காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24
பாடல் :
தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்
தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும்
ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்
உதயகிரி பாராத வுலுத்த மாடு
வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து
வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக்
கோனென்ற குருபாதம் அடைய மாட்டான்
கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே.
உரைநடை விளக்கம்:
இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் மிகவும் கடுமையாக மனிதர்களின் போலி ஆன்மீக வாழ்க்கையைச் சாடுகிறார்.
தனக்குள் இருக்கும் பிரம்மத்தை அறியாமல், வெளியே ஆயிரம் தெய்வங்கள் என்று அலைந்து திரிவதால் பயன் இல்லை என்று சொல்கிறார்.
“குரு”, “சீடன்” என்று வாயால் பேசிக்கொண்டு, உள்ளே எந்த அனுபவமும் இல்லாமல் வாழ்பவர்களை “உலுத்த மாடு” என்று சித்தர் திட்டுகிறார். “உதயகிரி” — அதாவது உள்ளே எழும் ஞான ஒளியை கூட பார்க்காதவன், ஆன்மீகம் பேசுவதற்கு தகுதியற்றவன் என்பதையே அவர் தாக்கமாகச் சொல்கிறார்.
பொய், களவு, கொலை செய்து, வேசையர் மேலே ஆசை வைத்து, வெளியில் மட்டும் பக்தி வேஷம் போட்டால், அவனால் குருபாதத்தை அடைய முடியாது என்று சித்தர் சொல்கிறார்.
அப்படிப்பட்டவன் இறுதியில் வீழ்வான் என்றும் எச்சரிக்கிறார்.
ஏனென்றால் உள்ளே சுத்தம் இல்லாமல், வெளிப்புற வேஷத்தால் ஞானம் வராது.
பிரம்மத்தை உள்ளே காணாதவன் —
எவ்வளவு ஆன்மீகம் பேசினாலும் வெறும் வாய்ச் சவடால் தான்.
சி. எஸ். சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக