ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

ஒரே சக்தி இரண்டு பாதை பகுதி 1

பகுதி – 1 : அடித்தளம்

---

4, ஜீவன் என்றால் என்ன?

மனிதன் தன்னை அறியத் தொடங்கும் முதல் இடமே
அவன் தன்னைத் தவறாக வரையறுக்கும் இடமாகிறது.
“நான் உடல்”, “நான் மனம்”, “நான் நினைவுகள்”
என்று அவன் சொல்லும் தருணத்திலேயே
அவன் தன்னை ஒரு எல்லைக்குள் அடைத்து விடுகிறான்.

ஆனால் வாழ்க்கையின் சில தருணங்களில்—
ஆழ்ந்த உறக்கம்,
அதிர்ச்சியான அமைதி,
அல்லது காரணமில்லா விழிப்பு—
இந்த எல்லைகள் அனைத்தும் தளர்ந்து விடுகின்றன.

அந்த நேரங்களில்
எதையும் பிடிக்காத,
எதையும் நிரூபிக்காத,
ஆனாலும் தெளிவாக
“இருப்பதாக” உணரப்படும்
ஒன்றே ஜீவன்.

ஜீவன் என்பது
நாம் வைத்த பெயர் அல்ல;
நாம் உணர்ந்து கொள்ளும்
உள்ளார்ந்த தொடர்ச்சி.

---

5, உயிர், மனம், ஜீவன் – வேறுபாடு

உயிர்
உடலை இயக்குகிறது.
உடல் பிறந்து வளர்ந்து
ஒரு நாள் நின்று விடுகிறது.

மனம்
அனுபவங்களைச் சேகரிக்கிறது.
நினைவுகளைச் சேர்க்கிறது.
அவற்றின் அடிப்படையில்
எண்ணங்களை உருவாக்குகிறது.

ஆனால் ஜீவன்—
உயிருக்கும் மனத்திற்கும்
அர்த்தம் தரும்
உள்ளார்ந்த இயக்கம்.

உயிர் ஒரு இயந்திர சக்தி என்றால்,
மனம் ஒரு கருவி என்றால்,
ஜீவன்
அவற்றை இயக்கும்
உள்ளார்ந்த உயிர்ப்பாகும்.

---

6, ஜீவ சக்தி : பொருள் அல்ல, இயக்கம்

மனிதன் ஜீவ சக்தியை
ஒரு பொருளைப் போல
புரிந்து கொள்ள முயன்றான்.
அதைச் சேமிக்கலாம்,
அதிகரிக்கலாம்,
எழுப்பலாம்
என்று நினைத்தான்.

ஆனால் ஜீவ சக்தி
பொருள் அல்ல.

அது
நதி போல ஓடும்
ஒரு இயக்கம்.

நதி நிறுத்தப்படும்போது
அது அழுகும்.
அதேபோல்
ஜீவ சக்தி தடைபடும்போது
வாழ்க்கை சுருங்குகிறது.

---

7, எண்ணம் – சக்தியின் திசைகாட்டி

எண்ணம்
சக்தியின் மூலமல்ல.
சக்தி ஏற்கனவே உள்ளது.

எண்ணம்
அந்த சக்தி
எந்த திசையில்
செல்ல வேண்டும்
என்பதை மட்டும்
சுட்டிக்காட்டுகிறது.

அதனால் தான்
ஒரே மனிதன்
ஒரு தருணத்தில்
அமைதியாகவும்,
மற்றொரு தருணத்தில்
பதற்றமாகவும்
இருக்க முடிகிறது.

---

8, எண்ணம் உருவாக்குவதில்லை, வழிகாட்டுகிறது

எண்ணத்தை அடக்க முயல்வது
சக்தியை அடக்க முயல்வதைப் போன்றது.
அது மேலும் வலுப்படும்.

எண்ணத்தைப் பின்தொடர்வது
சக்தியைச் சிதறடிப்பது போன்றது.
அது பந்தமாகும்.

எண்ணத்தை
கவனிப்பது மட்டும்—
அதன் திசையை
மெல்ல மாற்றுகிறது.

இதுவே
ஞானத்தின் தொடக்கம்.

---

9, பழக்கம், வாசனை, திசை

ஒரே எண்ணம்
மீண்டும் மீண்டும்
திரும்பும் போது
அது பழக்கமாகிறது.

பழக்கம்
உள்ளே ஆழமாக பதியும்போது
அது வாசனையாகிறது.

வாசனை
ஜீவனை
தானாகவே
ஒரே திசையில்
ஓட வைக்கிறது.

இதனால் தான்
மனிதன்
தான் விரும்பாமலே
ஒரே மாதிரியான
வாழ்க்கைச் சூழல்களை
மீண்டும் மீண்டும்
உருவாக்கிக் கொள்கிறான்.

---

10, அகலம் & சுருக்கம் : ஞான மொழி

ஞான மொழி
நல்லது–கெட்டது
என்று பேசுவதில்லை.

அது
அகலம்
சுருக்கம்
என்று மட்டுமே பேசுகிறது.

அகம் சுருங்கும் போது
பயம், ஆசை, பிடிப்பு
பிறக்கின்றன.

அகம் அகலும்போது
அமைதி, கருணை, தெளிவு
இயல்பாக மலர்கின்றன.

---

11, அகச் சுருக்கம் என்றால் என்ன?

அகச் சுருக்கம்
தன்னைப் பாதுகாக்கும்
உள்ளார்ந்த முயற்சி.

“என்ன ஆகிவிடுமோ?”
“என்ன இழந்துவிடுவேனோ?”
என்ற அச்சமே
அகச் சுருக்கத்தின்
மூலக் குரல்.

அந்தச் சுருக்கத்தில் தான்
காமம், பொறாமை, கோபம்
பிறக்கின்றன.

---

12, அக அகலம் என்றால் என்ன?

அக அகலம்
எதையும் பிடிக்காத நிலை.

இது
துறவல்ல.
விலகலும் அல்ல.

அது
உள்ளதை உள்ளபடி
ஏற்றுக் கொள்ளும்
ஒரு உள்நிலை.

அந்த நிலையில்
அதே ஜீவ சக்தி
குண்டலினியாக
அனுபவிக்கப்படுகிறது.

---

13, ஆசை – உள்நிலை விளக்கம்

ஆசை
வெளிப்படையாக
“பெற வேண்டும்”
என்று சொல்லும்.

ஆனால் அதன் உள்ளே
“இழந்துவிடுவோமோ”
என்ற பயம் ஒளிந்திருக்கிறது.

அதனால் தான்
ஆசை நிறைவேறினாலும்
திருப்தி நிலைக்காது.

---

14, பயம் – அகச் சுருக்கத்தின் வடிவம்

பயம்
வெளியில் இருந்து வருவதில்லை.

அது
அகச் சுருக்கத்தின்
உள்ளார்ந்த அதிர்வு.

அகலம் பெருகும் போது
பயம் தானாகவே
தளர்கிறது.

---

15, மரண அச்சம் – அடிப்படை இயக்கம்

மனிதன் கொண்ட
அடிப்படை அச்சம்
மரண அச்சம்.

அந்த அச்சமே
ஆசையாகவும்,
பிடிப்பாகவும்,
பந்தமாகவும்
மாறுகிறது.

மரணத்தைப் புரிந்துகொள்ளும்
தெளிவே
அகச் சுருக்கத்தை
கரைக்கும் விசை.

---

பகுதி – 1 இன் மைய உண்மை

ஜீவன்
ஒழிக்கப்பட வேண்டியது அல்ல.
அடக்கப்பட வேண்டியதும் அல்ல.

அதை
புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தப் புரிதலே
அடுத்த பகுதியை
திறக்கிறது.

— சி எஸ் சிவா

ஒரே சக்தி இரண்டு பாதை

முன்னுரை 

இந்த நூல் ஏன்?

இந்த நூலை எழுதத் தொடங்கிய தருணத்தில்
என்னிடம் ஒரு திட்டமும் இல்லை,
ஒரு இலக்கும் இல்லை.

இருந்தது ஒன்றே—
நான் கடந்த ஒரு நீண்ட, மௌனமான ஆன்மீகப் பயணம்.

ஆரம்பத்தில்
ஆன்மீகம் என நான் புரிந்துகொண்டது
ஒழுக்கம், கட்டுப்பாடு, தவிர்ப்பு.
சிலவற்றைச் செய்யக் கூடாது,
சிலவற்றை அடக்க வேண்டும்,
சிலவற்றை உயர்த்திப் பிடிக்க வேண்டும்
என்று சொல்லப்பட்டது.

ஆனால் அந்த வழியில்
அமைதி கிடைக்கவில்லை.
மௌனமும் கூட
ஒரு உள்போராட்டமாகவே இருந்தது.

அந்தப் போராட்டத்தின் நடுவே
திருவள்ளுவர்
எனக்கு ஒரு புதிய பார்வையைத் திறந்தார்.

அவர் எங்கும்
ஆசையை வெட்டச் சொல்லவில்லை.
எங்கும்
சக்தியை ஒழிக்கச் சொல்லவில்லை.

அவர் சொன்னது
மிக எளிதானது—
அடக்கம் அல்ல, அறிவு.
ஒழுக்கம் அல்ல, தெளிவு.

திருக்குறள்
எனக்கு ஒரு சமய நூலாக அல்ல;
மனிதனைப் புரிந்துகொள்ளும்
உளவியல்–ஞான நூலாக
தோன்றத் தொடங்கியது.

அதன் பிறகே
எனக்குள் ஒரு தெளிவு உருவானது.

என்னுள் ஓடும் சக்தி
ஒரு நாள்
ஆசையாகவும்,
பிடிப்பாகவும்,
பயமாகவும்
மாறுகிறது.

அதே சக்தி
மற்றொரு நாள்
அமைதியாகவும்,
கருணையாகவும்,
தெளிவாகவும்
மாறுகிறது.

அப்போது நான் உணர்ந்தது—

சக்தி மாறவில்லை.
நான் நிற்கும் திசை மட்டுமே மாறியது.

திருவள்ளுவர் கூறும்
“அறிவுடைமை”,
“அடக்கமுடைமை”,
“ஒழுக்கமுடைமை”
எல்லாம்
அடக்கத்தின் மொழி அல்ல.

அவை
அகச் சுருக்கத்திலிருந்து
அக அகலத்திற்கு
நடக்கும் பயணத்தின்
மொழிகள்.

அந்தப் பயணத்தில் தான்
காமம் எனக்கு
குற்றமாகத் தோன்றவில்லை.
குண்டலினி
அதிசயமாகவும் தோன்றவில்லை.

இரண்டையும்
நான் ஒரே ஜீவ சக்தியின்
இரு வெளிப்பாடுகளாக
பார்க்கத் தொடங்கினேன்.

இந்த நூல்
அந்தப் பார்வையின் விளைவு.

இந்த நூலில்
நான் ஒரு ஞானியாகப் பேசவில்லை.
ஒரு உபதேசகராகவும் இல்லை.

ஒரு மனிதனாக,
தன்னைத் தானே
புரிந்து கொள்ள முயன்ற
ஒருவராக மட்டுமே
பேசுகிறேன்.

திருவள்ளுவர்,
திருமூலர், வள்ளலார்,
தாயுமானவர், புத்தர்,
ரமண மகரிஷி,
கபீர், லாவ்-சூ
ஆகியோர்
இந்த நூலில் வருகின்றனர்.

ஆனால் அவர்கள்
மேற்கோள்களாக அல்ல.

என் பயணத்தில்
ஒவ்வொரு திருப்பத்திலும்
ஒரு ஒளியைப் போல
துணை நின்ற
வழிகாட்டிகளாக மட்டுமே.

இந்த நூல்
எதையும் நம்பச் சொல்லவில்லை.
எதையும் நிரூபிக்கவும் வரவில்லை.

இது உங்களுக்குள்
ஒரே ஒரு கேள்வியை
மௌனமாக வைக்கிறது:

என் வாழ்க்கையில்
நான் அனுபவிக்கும்
ஜீவ சக்தி
இப்போது
எந்த திசையில்
ஓடிக்கொண்டிருக்கிறது?

அந்தக் கேள்வியை
நேர்மையாகக் கேட்டால் போதும்.
பதில் தேட வேண்டாம்.

திருவள்ளுவர் சொல்வது போல,
அறிவு தெளிவான இடத்தில்
அடக்கம் தானாகவே நிகழும்.

அந்தத் தெளிவே
இந்த நூலின் நோக்கம்.

இந்த நூல்
படிக்கப்படுவதற்காக அல்ல.
உள்ளே நிகழ்வதற்காக.

சி எஸ் சிவா


தைப்பூசம்

அன்புடையீர்,

வணக்கம்.

தைப்பூசம் என்பது மனிதனை அகத்திற்குள் திருப்பி, அவனுள் மறைந்திருக்கும் அறிவை விழிக்கச் செய்யும் ஒரு ஆன்மீக நினைவுநாள். இந்த நாளில் முருகன் வழிபாடும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் அருளிய ஞானமும் ஒன்றாக கலந்து, மனிதனை தெளிவின் பாதைக்கு அழைக்கின்றன.

முருகன் தத்துவத்தில் “வேல்” என்பது ஆயுதமல்ல; அது அறியாமையை நீக்கும் ஞானத்தின் குறியீடு. மனிதன் தன் உள்ளே எழும் குழப்பம், ஆசை, அகந்தை ஆகியவற்றை உணர்ந்து கடந்து செல்ல வேண்டியதையே கந்தன் வழி சுட்டுகிறது. மலை, குகை, தனிமை போன்ற குறியீடுகள் அனைத்தும், மனிதன் வெளியில் அல்ல — உள்ளே பயணிக்க வேண்டும் என்பதையே நினைவூட்டுகின்றன.

அதேபோல், அருட்பெருஞ்ஜோதி வழி, ஒளியை வெளியில் தேடச் சொல்லவில்லை. அது மனிதனுக்குள் இருக்கும் விழிப்பை எழுப்புகிறது. இன்றைய காலத்தில் நாம் வலியுறுத்த வேண்டியது செயல்களல்ல; விழிப்புணர்வு.
அதன் தொடக்கம் —
செவிக்கு ஞானம் அளித்தல்.

செவி விழித்தால்,
மனம் திறக்கிறது.
மனம் திறந்தால்,
அறிவு தெளிவடைகிறது.
அறிவு தெளிந்தால்,
வாழ்க்கை தானாக மாறுகிறது.

முருகன் “குரு” என அழைக்கப்படுவது, வெளியில் நின்று போதிப்பதற்காக அல்ல; மனிதனுக்குள் உறங்கும் உள்ளகுருவை எழுப்புவதாலே. அந்த உள்ளகுரு ஒளியின் முழுமையான வெளிப்பாடே வள்ளலார் கூறிய அருட்பெருஞ்ஜோதி. ஆகவே, கந்தன் வழி கேட்கத் தயாராக்கும் நிலை; அருட்பெருஞ்ஜோதி வழி உணரச் செய்யும் நிலை.

தாயுமானவர் அருளிய மௌன ஞானம், முருகன் அருளிய குருத் தத்துவம், வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி — மூன்றும் ஒன்றாகும் இடம் விழித்த செவி, அமைந்த மனம், தெளிந்த அறிவு.

இந்த தைப்பூச நாளில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி இதுவாக இருக்கட்டும்:

அறியாமையை அறுப்போம்,
ஞானத்தை செவியில் விதைப்போம்,
ஒளியைத் தேடாமல் — நாமே ஒளியாக மாறுவோம்.

ஆன்மீகம் என்பது வெளிப்புற செயலல்ல.
அது அகத்தில் நிகழும் விழிப்பு.

அன்புடன்,

சி. எஸ். சிவா
நிறுவனர் தலைவர்
தாயுமானவர் ஞான சபை

திங்கள், 26 ஜனவரி, 2026

உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது யாருமில்லை

உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது யாருமில்லை!.

மனிதன் வாழ்க்கையில் அடிக்கடி தேடும் ஒன்று உண்டு—
“என்னைவிட உயர்ந்தது எது?” என்ற கேள்வி.
பணம், பதவி, புகழ், அதிகாரம், அறிவு, ஆன்மிகம் என
ஒவ்வொன்றையும் அளவுகோலாக்கி
தன்னைத் தாழ்த்திக் கொள்வதிலும்
மற்றவர்களை உயர்த்திக் கொள்வதிலும்
அவன் காலத்தை கழிக்கிறான்.

ஆனால் உண்மையில்
உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது யாருமில்லை
என்பது அகங்காரச் சொல்லல்ல;
அது ஆத்ம சத்தியம்.

இந்த உடல் ஒரு உடை.
இந்த மனம் ஒரு கருவி.
ஆனால் இவை இரண்டையும் உணர்ந்து நிற்கும்
அந்த “நான்” —
அதுவே மனிதனின் உச்ச நிலை.

உலகம் பெரியது போல தோன்றுகிறது.
மலைகள் உயரமாக,
கடல்கள் ஆழமாக,
நட்சத்திரங்கள் தொலைவில்.
ஆனால் அவையனைத்தையும்
“இவை மலை”, “இது கடல்”, “அது வானம்”
என்று அறியும் அறிவு எங்கு எழுகிறது?
உன்னிடம்தான்.

உன்னை அறியாமல்
உலகத்தை அறிய முடியாது.
உன்னை உணராமல்
உயர்வு என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லை.

ஒரு மனிதன்
தன்னைத் தாழ்த்திக் கொண்டால்
உலகமே அவனுக்கு மேலாகத் தோன்றும்.
ஆனால்
தன்னை உணர்ந்து கொண்டால்
உலகம் அவனுக்குள் அடங்கும்.

“நான் உயர்ந்தவன்” என்று சொல்வது அகந்தை.
ஆனால்
“என்னுள் உயர்ந்தது ஒன்று இருக்கிறது”
என்று உணர்வது ஞானம்.

அந்த உயர்வு
பிறரை மிதிப்பதில் இல்லை;
பிறரை மதிப்பதில் உள்ளது.
அந்த உயர்வு
எடுத்துக் காட்டுவதில் இல்லை;
உள்ளே அமைதியாக இருப்பதில் உள்ளது.

எனவே
உன்னைவிட இந்த உலகத்தில்
உசந்தது யாருமில்லை—
ஏனெனில்
உலகத்தையே அனுபவிக்கும்
மூலமே நீ.

நீ உன்னை உணர்ந்த நாளே
உலகம் உனக்கு
ஒரு பாடமாக மாறும்.

அன்புடன்,
சி எஸ் சிவா

அபிராமி அந்தாதி பாடல் 18

அபிராமி அந்தாதி பாடல் 
பாடல் 18.

"வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே".

உரைநடை விளக்கம்.

அம்மையே! அபிராமியே! உன்னையும் சிவனையும் ஒன்றாகக் காணும் அர்த்தநாரீசுவரத் திருக்கோலமும், உங்கள் திருமணக் கோலமும் என் உள்ளத்தில் நிலைத்திடும்போது என்னுள் இருந்த ஆணவம் கரைந்து விடுகிறது. அந்த நிலையில், உங்களின் பொலிவு பெற்ற திருவடிகள் என்னை ஆட்கொண்டு அருளாக நிற்கின்றன. அப்போது உயிரைப் பறிக்க வரும் காலனைக் கண்டும் எனக்குப் பயமில்லை ; அவன் வருகைக்குமுன் நீங்கள் தரிசனமாக நிற்பதால், மரணம் முடிவல்ல—அருளின் வாசலாக மாறுகிறது.


யோக–ஞான விளக்கம் :

அபிராமி அந்தாதியின் இந்தப் பாடல், வெளிப்புற பக்தி மொழியில் தோன்றினாலும், உள்புற யோக அனுபவத்தின் உச்சியைச் சுட்டுகிறது.
“வவ்விய பாகத்து இறைவரும், நீயும்” என்று அபிராமி பட்டர் கூறுவது, சக்தி–சிவம் ஒன்றாய் நிலைக்கும் தத்துவ அனுபவத்தின் சுட்டுரை ஆகும்.

சிவம் – சித்தம்.
சக்தி – இயக்கம்.
இவை இரண்டும் தனித்தனியாக இயங்கும் வரை மனிதன் இருமையில் தான் நிற்கிறான்.

இடகலை எனும் சந்திரகலை மேலோங்கினால், மனிதனுள் உலகியல் உணர்ச்சியின் செயல் மேலெழுகிறது.
இன்பம்–துன்பம், பாசம்–வெறுப்பு, பற்றுதல் போன்ற உணர்ச்சிகள் மேலோங்கி, மனம் உலகச் சுழற்சியிலேயே தன்னைப் பிணைத்துக் கொள்கிறது.

பிங்கலை எனும் சூரியகலை மேலோங்கினால், மனிதனுள் ஞானச் செயல் முன்னேறுகிறது.
விவேகம் கூர்மையடைகிறது; சிந்தனை தெளிவடைகிறது; செயல் அகநோக்கில் நகர்கிறது.

அபிராமி பட்டர் கூறும் “உங்கள் திருமணக்கோலம்” என்பது வெளிப்புற கல்யாணம் அல்ல.
அது இடகலையும் பிங்கலையும் தாண்டி சுழுமுனையில் நிகழும் யோகக் கல்யாணம்.

இந்த ஒன்றுதல் நிகழும் போது, சக்தியும் சிவமும் இரண்டாக இல்லாமல் ஒன்றாய் அனுபவமாகின்றன.
அந்த நிலையையே யோகம் பிரம்மசிவ நிலை என அழைக்கிறது.

சுழுமுனையில் நிலைபெறும் மனிதன், பிறப்பு–இறப்புகளை ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்கிறான்.
அதனால் தான் அபிராமி பட்டர், “சிந்தையுள்ளே” இந்த நிலை உறைய வேண்டும் என்று வேண்டுகிறார்.

பாடலில் வரும் “காலன்” என்பது உடல் மரணம் மட்டும் அல்ல;
அது அகங்காரம், அறியாமை, பயம் ஆகியவற்றையும் குறிக்கும்.
பிரம்மசிவ நிலையில் நிலைத்தவனுக்கு காலன் அதிகாரம் இழக்கிறான்.
அதனால் தான் “வெளிநிற்கவே” என்று அருள் வேண்டப்படுகிறது.

இந்த நிலையில் நின்றவன், சக்தியை உள்ளடக்கிய சிவம் தரும் பரமசுகத்தில் திளைத்திருப்பான்.
அது உணர்ச்சிச் சுகமல்ல; மாறாத ஆனந்தம்.
அதனால் அவன் உள்ளம் இளைஞனைப் போல குதூகலமாகவும்,
மார்க்கண்டேயனைப் போல காலத்தால் தொட முடியாத நிச்ச்சலத்திலும் இருக்கும்.


சக்தி–சிவம்
சுழுமுனையில் ஒன்றானால்,
காலனும் மௌனமாக நிற்கிறான்.

இதுவே அபிராமி பட்டர் காட்டிய வழி.
இதுவே யோகம் உணர்த்தும் உண்மை.

அன்புடன்
சி. எஸ். சிவா

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

கற்க கசடற

கற்க கசடற 

மனித வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் வெளிப்புற வெற்றிகள் அல்ல;
உள்ளார்ந்த தெளிவே.
அந்தத் தெளிவுக்கான முதல் படி தான்
“கற்க கசடற” என்ற உன்னதக் கொள்கை.

இந்த ஒரு சொற்றொடர், வழங்கிய ஆன்மீக வழிகாட்டியாகும்.
இது வெறும் கல்வி குறித்த உபதேசம் அல்ல;
ஞானத்தை அடையும் முறையையே சொல்லுகிறது.

கற்றல் என்றால் புத்தகங்களைப் படிப்பது மட்டும் அல்ல.
கேள்வி கேட்பது, சிந்திப்பது,
தன்னுள் நடப்பதை கவனிப்பது —
இவையெல்லாம் சேர்ந்ததே உண்மையான கற்றல்.

ஆனால் அந்தக் கற்றல்
அஹங்காரம், முன்னறிவு,
பாகுபாடு, பிடிவாதம்
இவையால் மாசுபட்டால்
அது அறிவாக மாறாது.

அதனால் தான்
“கசடற” என்று வலியுறுத்தப்படுகிறது.

ஆன்மீகத்தில் கசடு என்றால்
“நான் தெரிந்தவன்” என்ற அகம்பாவம்,
அனுபவம் இல்லாத நம்பிக்கைகள்,
பயம், ஆசை, கோபம் போன்ற
மனக் குழப்பங்களே.

இந்தக் கசடு நீங்கும் வரை
எவ்வளவு கற்றாலும்
அது ஞானமாக மாறாது.

கசடற கற்றவன்
அதிகம் பேச மாட்டான்,
எளிமையாக இருப்பான்,
எல்லோரிடமும் கற்றுக்கொள்வான்,
தன்னைத் தானே கவனிப்பான்.

அவனுக்கு வாழ்க்கையே ஒரு குரு.
ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம்.

உண்மையான ஆன்மீகம்
புதியதைச் சேர்ப்பது அல்ல;
தவறானதை கழிப்பதே.

கற்றுக் கொண்டே இருங்கள்,
ஆனால் ஒவ்வொரு கற்றலிலும்
உங்களைத் தாண்டிச் செல்லுங்கள்.

அப்போது
அறிவு — அனுபவமாகும்;
அனுபவம் — ஞானமாகும்.

அதுவே
“கற்க கசடற”.

அன்புடன்,
சி. எஸ். சிவா

சனி, 24 ஜனவரி, 2026

குறையொன்றுமில்லை

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா !

“குறையொன்றுமில்லை”
என்று மனம் சொல்வது ஒரு வார்த்தை அல்ல.
அது ஒரு ஆன்மீக நிலை.

கண்ணா,
நீ கண்களுக்குப் புலப்படாத மறை மூர்த்தி.
ஆனால் உள்ளத்தின் ஆழத்தில்
நிறைவாக உறையும் நித்ய சாட்சி.

உலகம் எப்போதும்
குறை காட்டிக்கொண்டே இருக்கும்.
இல்லாததை எண்ணச் சொல்லும்,
இழந்ததை நினைவூட்டும்,
எதிர்பார்ப்பை பெருக்கிக்கொள்ளச் செய்யும்.

ஆனால் கண்ணா,
நீ சொல்லும் மௌன மொழி வேறு—

“உனக்கு என்ன இல்லை?”
என்று கேட்பதல்ல,
“உன்னிடம் நான் இருக்கிறேனே”
என்று உணரச் செய்வது.

கண்ணனை தேடுகிறவன்
கோயில்கள் சுற்றுவான்.
கண்ணனை உணருகிறவன்
உள்ளத்திலேயே அமர்வான்.

அங்கே
குறை கரைகிறது.
நிறை பிறக்கிறது.

போர் நிறைந்த குருக்ஷேத்திரத்திலும்
கண்ணன் அமைதியாக இருந்தான்.
ஏனெனில்
அவன் வெளிப்போரில் இல்லை;
உள்ளத்தின் மாயையை
அவன் கடந்திருந்தான்.

நம் வாழ்க்கையும் அப்படித்தான்.
பிரச்சினைகள் தீர வேண்டியதில்லை;
பிரச்சினைகளைப் பார்க்கும்
நம் பார்வை மாறினால் போதும்.

பார்வை மாறும்போது
புகார் மறைகிறது.
நன்றி பிறக்கிறது.
அந்த நன்றியில்
குறை என்ற சொல்லே இல்லாமல் போகிறது.

அப்போது மனம்
ஆழத்திலிருந்து சொல்கிறது—

“குறையொன்றுமில்லை கண்ணா…
நீ உள்ளத்தில் குடியிருக்க,
என்ன குறை?”

இது பக்தியின் உச்சம் அல்ல.
இது ‘நான்’ கரையும் தருணம்.
அகந்தை ஒளியும் பொழுது
அருள் நிறைகிறது.

அந்த நிறைவில்தான்
கண்ணன் தெய்வமாக இல்லை—
நம் உணர்வாக,
நம் மௌனமாக,
நம் சுவாசமாக மாறுகிறான்.

அப்போது தான்
ஆன்மீகம் ஆரம்பமாகிறது.
அப்போது தான்
குறையொன்றுமில்லை
என்ற உண்மை
உயிர் பெறுகிறது.

அன்புடன்,
சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 24

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24 பாடல் : தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்   தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்...