திங்கள், 26 ஜனவரி, 2026

அபிராமி அந்தாதி பாடல் 18

அபிராமி அந்தாதி பாடல் 
பாடல் 18.

"வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே".

உரைநடை விளக்கம்.

அம்மையே! அபிராமியே! உன்னையும் சிவனையும் ஒன்றாகக் காணும் அர்த்தநாரீசுவரத் திருக்கோலமும், உங்கள் திருமணக் கோலமும் என் உள்ளத்தில் நிலைத்திடும்போது என்னுள் இருந்த ஆணவம் கரைந்து விடுகிறது. அந்த நிலையில், உங்களின் பொலிவு பெற்ற திருவடிகள் என்னை ஆட்கொண்டு அருளாக நிற்கின்றன. அப்போது உயிரைப் பறிக்க வரும் காலனைக் கண்டும் எனக்குப் பயமில்லை ; அவன் வருகைக்குமுன் நீங்கள் தரிசனமாக நிற்பதால், மரணம் முடிவல்ல—அருளின் வாசலாக மாறுகிறது.


யோக–ஞான விளக்கம் :

அபிராமி அந்தாதியின் இந்தப் பாடல், வெளிப்புற பக்தி மொழியில் தோன்றினாலும், உள்புற யோக அனுபவத்தின் உச்சியைச் சுட்டுகிறது.
“வவ்விய பாகத்து இறைவரும், நீயும்” என்று அபிராமி பட்டர் கூறுவது, சக்தி–சிவம் ஒன்றாய் நிலைக்கும் தத்துவ அனுபவத்தின் சுட்டுரை ஆகும்.

சிவம் – சித்தம்.
சக்தி – இயக்கம்.
இவை இரண்டும் தனித்தனியாக இயங்கும் வரை மனிதன் இருமையில் தான் நிற்கிறான்.

இடகலை எனும் சந்திரகலை மேலோங்கினால், மனிதனுள் உலகியல் உணர்ச்சியின் செயல் மேலெழுகிறது.
இன்பம்–துன்பம், பாசம்–வெறுப்பு, பற்றுதல் போன்ற உணர்ச்சிகள் மேலோங்கி, மனம் உலகச் சுழற்சியிலேயே தன்னைப் பிணைத்துக் கொள்கிறது.

பிங்கலை எனும் சூரியகலை மேலோங்கினால், மனிதனுள் ஞானச் செயல் முன்னேறுகிறது.
விவேகம் கூர்மையடைகிறது; சிந்தனை தெளிவடைகிறது; செயல் அகநோக்கில் நகர்கிறது.

அபிராமி பட்டர் கூறும் “உங்கள் திருமணக்கோலம்” என்பது வெளிப்புற கல்யாணம் அல்ல.
அது இடகலையும் பிங்கலையும் தாண்டி சுழுமுனையில் நிகழும் யோகக் கல்யாணம்.

இந்த ஒன்றுதல் நிகழும் போது, சக்தியும் சிவமும் இரண்டாக இல்லாமல் ஒன்றாய் அனுபவமாகின்றன.
அந்த நிலையையே யோகம் பிரம்மசிவ நிலை என அழைக்கிறது.

சுழுமுனையில் நிலைபெறும் மனிதன், பிறப்பு–இறப்புகளை ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்கிறான்.
அதனால் தான் அபிராமி பட்டர், “சிந்தையுள்ளே” இந்த நிலை உறைய வேண்டும் என்று வேண்டுகிறார்.

பாடலில் வரும் “காலன்” என்பது உடல் மரணம் மட்டும் அல்ல;
அது அகங்காரம், அறியாமை, பயம் ஆகியவற்றையும் குறிக்கும்.
பிரம்மசிவ நிலையில் நிலைத்தவனுக்கு காலன் அதிகாரம் இழக்கிறான்.
அதனால் தான் “வெளிநிற்கவே” என்று அருள் வேண்டப்படுகிறது.

இந்த நிலையில் நின்றவன், சக்தியை உள்ளடக்கிய சிவம் தரும் பரமசுகத்தில் திளைத்திருப்பான்.
அது உணர்ச்சிச் சுகமல்ல; மாறாத ஆனந்தம்.
அதனால் அவன் உள்ளம் இளைஞனைப் போல குதூகலமாகவும்,
மார்க்கண்டேயனைப் போல காலத்தால் தொட முடியாத நிச்ச்சலத்திலும் இருக்கும்.


சக்தி–சிவம்
சுழுமுனையில் ஒன்றானால்,
காலனும் மௌனமாக நிற்கிறான்.

இதுவே அபிராமி பட்டர் காட்டிய வழி.
இதுவே யோகம் உணர்த்தும் உண்மை.

அன்புடன்
சி. எஸ். சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...