புதன், 28 மே, 2025

அபிராமி அந்தாதி பாடல் 16

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

                 அபிராமி அந்தாதி பாடல் 16

 பச்சை பசுங்கிளியே!
என்றும் மாறாத இளமையுடன் திகழ்கின்ற வாலைத் தாயே! உணர்கின்ற மனதில் உணர்வாகி எனக்கு ஞானத்தை உணர்த்துகின்ற ஒளிவெள்ளமே!

 ஒளிர்ந்து கொண்டே இருக்கும் ஒளிகளின் ஆதாரமே! அம்மா!
நினைத்து பார்க்கையில் காட்சிக்கு ஏதுமில்லா வெட்டவெளியாகி நீ நிற்கின்றாய்!
 
வெட்டவெளியில் இருந்து ஐம்பூதங்கள் ஆகவும், பல்வேறு வகையான உலகங்களாகவும் விரிந்து நிற்பது நீயே! அம்மா!

 எவ்வித பெரிய பக்தியும்,யோகங்களையும் செய்தவனா நான் என்று எனக்குத் தெரியவில்லை.அப்படி இருந்தபோதிலும் உன்னை அறிந்து கொள்ளும் அறிவை நீ எனக்கு அளித்தது எனக்கு பேரானந்தம் தாயே!
என்னை எனக்குள் பெருமைப் படுத்தும் தாயே உனக்கு என் பெரு வணக்கம்.

 சிவனணைந்த பெருமாள்

ஞாயிறு, 25 மே, 2025

அபிராமி அந்தாதி 15

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

 "தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே"

                                      அபிராமி அந்தாதி.

 மனிதர்கள் வேண்டுதலுக்கு ஏற்றவாறு இம்மண்ணுலக இன்பங்களையும், பெரும் பதவிகளையும் மட்டும் அல்ல! தவத்தில் சிறந்து விளங்கும் மாதவர்களுக்கு விண்ணுலக செல்வமான  அழியா ஒளியுடம்பையும் அருள்பவளும் அன்னை அபிராமித் தாயே! ஆதலால் 
 அபிராமித் தாயை நோக்கித் தவம் புரிவோம் அருள் பெற்றுவுயர்வோம்.

 சிவனணைந்த பெருமாள்

தாயுமானவர் பாடல்

ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ் செனவுமன
தலையுங் காலம்
மோசம் வரும் ; இதனாலே கற்றதுங்கேட் டதுந்நூர்ந்து
முத்திக் கான
நேசமுநல் வாசமும்போய்ப், புலனாயிற் கொடுமைபற்றி
நிற்ப ரந்தோ!
தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே! நிராசையின்றேற்
றெய்வமுண்டோ?

                         தாயுமான சுவாமிகள் .

 ஆசை எனும் பெருங்காற்று இலவம் பஞ்சு என்ற நிலையில் இருக்கும் மனிதனை அலைக்கழிக்கின்றது !
அம்மனிதன் கற்ற கல்வியும் கேட்டுக்கொண்ட உபதேசங்களும் கெட்டுப்போய் நல்ல முக்தியை நோக்கி அழைத்துச் செல்கிற நல்லுறவுகளையும் கெடுத்துக் கொள்கிறானே!
ஐயோ இது புரிந்தும் பரிதாபமாக நிற்க வேண்டியதாகிறதே!

 பழுத்த பழத்தை போல இருக்கும் பரபரமே! ஆசைகள் அனைத்தும் நிறைவேறாது என்பதாலேயே மனிதர்கள் தெய்வத்தை நோக்கி கை தொழுகின்றனர்.

 சிவனணைந்த பெருமாள்

வியாழன், 15 மே, 2025

அபிராமி அந்தாதி பாடல் 14

தலைமை நிலையைப் பெற!

வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.

                   அபிராமி அந்தாதி பாடல் 14

 வான்காந்த அலைவரிசையில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு வாழும் வானவர்களும்:

,தன்னையறிந்து தலைவனை உணர்ந்து, தலைவர்கள் ஆனவர்களும்,சிந்தினையை செயல்படுத்தும் பிரம்மாக்களும், விளைவுகளை காப்பாற்றி வருகின்ற நாராயணர்களும் ஆகிய அனைவரும் உன் சித்தத்தினாலே இயக்கம் ஆகின்றனர்.

 இந்தவாறு இயங்கும் பிரபஞ்ச உண்மையை உணர்ந்து அறவழியில் நடப்பவர்கள் பரவெளி தருகின்ற பேராணந்த பெருஞ்சுகத்தை அனுபவிக்கும் பரமானந்தர் என்று பெயர் பெற்று வாழ்வர்.இவ்வாறு வாழ்ந்து வருகின்ற பரமானந்தர்கள் இவ்வுலகம் எங்கும் உன்னை சந்தித்து கலந்துரையாடி மகிழ முடியும் என்பதை உணர்த்திய பேரொளி காட்டும் தண்மையான தீயே! எனது அபிராமித் தாயே!

சிவனணைந்த பெருமாள்
நிறுவனர் & தலைவர் 
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை

புதன், 14 மே, 2025

அபிராமி அந்தாதி பாடல் 13

பக்தி வைராக்கியம் ஆக!!!

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

                              அபிராமி அந்தாதி 13.

 அன்பால் பூவைப் போன்ற மலர்ந்த முகத்துடன் ஈரேழு பதினான்கு உலகங்களையும் காத்து அருள்கின்ற அம்மா!!
அரனுக்கும் முன்பிருந்தே அருள்பாலிக்கின்றாய் நீ!
இளமை குன்றாதவன் என்று புகழ் பெற்ற முகுந்தன் ஆகிய நாராயணனுக்கும் இளையவளாகவும் விளங்கி கன்னியாகுமரி எனவும் விளங்குகிறாய் மூத்த முன்னோடியே அம் மா பரம்பொருளே!பராபரமே!

 மாதவம் புரிந்து அறிந்து கொள்ளலாம் உன்னை அன்றி வோறொரு தெய்வம் இல்லை !

 அனைத்தும் உன்னில் இருந்தே உன்னால் உருவாக்கப்பட்டது ஆகும் .
அனைத்தும் உன்னிலே அடக்கமும் ஆகும்.
உணர்ந்து கொண்டேன் அபிராமித்தாயே! ஆதலால் என்னை அடக்கி ஆண்டுகொள்ளே!

 சிவனணைந்தபெருமாள்
நிறுவனர் . தலைவர்                                                     
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை .

சனி, 19 ஏப்ரல், 2025

அபிராமி அந்தாதி பாடல் 12

"கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே".

               அபிராமி அந்தாதி பாடல் 12

 கண் நீ அதன் மூலமாக உன் புகழை கற்றறிந்து கொண்டேன் மணிவாசகம் புரிந்தது.
 உன் இருபாதங்களாலும்.அதைவைத்தே இரவுபகலற்ற இடத்தின் தரிசனம் பெற்றேன்.

 உன்னை எத்தனையோ பேர் பெருமை செய்து வணங்கி வருகிறார்கள்.அப்படியான அறிவு, பக்தி சிறிதும் இல்லாத அடியேனுக்கு நீ வழங்கி அருள்கின்ற ஞானப் பயிற்சிகள் யாவும் கிடைக்கப் பெற்று நான் உயர்வடைய உதவுவது நான் எந்த முற்பிறப்பில் செய்த புண்ணியமோ!ஏழு சக்கரங்கள் மூலமாக சக்தி களமாக பூத்து குலுங்கும் என் அம்மா தாயே!

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

அபிராமி அந்தாதி பாடல் 10

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

அபிராமி அந்தாதி பாடல் 10

நிற்கும் போதும், இருக்கின்ற போதும் நடக்கும் போதும்,
கிடையில் நான் படுக்கையிலும், இறையே உனையடைய எனக்கு  உன்னால் வாழையடி வாழையாக தொடர்ந்து சித்தர்கள் மூலமாக கிடைத்த அருட்பயிற்சிகளில் இருந்து நான் நலுவதுதில்லை உன் நினைவே என் நினைவு எப்போதும்.

என்றும் எமதுள்ளம் உன் மலரடித்தாளை வணங்கிய படியே இருக்கிறது.

வேதங்களினாலும் உன்னை முழுமையாக குறிப்பாக இதுதான், இப்படித்தான் என்று குறிப்பிட்டு எழுதமுடியவில்லை.மனமடங்கி நிற்கத் தெரிந்த மனிதர்கள் உள்ளத்தில் ஒன்றி நடம் ஆடுகின்ற பேரருளே அவர்களுக்கே உனதருளால் எல்லா மறைகளையும் முழுமையாக வெட்டவெளிப்படையாக்குகிறாய்.

உமா தேவியே அன்றும் நீ இமயத்தில் பிறந்தாய், இன்றும் நீ என் இமயத்தில் (இமயம் என்பது இமைகளில் தொடர்ந்து மேம்பட்ட பகுதிகளை குறிக்கிறது) பிறந்துவிட்டால் நானும் பூ, பிஞ்சு ,காய் போன்ற நிலைகளில் அழிந்து விடாமல் முழுவதுமாக கனிந்து ஞானப் பழமாகி விடுவேன்  அருள்புரிவாயாக அன்னையே!

பொருள் விளக்கம் 
சு.சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...