கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.
அபிராமி அந்தாதி பாடல் 16
பச்சை பசுங்கிளியே!
என்றும் மாறாத இளமையுடன் திகழ்கின்ற வாலைத் தாயே! உணர்கின்ற மனதில் உணர்வாகி எனக்கு ஞானத்தை உணர்த்துகின்ற ஒளிவெள்ளமே!
ஒளிர்ந்து கொண்டே இருக்கும் ஒளிகளின் ஆதாரமே! அம்மா!
நினைத்து பார்க்கையில் காட்சிக்கு ஏதுமில்லா வெட்டவெளியாகி நீ நிற்கின்றாய்!
வெட்டவெளியில் இருந்து ஐம்பூதங்கள் ஆகவும், பல்வேறு வகையான உலகங்களாகவும் விரிந்து நிற்பது நீயே! அம்மா!
எவ்வித பெரிய பக்தியும்,யோகங்களையும் செய்தவனா நான் என்று எனக்குத் தெரியவில்லை.அப்படி இருந்தபோதிலும் உன்னை அறிந்து கொள்ளும் அறிவை நீ எனக்கு அளித்தது எனக்கு பேரானந்தம் தாயே!
என்னை எனக்குள் பெருமைப் படுத்தும் தாயே உனக்கு என் பெரு வணக்கம்.
சிவனணைந்த பெருமாள்