா
நிறுவனர் & தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை

ஆன்மீக சிந்தனை, உள்ளார்ந்த விழிப்பு, மனிதநேயப் பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஒருவர் — சி. எஸ். சிவா.

பரம்பரை சித்த சன்மார்க ஞானத்தின் ஒளியை,
நவீன வாழ்க்கையின் தேவைகளோடு இணைத்து
எளிமையான மொழியில் மக்களிடம் பகிர்ந்து வருவது
அவரது ஆன்மீகப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த நோக்கத்துடனே உருவான அமைப்பு —
“தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை.”

இந்த அறக்கட்டளையின்
நிறுவனர் மற்றும் தலைவராக
அவர் தொடர்ந்து ஆன்மீக, சமூக மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது எழுத்துக்கள் அனைத்தும்
தத்துவ ஆழத்துடன்
இதயத்தை மென்மையாக்கும் அன்பு மொழியில் விரிகின்றன.

இந்த நூலும் அதே நம்பிக்கையோடு பிறந்தது —
வாசகனின் உள்ளத்தில் அமைதி மலரட்டும்
அன்பு பெருகட்டும்
விழிப்பு ஒளி பரப்பட்டும்.

கர்ம யோகம் பக்தி யோகம் ஞான யோகம் பயிற்சி வழிகாட்டி

கர்ம யோகம் — பற்றில்லா செயல் வழி

குறிக்கோள்: செயலின் வழியாக உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துதல்.

நடைமுறை வழிமுறை

1. ஒவ்வொரு செயலையும் அர்ப்பணிப்பாக நினை

வீட்டுப் பணியாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும், உதவியாக இருந்தாலும்
மனதில் மெதுவாகச் சொல்லுங்கள்:

“இந்தச் செயல் அருளுக்காக.”

அது அஹங்காரத்தை கரைக்கும்.

2. பலனைப் பற்றிக் கவலைப்படாதே

நமக்குரியது — முயற்சி.
பலன் — அருளின் வரம்.

3. தன்னலமில்லா சேவைக்கு இடம் கொடு

ஒருவரின் துயரத்தைச் சற்றே குறைத்தாலே போதும்.
அதுவே கர்ம யோகம்.

ஒரே வாக்கியத்தில்:
“செய் — ஆனால் அதில் பற்றிக்கொள்ளாதே.”

---

🌸 பக்தி யோகம் — இதயம் உருகும் அன்பு வழி

குறிக்கோள்: அன்பும் சரணாகதியும் மூலம் இதயத்தை மென்மையாக்குதல்.

நடைமுறை வழிமுறை

1. தினசரி இறைநினைவு

மந்திரம், பாடல், ஜபம், மௌனம் — எது இயலுமோ அதைப் பின்பற்றுங்கள்.

2. சரணாகதி

இன்பத்திலும் துன்பத்திலும் சொல்லுங்கள்:

“நடத்துவது நீ தான்.”

3. நன்றியுணர்வை வளர்த்து கொள்

ஒவ்வொரு நாளும்
மூன்று நன்றிகளை மனதில் சொல்லுங்கள்.

ஒரே வாக்கியத்தில்:
“நான் அல்ல — அருளே எல்லாம்.”

---

✨ ஞான யோகம் — உள் விழிப்பு வழி

குறிக்கோள்: “நான் யார்?” என்ற உண்மை உணர்வை வளர்த்தல்.

நடைமுறை வழிமுறை

1. சிந்தனையைப் பாரு

ஒரு சிந்தனை எழுந்தால் கேள்:

“இதை அறிந்திருப்பவன் யார்?”

பதில் தேடாமல் அமைதியாக இருங்கள்.

2. சாட்சி உணர்வை பின்பற்று

எப்போது உணர்வுகள் எழினும்
உள்ளத்தில் சொல்லுங்கள்:

“இது ஒரு அனுபவம் — நான் சாட்சி.”

3. மௌன நேரம் வைத்துக் கொள்

தினமும் சில நிமிடங்கள் அமைதியாக அமருங்கள்.

ஒரே வாக்கியத்தில்:
“அனைத்தையும் அறிந்திருப்பதே நான்.”

---

🌺 மூன்றையும் ஒருங்கிணைத்த வாழ்க்கை முறை

காலை — சிறு தியானம் (ஞானம்)
பகல் — அன்புடன் செயல் (கர்மம்)
இரவு — நன்றியுணர்வு / ஜபம் (பக்தி)

இதுவே முழுமையான யோகப் பயணம்.


முன்னுரை கர்ம யோகம் பக்தி யோகம் ஞான யோகம்

முன்னுரை

சி. எஸ். சிவா
நிறுவனர் & தலைவர் 
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை 

மனித வாழ்க்கை, ஓர் அமைதியான யாத்திரை.
காலத்தின் ஓட்டத்தில் நாம் முன்னேறுகிறோம் என்றாலும், உண்மையில் நாம் செல்லும் பாதை —
உள்ளத்தின் ஆழ நிசப்தம் நோக்கியது.

அந்த உள் பயணத்திற்கான மென்மையான விளக்குத் தூணாகவே
இந்த நூல் — கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் —
உங்கள் கைகளில் வந்து சேர்ந்துள்ளது.

உலகம் நமக்கு அளிக்கும் அனுபவங்கள் எண்ணற்றவை.
சிரிப்பு, அழுகை, சந்தோஷம், துயரம், வெற்றி, தோல்வி —
அனைத்தையும் கடந்து ஒருவர் உள்மனதில் கேட்கிறார்:

“இந்த வாழ்க்கையின் உண்மை அர்த்தம் என்ன?”

இந்த ஒரே கேள்விக்கான
மூன்று அழகான பதில்கள் தான் —
இந்த மூன்று யோகங்கள்.

---

கர்ம யோகம் — செயலை அர்ப்பணிப்பாக மாற்றும் புனித நெறி

கர்ம யோகம் நமக்குச் சொல்லும் பெரும் ரகசியம் —
செயலே பந்தமல்ல;
அதோடு இணைந்த பற்று மற்றும் அஹங்காரம் தான் பந்தம்.

செயலை
அன்போடு செய்து,
அருளிடம் அர்ப்பணித்த நொடியில் —
அந்த செயல் வழிபாடாக மாறுகிறது.

நாம் நிலத்தைக் கடக்கின்ற போது
அதனை நமதே என்று சொல்வதில்லை.

அதேபோல் —
வாழ்க்கையில் நடக்கும் செயல்களும்
நம் சொந்தம் அல்ல;
அவை அருளின் கரங்களில் மலரும் தாமரைகள்.

இந்த உணர்வு தான்
கர்ம யோகம் தரும் ஆசீர்வாதம்.

---

பக்தி யோகம் — இதயம் கரையும் தேன் வழி

அறிவால் புரியாததை
அன்பு சுலபமாக உணர்கிறது.

பக்தி யோகம்
இதயத்தை மென்மையாக்கும் கலை.

இறைவன் என்பது
வெளியில் மட்டுமல்ல —
உள்ளத்தில் துடிக்கும்
அன்பின் மென்மையான அதிர்வு.

நாம்
நம்மை முற்றிலும் அருளின் கரங்களில் ஒப்படைத்தால்,

அந்த நொடியே
அஹங்காரம் கரைந்து,
இதயம் இலகுவாகிறது.

பக்தி —
பயத்தை நீக்கும் தாய் கை.
பாதையை வழிகாட்டும் தந்தை பாங்கு.
அன்பு மட்டுமே நிறைந்த
ஒரு அமைதியான அகாலம்.

---

ஞான யோகம் — உண்மையை வெளிப்படுத்தும் உள் ஒளி

ஞான யோகம்
ஒரு கேள்வியால் துவங்குகிறது:

“நான் யார்?”

இந்தக் கேள்வி
அறிவால் தீர்க்கப்படுவதில்லை.

அது
உள்ளத்தில் ஒலித்து,
மௌனமாக மலரும் ஒரு உணர்வு.

உடல் நான் அல்ல.
மனம் நான் அல்ல.
சிந்தனைகள் நான் அல்ல.

அனைத்தையும் சாட்சி போல்
அமைதியாக கவனித்து கொண்டிருப்பதே — நான்.

இந்த விழிப்புணர்வு பிறக்கும் போது
மனிதன் உணர்கிறான்:

விடுதலை என்பது
வேறு எங்கும் இல்லாத ஓர் இடமல்ல —
என் உள் உண்மை நிலையே அது.

---

மூன்றும் ஒன்றின் மூன்று முகங்கள்

கர்ம யோகம் — பயணம்
பக்தி யோகம் — வழிகாட்டி
ஞான யோகம் — இலக்கு

ஒரே முத்திற்கு
மூன்று வெளிச்சங்கள் போல
இந்த யோகங்கள் ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன.

செயல் இல்லாத பக்தி வெறும் உணர்வு.
அன்பில்லாத ஞானம் உலர்ந்த அறிவு.
விவேகமற்ற செயல் முடிவிலாத சுழற்சி.

ஆனால் இம்மூன்றும் இணைந்தால் —
மனித வாழ்க்கை
பரிபூரண அர்த்தத்தை அடைகிறது.

---

இந்த நூலின் உள் நோக்கம்

இந்த நூல்
அறிவைப் போதிப்பதற்காக அல்ல.

இதயத்தைத் தொட்டு,
உள் அமைதியை எழுப்பும்
ஒரு மென்மையான அழைப்பு.

இதை வாசிக்கும் ஒவ்வொருவரும்
தம் உள்ளத்தில் ஒரு நொடி நிற்கவும்,

அந்த அமைதியில்
தம்மைத் தாமே உணரவும் —
இதுவே என் ஆழ்ந்த விருப்பம்.

---

நன்றியுடன்

இந்த நூலை எழுதியது
என் தனிப்பட்ட முயற்சியால் அல்ல.

ஒரு தெரியாத கரம்
எப்போதும் பின்னால் இருந்து
என் உள்ளத்தை வழிநடத்தியது.

அந்த அருளுக்கு முன்
என் தலை வணங்குகிறது.


அன்புடன்,
சி. எஸ். சிவா

நூலின் தலைப்பு 
கர்ம யோகம் · பக்தி யோகம் · ஞான யோகம் — ஆன்மிகப் பாதை”

ஞான யோகம் அத்தியாயம் 20

அத்தியாயம் – 20

பரிபூரண ஒன்றிணைவு — அத்வைத உண்மை

ஞான யோகம் சொல்லும்
உன்னத உண்மை ஒன்று —

இரண்டு இல்லை.
ஒன்று மட்டுமே.

அந்த ஒன்று —
சுத்த விழிப்பு.
பரம ஆத்மா.

நாம் அதிலிருந்து பிறந்தவர்கள் அல்ல.
நாமே — அதுவே.

இதுவே
அத்வைதம் (இரண்டற்ற உண்மை).

---

பிரிவு என்பது மனத்தின் தோற்றம் மட்டுமே

மனம் சொல்லுகிறது:

✔ நான் – நீ
✔ நல்லது – கெட்டது
✔ வெற்றி – தோல்வி
✔ உள்ளம் – புறம்

இந்த இரண்டாக்கமே
பிரிவாக உணர்க்கிறது.

ஆனால்
மனம் அமைதியாகும் போது
உள்ளே ஒலிக்கிறது ஒரு மௌன உண்மை:

“அனைத்தும் ஒரே ஆதாரத்தில் இருந்து எழுகின்றன.
அதுவே நான்.”

---

அலைகள் பல — கடல் ஒன்று

கடலில்
ஆயிரம் அலைகள் எழலாம்.

ஒவ்வொரு அலையும் வேறுபட்டதாகத் தோன்றும்.

ஆனால் உண்மையில்
அவை எல்லாம் — கடல் தானே.

அதேபோல்
உயிர்கள் எண்ணற்றவை போலத் தோன்றினாலும்
அனைத்திலும் ஒளிர்கிறது —
ஒரே விழிப்பு.

---

அத்வைத உணர்வு வந்தால்…

இது அறிவு மட்டுமல்ல —
உள்ளத்தின் வெளிப்பாடு.

அப்போது மனம் உணர்கிறது:

✔ யாரும் மற்றவர் அல்ல
✔ எவரிடமும் பகை இல்லை
✔ ஒப்பீடு தேவையே இல்லை
✔ தனிமை என்றே இல்லை

ஏனெனில்
அனைத்தும் — நானே.

ஆனால் இது
அஹங்காரத்தின் “நான்” அல்ல.

இது
பிரபஞ்ச விழிப்பின் நான்.

---

அன்பு இயற்கையாக ஓடத் தொடங்கும்

அத்வைத உணர்வு ஆழமாவது போல
அன்பு கட்டாயம் அல்ல.

அது
சாதாரண சுவாசம் போல
இயற்கையாக ஓடும்.

ஏனெனில்
ஒவ்வொரு உயிரிலும்
உன்னை நீயே காண்கிறாய்.

அதுவே
கருணையின் உன்னத நிலை.

---

இது அனுபவத்தை மறுப்பதல்ல

அத்வைத உண்மை
உலகத்தை மறுப்பதில்லை.

மாறாக —
உலகத்தை சரியாகப் புரியச்செய்கிறது.

✔ வெளி உலகம் — அனுபவ நிலை
✔ உண்மையான நான் — சாட்சி விழிப்பு

இரண்டும் தங்கள் இடத்தில் தெளிவடைகின்றன.

---

விடுதலை என்றால் என்ன?

விடுதலை என்பது
எங்கேயோ செல்லுவது அல்ல.

உண்மையை உணர்தல்.

நாம் எப்போதுமே
ஆத்மாவே இருந்தோம்.

ஆனால்
அதை மறந்திருந்தோம்.

ஞான யோகம் —
அந்த மறந்த உண்மையை
மீண்டும் நினைவூட்டும் பாதை.

---

மௌனமே உன்னத போதனை

வார்த்தைகள் ஒரு வரையில்தான் அழைத்துச் செல்லும்.

ஒரு கட்டத்தில்
வார்த்தைகள் அடங்கி விடும்.

அங்கேதான்
மௌனம் மலர்கிறது.

அந்த மௌனம் —
அறியாமையல்ல.

அது
உண்மையின் ஓய்வில்லா ஒளி.

---

இந்தப் பயணம் எங்கே முடிகிறது?

பயணம்
நமக்குள் துவங்கியது.

அதே இடத்தில் தான்
முடிகிறது.

ஆனால் வித்தியாசம் என்ன?

முன்பு —
நாம் நம்மை உடல், மனம் என்று எண்ணினோம்.

இப்போது —
நாம் நம்மை விழிப்பாக உணர்கிறோம்.

இதுவே
ஞான யோகத்தின் பூரண நிலை.

---

அத்தியாய முடிப்பு சிந்தனை

✔ இரண்டற்ற உண்மை — அத்வைதம்
✔ அனைத்திலும் ஒரே விழிப்பு
✔ அதுவே உண்மையான நான்
✔ இதை உணர்வதே விடுதலை

வாழ்க்கை மெதுவாகச் சொல்கிறது:

“நீ தேடிய உண்மை
நீயே தான்.”

---

இந்த நூல் முடிவடைகிறது —
ஆனால் உள் பயணம் தொடர்கிறது.

அருள் வழிநடத்தட்டும்.

::

ஞான யோகம் அத்தியாயம் 19

அத்தியாயம் – 19

அகம் – புறம் — இரண்டும் ஒரே விழிப்பு

பொதுவாக நாம் வாழ்க்கையை
இவ்வாறு பிரித்துப் பார்க்கிறோம்:

✔ “இது என் உள் உலகம் (அகம்)”
✔ “அது வெளி உலகம் (புறம்)”

ஆனால் ஞானம் சொல்வது —
இது ஒரு தோற்றப் பிரிவுதான்.

உள்ளும் வெளியும்
இரண்டையும் ஒளிரச் செய்யும்
அதே விழிப்பே — உண்மையான நான்.

---

உள்ளுலகமும் வெளியுலகமும் எங்கே தெரிகிறது?

நாம் உலகை எங்கே பார்க்கிறோம்?

✔ கண்களால் காண்கிறோம்
✔ மனம் அதை அறிகிறது
✔ இதயம் அதை உணர்கிறது

ஆனால்
இந்த அனைத்தையும்
கவனித்து கொண்டிருப்பது யார்?

சாட்சி விழிப்பே.

உலகம் வெளியில் இருந்தாலும்
அதை அறிதல் — உள்ளேதான் நடக்கிறது.

---

அகம் — சிந்தனை, உணர்வு, நினைவு

உள்ளுலகம் என்பது

- சிந்தனை
- நினைவு
- உணர்வு
- விருப்பம்

இவற்றால் உருவானது.

இவை அனைத்தும்
வருகின்றன — போகின்றன.

இவை நிகழும் இடம் — மனம்.
ஆனால் அவற்றைப் பார்ப்பவன் — சாட்சி.

---

புறம் — உலக அனுபவம்

வெளியுலகம் என்பது

- மனிதர்
- சூழ்நிலை
- சம்பவம்
- வாழ்க்கை ஓட்டம்

இவற்றால் ஆனது.

இவையும் மாறுகின்றன.

ஆனால்
இந்த மாற்றங்களை அறிந்திருப்பது —
அதே சாட்சி விழிப்பே.

---

அகம் – புறம் : இரண்டும் அலைகள் போன்றவை

அகம் — உள் அலை
புறம் — வெளி அலை

ஆனால்
அலைகளின் அடிப்படை ஒன்று — கடல்.

அகத்திலும்
புறத்திலும்
ஒளிர்கிறது — ஒரே விழிப்பு.

அந்த விழிப்பே நான்.

---

இதைக் கண்டு உணர்ந்தால்…

ஒரு பெரிய மாற்றம் நிகழ்கிறது:

✔ தனிமை குறைகிறது
✔ பயம் கரைகிறது
✔ பிரிவு உணர்வு மறைகிறது

ஏனெனில்
நாம் உணர்கிறோம் —

அகம் – புறம் இரண்டும்
ஒரே ஆத்ம விழிப்பின் வெளிப்பாடுகள்.

---

பிரிவே மாயை

மனம் மட்டும் தான் சொல்லும்:

“அவன் வேறு.”
“அது வேறு.”
“நான் தனி.”

இந்த பிரிவு உணர்வே
அஹங்காரத்தின் மூல காரணம்.

ஆனால் ஞானம் உணர்கிறது:

அனைத்து உயிர்களிலும்
ஒளிர்கிறது — அதே விழிப்பு.

அதுவே
அன்பின் உண்மையான அடித்தளம்.

---

அகம் – புறம் சமமாக பார்க்கும் நிலை

இந்தப் புரிதல் வேரூன்றியபின்

✔ உள்ளே என்ன உணர்வு வந்தாலும்
அதை அமைதியாகப் பார்ப்பாய்

✔ வெளியே என்ன நிகழ்ந்தாலும்
சாந்தமாக எதிர்கொள்வாய்

ஏனெனில் இரண்டும்
ஒரே விழிப்பில் தோன்றும் அலைகள்.

---

ஞானியின் பார்வை

ஞானியின் உள்ளத்தில்
பிரிவு அறவே இல்லை.

அவர் அறிந்திருக்கிறார்:

“நான் — இந்த உடல் மட்டுமல்ல,
அனைத்திலும் ஒளிரும் விழிப்பே.”

அதனால்
அவரது அன்பு எல்லையற்றது.
அவரது அமைதி உள்நிறைவு.

---

நடைமுறை உள் பயிற்சி

ஒரு நாள் முழுவதும்
இதைக் கவனியுங்கள்:

✔ உள்ளே எழும் சிந்தனை —
✔ வெளியே நடக்கும் நிகழ்வு —

இரண்டையும் அமைதியாகப் பார்த்து சொல்லுங்கள்:

“இவை அனைத்தும்
அதே விழிப்பில் தோன்றும் அலைகள்.”

இந்த நினைவு
மனதை மெதுவாக விரிவடையச் செய்யும்.

---

அத்தியாய முடிப்பு சிந்தனை

✔ அகம் — உள் அனுபவங்கள்
✔ புறம் — வெளி அனுபவங்கள்
✔ இரண்டையும் காண்பது — சாட்சி விழிப்பு
✔ உண்மையான நான் — அதுவே

வாழ்க்கை மெதுவாகச் சொல்கிறது:

“பிரிவு மாயை…
விழிப்பே உண்மை.”

ஞான யோகம் அத்தியாயம் 18

அத்தியாயம் – 18

நான் யார்? — உள் விசாரணையின் உன்னதப் பயணம்

ஞான யோகத்தின் இதயம்
ஒரே ஒரு கேள்விக்குள் தங்கியுள்ளது:

“நான் யார்?”

இந்தக் கேள்வி —
வாதத்திற்கு அல்ல,
அறிவுத்திறன் விளையாட்டுக்கும் அல்ல.

இது
உள் விழிப்பைத் திறக்கும்
மௌனமான உள் விசாரணை.

---

சாதாரணமாக நாம் சொல்லும் பதில்கள்

யாராவது கேட்பார்கள்:

“நீங்கள் யார்?”

நாம் உடனே சொல்லிவிடுவோம்:

✔ என் பெயர் இதுதான்
✔ நான் இவ்வளவு வயது
✔ நான் இவ்வாறு வேலை செய்கிறேன்
✔ நான் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன்

ஆனால் இவை அனைத்தும்
உன்னைச் சூழ்ந்த அடையாளங்கள் மட்டும்.

அவை மாறினாலும்
நீ மாறுகிறாயா?

இல்லை.

---

உடல் — நான் அல்ல

உடல் மாறுகிறது:

குழந்தை → இளமை → முதுமை

ஆனால்
இந்த மாற்றங்களையெல்லாம்
நினைவில் வைத்திருப்பவன் — நான்.

அதனால்
உடல் நான் அல்ல.

அது
நான் பயன்படுத்தும் கருவி.

---

மனம் — நான் அல்ல

மன நிலைகள் எத்தனை!

✔ மகிழ்ச்சி
✔ துக்கம்
✔ கோபம்
✔ அமைதி

இவை அனைத்தும்
வரும் — போகும்.

ஆனால்
அவற்றைப் கவனித்து கொண்டிருப்பவன்
எப்போதும் ஒன்றே — நான்.

அதனால்
மனமும் நான் அல்ல.

---

எஞ்சுவது என்ன?

உடல் அல்ல
மனம் அல்ல
சிந்தனை அல்ல
உணர்வு அல்ல என்றால்…

யார் நான்?

இதற்கான பதில்
வார்த்தைகளில் அடங்குவதில்லை.

அது
உள் அனுபவத்தில் மட்டும் வெளிப்படும்.

---

உள் விசாரணை என்றால் என்ன?

உள் விசாரணை என்பது
மனத்தைக் கட்டுப்படுத்துவது அல்ல.

அது இவ்வளவு தான்:

ஒரு சிந்தனை எழுந்தால்
அதை அமைதியாகப் பார்த்து கேள்:

“இந்த சிந்தனையைப் பார்ப்பவன் யார்?”

பதில் எதுவும் சொல்ல வேண்டாம்.
அந்தக் கேள்வி உள்ளத்தில் ஒலிக்கட்டும்.

அந்த அமைதியில்
நம் உண்மை நிலை மறைமுகமாகத் தெரியும்.

---

நான் ஒரு அனுபவமல்ல — அனுபவிக்கும் சாட்சி

அனைத்து அனுபவங்களிலும்
ஒரு பொதுவான உண்மை:

“நான் இருக்கிறேன்.”

அதே “நான்” தான்

✔ விழிப்பு நிலையிலும்
✔ கனவு நிலையிலும்
✔ ஆழ்ந்த உறக்கத்திலும்

என்றுமே உள்ளது.

நிலையற்ற அனைத்தையும் தாண்டி நிற்பதே
உண்மையான நான் — சாட்சி விழிப்பு.

---

இந்த உண்மையை உணர்ந்தால்…

அது ஒரு சிந்தனை அல்ல —
ஆழ்ந்த உள் விழிப்பு.

அப்போது:

✔ பயம் தளரும்
✔ பற்றுகள் குறையும்
✔ மன அழுத்தம் கரையும்
✔ அமைதி ஆழமாகும்

ஏனெனில்
நாம் உணர்கிறோம்—

“நான் — பிறக்கும், மாறும், அழியும் ஒன்றல்ல.”

---

உள் விசாரணையின் மென்மையான நடைமுறை

தினமும் சில நிமிடங்கள்
அமைதியாக அமருங்கள்.

உள்ளத்தில் எழும் சிந்தனையைப் பார்த்து
மெதுவாகக் கேளுங்கள்:

“இந்த சிந்தனையை அறிந்திருப்பவன் யார்?”

பதில் தேடாதீர்கள்.
அமைதியாக இருங்கள்.

அந்த அமைதியே
உன் உண்மையான அடையாளம்.

---

ஞானத்தின் உச்சிப் பொக்கிஷம்

பகுத்தறிவால் அறிந்தது — அறிவு
உள்ளத்தில் உதித்தது — அனுபவம்
நிலையாகியது — ஞானம்

அதன் உச்சி:

“நான் — சாட்சியே அல்ல,
முழுப் பிரபஞ்சத்திற்குமான
நித்திய ஆதாரம்.”

இந்த உண்மை
மெதுவாக இதயத்தில் மலரட்டும்.

அவசரம் தேவையில்லை.

---

அத்தியாய முடிப்பு சிந்தனை

✔ “நான் யார்?” — ஞானப் பாதையின் இதயம்
✔ நான் — உடல் அல்ல, மனமும் அல்ல
✔ நான் — அனுபவங்களைத் தாண்டிய சாட்சி விழிப்பு
✔ இந்த உண்மை உணர்ந்தால் அமைதி இயற்கையாக மலரும்

வாழ்க்கை மெதுவாகச் சொல்கிறது:

“உலகின் ஆயிரம் கேள்விகளை விட…
ஒரு கேள்வி போதுமானது —
நான் யார்?”


ஞான யோகம் அத்தியாயம் 17

அத்தியாயம் – 17

சாட்சி — உண்மையான நான்

ஞான யோகத்தின் மையப் பொக்கிஷம் ஒன்று —

“நான் யார்?”

இந்தக் கேள்விக்கான
அழகான, ஆழமான பதில்தான்:

நான் — சாட்சி விழிப்பு.

அதாவது
உடலில் நடப்பவையும்,
மனத்தில் எழும் சிந்தனைகளையும்,
உணர்ச்சிகளையும்,
வாழ்க்கை நிகழ்வுகளையும்
அமைதியாகக் கவனித்து கொண்டிருப்பதே — நான்.

---

உடல் மாறுகிறது — ஆனால் நான் மாறுகிறேனா?

குழந்தை உடல்,
இளமை உடல்,
முதுமை உடல் —

உடல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

ஆனால்
இந்த மாற்றங்களையெல்லாம் நினைவில் வைத்திருக்கும்
“நான்” மாறுகிறானா?

இல்லை.

அதனால்
உடல் நான் அல்ல.
அது நான் பயன்படுத்தும் கருவி மட்டும்.

---

மனம் மாறுகிறது — ஆனால் நான் சாட்சிதான்

ஒரு நாளில் எத்தனை உணர்வுகள்!

✔ மகிழ்ச்சி
✔ துக்கம்
✔ கோபம்
✔ பயம்
✔ அமைதி

ஒவ்வொரு உணர்ச்சியும்
வந்து போகும் அலை போன்றது.

ஆனால்
அவற்றைப் பார்ப்பவன்
எப்போதும் அதே நான்.

அதனால்
மனமும் “நான்” அல்ல —
நான் — அதன் சாட்சி.

---

சிந்தனை — கனவுப் போல

நாம் கனவு காணும்போது
அந்த உலகமே நிஜமாகத் தோன்றும்.

ஆனால் எழுந்ததும் புரிகிறது —
அது சிந்தனையின் தோற்றம் என்று.

விழிப்பு நிலையில் கூட
பல சிந்தனைகள் நம் உள்ளம் முழுவதையும் ஆக்கிரமிக்கின்றன.

ஆனால் ஞானம் சொல்வது:

சிந்தனை — மனத்தின் அலை.
நான் — அலைகளைத் தாண்டிய விழிப்பு.

---

சாட்சி உணர்வு என்றால் என்ன?

ஒரு எளிய விளக்கம்:

✔ சிந்தனை — திரையில் ஓடும் படம்
✔ மனம் — திரை
✔ சாட்சி — பார்ப்பவன்

படம் மாறலாம்
ஆனால் பார்ப்பவன் மாற மாட்டான்.

அந்த “பார்ப்பவனே” —
உண்மையான நீ.

---

சாட்சி உணர்வு வந்தால் என்ன நடக்கும்?

மிக ஆழமான மாற்றம் ஒன்று நிகழ்கிறது:

✔ சிந்தனைகளிடம் அடிமை இல்லை
✔ உணர்வுகள் வந்தாலும் மூழ்கிவிட மாட்டாய்
✔ துன்பம் வந்தாலும் உடைய மாட்டாய்
✔ இன்பம் வந்தாலும் பெருமை கொள்ள மாட்டாய்

ஏனெனில் உள்ளம் சொல்கிறது:

“இவை அனைத்தையும் அனுபவிப்பவன் நான்தான் —
நான் அவையல்ல.”

இது தான்
உள்ளார்ந்த சுதந்திரம்.

---

இந்த உண்மை எப்போதும் நம்மோடு இருந்ததே

புதியதாக எதையும் பெறவோ அடைவதோ இல்லை.

சாட்சி விழிப்பு
எப்போதும் நம்மோடு இருந்ததே.

ஆனால்
மனம், சிந்தனை, உடல் ஆகியவற்றோடு
அதிகமாக ஒன்றுபட்டதால்
அந்த விழிப்பு உணர்வு மறைந்தது.

ஞானம் என்பது —
மறந்ததை மீண்டும் நினைவூட்டுவது.

---

சிறு உள் பயிற்சி

அமைதியாக அமர்ந்து பாருங்கள்:

1️⃣ சிந்தனை எழும்
2️⃣ அதை கவனியுங்கள்
3️⃣ மெதுவாக உள் உள்ளத்தில் சொல்லுங்கள்:

“இதைப் பார்ப்பவன் நான்.”

இந்தப் பார்வையே
சாட்சி உணர்வை வளர்க்கும்.

---

சாட்சி உணர்வு — விடுதலையின் வாசல்

நாம் சாதாரணம் நினைப்பது:

“என் வாழ்க்கை என்னை நடத்துகிறது.”

ஞானம் சொல்லுவது:

“நீ வாழ்க்கையைப் பார்ப்பவன்.
அலைகள் மாறலாம் — கடல் மாறாது.”

அந்தக் கடலே — சாட்சி.

---

அத்தியாய முடிப்பு சிந்தனை

✔ உடல் — நான் அல்ல
✔ மனம் — நான் அல்ல
✔ அனுபவங்கள் — நான் அல்ல
✔ நான் — அவற்றைப் பார்ப்ப சாட்சி விழிப்பு

வாழ்க்கை மெதுவாகச் சொல்கிறது:

“நடிப்பு நடந்து கொண்டே இருக்கட்டும்…
நீ — அமைதியான சாட்சியாக இருப்பாயாக.”


ஞான யோகம் அத்தியாயம் 16

அத்தியாயம் – 16

அசங்க நிலை — அலைகளின் நடுவே அசையாத மனம்

ஞான யோகம் சொல்லும்
மிக ஆழமான உள் நிலை —
அசங்கம்.

அசங்கம் என்றால் —
வாழ்க்கையில் எதுவாக நடந்தாலும்
உள்ளார்ந்த அமைதி குலையாமல் இருப்பது.

இது உணர்ச்சியற்ற குளிர்ந்த நிலை அல்ல.
மாறாக —
விழிப்புடனும் அன்புடனும்
ஆனால் பற்றில்லாமல் வாழும் நிலை.

---

அலைகள் எழுந்தாலும் கடல் அசையாதது போல

கடலில் அலைகள் எழுகின்றன — அடங்குகின்றன.
ஆனால் கடலின் ஆழம்
அமைதியாகவே இருக்கும்.

அதேபோல
வாழ்க்கையில்

- இன்பம்
- துன்பம்
- பாராட்டு
- இகழ்ச்சி
- வெற்றி
- தோல்வி

எதுவாக வந்தாலும்
உள் விழிப்பு நிலை அசையாமல் இருந்தால்
அதுவே — அசங்க நிலை.

---

அசங்கம் — ஒதுங்கிய வாழ்க்கை அல்ல

சிலர் நினைப்பார்கள்:

“அசங்கம் என்றால்
வாழ்க்கையில் ஈடுபாடு இல்லையா?”

இல்லை.

அசங்க நிலை என்பது —

✔ செயலில் முழுமையாக ஈடுபட்டு
✔ பொறுப்புகளைச் செய்து கொண்டிருக்கையிலேயே
✔ இதயத்தில் பற்றில்லாமல் வாழ்வது.

இது தான்
ஞானத்தின் செயல் வாழ்வு.

---

ஏன் மனம் அலைகளாகிறது?

மனம் பொதுவாகப் பற்றிக் கொள்வது:

✔ இது என் விருப்பப்படி நடக்க வேண்டும்
✔ இது இழக்கக் கூடாது
✔ இது மாறக்கூடாது

இந்த எதிர்பார்ப்பு தான்
கலக்கத்தின் காரணம்.

எதிர்பார்ப்பு தளரும்போது
அசங்க நிலை மலர ஆரம்பிக்கிறது.

---

சாட்சி உணர்வே அசங்கத்தின் அடித்தளம்

நாம் சாட்சி விழிப்பே நான்
என்று ஆழமாக உணரும்போது,

சிந்தனைகள், உணர்வுகள், சம்பவங்கள் —
அனைத்தும்
வந்து போகும் அலைகள் போலத் தோன்றும்.

அப்போது மனம்
பதற்றமின்றி
அமைதியாக இருக்கத் தெரியும்.

இதுவே
அசங்கத்திற்கான கதவு.

---

அசங்கம் — சாதனையால் கட்டாயப்படுத்தும் நிலை அல்ல

அசங்க நிலை
அழுத்திப் பிடித்து உருவாக்கப்படும் ஒன்றல்ல.

மாறாக —

✔ விவேகம்
✔ வைராக்கியம்
✔ சாந்தம்

இவை ஆழமாவது போல
இயற்கையாக மலரும் சமநிலை.

இது —
உள் முதிர்ச்சியின் அறிகுறி.

---

அசங்கமான ஞானியின் நடை

அசங்க நிலையை அடைந்தவர்:

✔ மகிழ்ச்சியில் மிதக்க மாட்டார்
✔ துன்பத்தில் உடைந்து போக மாட்டார்
✔ பாராட்டால் பெருமை கொள்ள மாட்டார்
✔ குற்றச்சாட்டால் துவள மாட்டார்

ஏனெனில் அவர் உணர்கிறார்:

“நான் — அனுபவங்களல்ல.
அவற்றின் சாட்சி.”

---

நடைமுறைப் பயிற்சி

ஒரு நாள் முழுவதும்
இதை மட்டும் கவனியுங்கள்:

எதோ ஒன்று நடந்தால்
உள் மனம் அலைபாயலாம்.

அந்த தருணத்தில்
மெதுவாக உள்மனத்தில் சொல்லுங்கள்:

“இது ஒரு அனுபவம் மட்டும்…
நான் — சாட்சி.”

இந்த நினைவு
அசங்க நிலையை வளர்க்கும்.

---

அசங்க நிலையின் பலன்கள்

✔ உள் அமைதி ஆழமாகும்
✔ உறவுகள் சமநிலையாகும்
✔ மன அழுத்தம் குறையும்
✔ தீர்மானங்கள் தெளிவடையும்

முக்கியமாக —

வாழ்க்கை இலகுவாகிறது.

---

அத்தியாய முடிப்பு சிந்தனை

✔ அசங்கம் — அலைகளின் நடுவே அமைதி
✔ அது சாட்சி உணர்வின் விளைவு
✔ பற்றில்லா ஈடுபாடு — அதன் அடையாளம்
✔ ஞான யோகத்தின் முதிர்ந்த நிலை இதுவே

வாழ்க்கை மெதுவாகச் சொல்கிறது:

“நிகழ்வுகள் மாறட்டும்…
நீ உன் உண்மை நிலையிலே நிலைத்திரு.”

ஞான யோகம் அத்தியாயம் 15

அத்தியாயம் 15 
“சாந்தம் — விவேகம் — வைராக்கியம்”

இந்த மூன்று சொற்களும்
ஞான யோகத்தின் உள்ளார்ந்த மூன்று படிகள் போல:

✔ விவேகம் — உண்மையை அறியச் செய்கிறது
✔ வைராக்கியம் — பற்றுகளை விடச் செய்கிறது
✔ சாந்தம் — உள்ளமைதியாக மலர்கிறது

இவற்றை ஒன்றிணைத்த தலைப்பு
அத்தியாயத்தின் சாரத்தை அழகாகக் கூறுகிறது.

---

அத்தியாயம் – 15

சாந்தம் — விவேகம் — வைராக்கியம்

ஞான யோகத்தின் பாதையில்
மனிதன் முதலில் பெற வேண்டியது — விவேகம்.

விவேகம் வந்தபின்
உள்ளத்தில் மலருவது — வைராக்கியம்.

அந்த வைராக்கியத்தின் இயற்கையான இனிய பலனாக
இதயத்தில் நிலை கொள்கிறது — சாந்தம்.

இந்த மூன்றும்
ஒரே அருளின் மூன்று வடிவங்கள்.

---

விவேகம் — உண்மையை வெளிப்படுத்தும் ஒளி

விவேகம் நமக்குச் சொல்கிறது:

✔ மாறுபவை — அநித்யம்
✔ மாறாதது — ஆத்ம விழிப்பு

இந்தப் புரிதலால்
மனிதன் வெளிப்புற உலகைப் பற்றிய
அர்த்தமற்ற பற்றிலிருந்து விழித்தெழுகிறார்.

இது தான்
ஞானத்தின் துவக்கம்.

---

வைராக்கியம் — பற்றின்மையின் இலகுத்தன்மை

விவேகம் ஆழமாவது போல
பற்றுகள் இயற்கையாக தளரத் தொடங்குகின்றன.

செல்வம், புகழ், நிலை, அனுபவம் —
ஒன்றும் நித்தியமில்லை என்பதை உணர்ந்தால்
உள்ளம் இலகுவாகி விடுகிறது.

இந்தப் பற்றின்மையே — வைராக்கியம்.

அது
வாழ்க்கையிலிருந்து ஓடிப்போவது அல்ல —
அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபடுவது.

---

சாந்தம் — உள்ளத்தில் மலரும் அமைதி

விவேகமும் வைராக்கியமும் வேரூன்றியபின்
இதயத்தில் மெதுவாக எழும் நிலையே — சாந்தம்.

இந்த சாந்தம்:

✔ சோர்வான மௌனம் அல்ல
✔ உணர்ச்சி இல்லாமையும் அல்ல

மாறாக —
விழிப்புடன் கூடிய ஆழ்ந்த அமைதி.

அலைகள் இருக்கும்
ஆனால் கடலின் ஆழம் அமைதியாக இருப்பது போல.

---

மூன்றும் ஒன்றை ஒன்று வளர்க்கும்

✔ விவேகம் → வைராக்கியத்தை உருவாக்குகிறது
✔ வைராக்கியம் → சாந்தத்தை உருவாக்குகிறது
✔ சாந்தம் → விவேகத்தை மேலும் ஆழமாக்குகிறது

இவை
ஒரு சங்கீதத்தின் மூன்று swarangal போல
ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன.

---

ஞானியின் உள்ள நிலை

இந்த மூன்று ஆற்றல்களும்
உள்ளத்தில் வேரூன்றியபின்

✔ மனம் சமநிலை
✔ இதயம் இலகு
✔ உள்ளம் அமைதி

அவரது வாழ்க்கை
அலை இல்லாத குளம்போலச் சாந்தமாகிறது.

---

அத்தியாய முடிப்பு சிந்தனை

✔ விவேகம் — உண்மையை அறியச் செய்கிறது
✔ வைராக்கியம் — பற்றிலகச் செய்கிறது
✔ சாந்தம் — ஆத்ம அமைதியை வெளிப்படுத்துகிறது

வாழ்க்கை மெதுவாகச் சொல்கிறது:

“உண்மையை அறிந்து
பற்றுகளை விடு…
அமைதி தானாக வந்து மலரும்.”

ஞான யோகம் அத்தியாயம் 14

அத்தியாயம் – 14

வைராக்கியம் — விவேகத்தின் இயல்பான விளைவு

ஞான யோகத்தின் பாதையில்
முதலில் உதிக்கும் உள் ஒளி — விவேகம்.

விவேகம் நமக்கு
ஒரு ஆழமான உண்மையை உணரச்செய்கிறது:

✔ இந்த உலகில் நாம் அனுபவிப்பவை அனைத்தும்
மாறுபவை — அநித்யம்

✔ மாறாதது — நித்திய சாட்சி விழிப்பே

இந்த உண்மை
உள்ளத்தில் வேரூன்றிய பின்
மெதுவாகவும் இயற்கையாகவும் மலரும் நிலையே —

வைராக்கியம்.

அதனால் தான் சொல்லப்படுகிறது:

“வைராக்கியம் — விவேகத்தின் இயல்பான விளைவு.”

---

விவேகம் விழித்தால் — பற்றுகள் தானாக குறையும்

ஒரு குழந்தை
பொம்மையை நிஜமாக நம்பி விளையாடும்.

ஆனால் அது பொம்மைதான் என்று புரிந்ததும்
அதில் இருந்த பற்றின் தீவிரம் தானாகவே குறைகிறது.

அதேபோல
விவேகம் நமக்குச் சொல்லுகிறது:

✔ செல்வம் — தற்காலிகம்
✔ புகழ் — தற்காலிகம்
✔ உடல் — தற்காலிகம்
✔ அனுபவங்கள் — அனைத்தும் அநித்யம்

இந்த உண்மை
இதயத்தைத் தொட்ட நொடி
பற்று மெதுவாக தளரத் தொடங்குகிறது.

அது கட்டாயமாக உருவாக்கிய நிலை அல்ல —
உள்ளுணர்வால் மலரும் இயல்பு.

---

வைராக்கியம் — உலகத்தை மறுக்கும் நிலை அல்ல

சிலர் தவறாக நினைப்பார்கள்:

“வைராக்கியம் என்றால்
உலகத்தை விட்டு விலகுவது” என்று.

இல்லை.

வைராக்கியம் என்பது —

✔ உலகில் வாழ்ந்தபடியே
✔ பொறுப்புகளைச் செய்தபடியே
✔ அன்பைப் பகிர்ந்தபடியே

இதயத்தில்
பற்றின்மையுடன் வாழும் நிலை.

இது
செயலிலிருந்து ஓடிவிடுதல் அல்ல —
அடிமைத்தனத்திலிருந்து விடுபடுதல்.

---

பற்றின்மையால் அன்பு குறையாது — தூய்மைப்படும்

பற்று கலந்த அன்பு சொல்வது:

“நீ என் சொந்தம்.”

வைராக்கியம் சொல்வது:

“நீ அருளின் வரம்.”

அன்பு குறையவில்லை —
அது நெஞ்சில் சுத்தமாகிறது.

அதில்

✔ கட்டுப்பாடு இல்லை
✔ உரிமை எண்ணம் இல்லை
✔ பயம் இல்லை

மிக்க மென்மையான
தூய அன்பே இருக்கும்.

---

விவேகம் — வைராக்கியம் : இரண்டு சேரும் போது

விவேகம் சொல்லுகிறது:

“நிலையானது ஆத்மா.”

வைராக்கியம் சொல்லுகிறது:

“நிலையற்றவற்றில் பற்றிக்கொள்ள வேண்டாம்.”

இவை இரண்டுமே ஒன்றை ஒன்று வளர்க்கும்.

விவேகம் — வழி காட்டும் தீபம்.
வைராக்கியம் — மனதை இலகுவாக்கும் காற்று.

இரண்டும் சேரும் போது
உள்ளம் சாந்தமாகிறது.

---

வைராக்கியத்தின் அடையாளம்

வைராக்கியம் வளர்ந்தவரின் உள்ளம்
இவ்வாறாக இருக்கும்:

✔ இன்பம் வந்தால் — நன்றி
✔ துன்பம் வந்தால் — சமநிலை
✔ வெற்றி வந்தால் — பணிவு
✔ இழப்பு வந்தாலும் — தைரியம்

ஏனெனில் அவர் அறிந்திருக்கிறார்:

“நான் — அனுபவங்களல்ல.
அவற்றின் சாட்சி.”

---

வைராக்கியம் — சாந்தத்திற்கான வாயில்

பற்றுகள் தளரும்போது
இதயம் இலகுவாகிறது.

அந்த இலகுத்தன்மையே
உள் அமைதியை வரவேற்கிறது.

அதனால் தான் ஞானிகள் கூறுகின்றனர்:

“விவேகம் — ஞானத்தின் வேராம்;
வைராக்கியம் — அதன் மலராம்.”

---

நடைமுறை உள் பயிற்சி

ஒவ்வொரு அனுபவத்தையும்
அமைதியாகப் பார்த்து கேளுங்கள்:

- இது நித்யமா?
- அநித்யமா?

அநித்யம் என்றால் —
அதைப் பயன்படுத்துங்கள், நன்றி சொல்லுங்கள் —
ஆனால் பற்றிக்கொள்ளாதீர்கள்.

இந்த ஒரு விழிப்புணர்வே
வைராக்கியத்தின் விதை.

---

அத்தியாய முடிப்பு சிந்தனை

✔ விவேகம் — உண்மையைப் புரியச் செய்கிறது
✔ வைராக்கியம் — பற்றின்மையால் சுதந்திரம் தருகிறது
✔ அன்பை குறைப்பதில்லை — பரிசுத்தப்படுத்துகிறது
✔ உள் அமைதிக்கான கதவைத் திறக்கிறது

வாழ்க்கை மெதுவாகச் சொல்கிறது:

“உலகில் வாழ் —
ஆனால் உலகம் உன்னைப் பற்றிக் கொள்ளாதபடி வாழ்.”

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...