ஞாயிறு, 25 ஜனவரி, 2026

கற்க கசடற

கற்க கசடற 

மனித வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் வெளிப்புற வெற்றிகள் அல்ல;
உள்ளார்ந்த தெளிவே.
அந்தத் தெளிவுக்கான முதல் படி தான்
“கற்க கசடற” என்ற உன்னதக் கொள்கை.

இந்த ஒரு சொற்றொடர், வழங்கிய ஆன்மீக வழிகாட்டியாகும்.
இது வெறும் கல்வி குறித்த உபதேசம் அல்ல;
ஞானத்தை அடையும் முறையையே சொல்லுகிறது.

கற்றல் என்றால் புத்தகங்களைப் படிப்பது மட்டும் அல்ல.
கேள்வி கேட்பது, சிந்திப்பது,
தன்னுள் நடப்பதை கவனிப்பது —
இவையெல்லாம் சேர்ந்ததே உண்மையான கற்றல்.

ஆனால் அந்தக் கற்றல்
அஹங்காரம், முன்னறிவு,
பாகுபாடு, பிடிவாதம்
இவையால் மாசுபட்டால்
அது அறிவாக மாறாது.

அதனால் தான்
“கசடற” என்று வலியுறுத்தப்படுகிறது.

ஆன்மீகத்தில் கசடு என்றால்
“நான் தெரிந்தவன்” என்ற அகம்பாவம்,
அனுபவம் இல்லாத நம்பிக்கைகள்,
பயம், ஆசை, கோபம் போன்ற
மனக் குழப்பங்களே.

இந்தக் கசடு நீங்கும் வரை
எவ்வளவு கற்றாலும்
அது ஞானமாக மாறாது.

கசடற கற்றவன்
அதிகம் பேச மாட்டான்,
எளிமையாக இருப்பான்,
எல்லோரிடமும் கற்றுக்கொள்வான்,
தன்னைத் தானே கவனிப்பான்.

அவனுக்கு வாழ்க்கையே ஒரு குரு.
ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம்.

உண்மையான ஆன்மீகம்
புதியதைச் சேர்ப்பது அல்ல;
தவறானதை கழிப்பதே.

கற்றுக் கொண்டே இருங்கள்,
ஆனால் ஒவ்வொரு கற்றலிலும்
உங்களைத் தாண்டிச் செல்லுங்கள்.

அப்போது
அறிவு — அனுபவமாகும்;
அனுபவம் — ஞானமாகும்.

அதுவே
“கற்க கசடற”.

அன்புடன்,
சி. எஸ். சிவா

சனி, 24 ஜனவரி, 2026

குறையொன்றுமில்லை

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா !

“குறையொன்றுமில்லை”
என்று மனம் சொல்வது ஒரு வார்த்தை அல்ல.
அது ஒரு ஆன்மீக நிலை.

கண்ணா,
நீ கண்களுக்குப் புலப்படாத மறை மூர்த்தி.
ஆனால் உள்ளத்தின் ஆழத்தில்
நிறைவாக உறையும் நித்ய சாட்சி.

உலகம் எப்போதும்
குறை காட்டிக்கொண்டே இருக்கும்.
இல்லாததை எண்ணச் சொல்லும்,
இழந்ததை நினைவூட்டும்,
எதிர்பார்ப்பை பெருக்கிக்கொள்ளச் செய்யும்.

ஆனால் கண்ணா,
நீ சொல்லும் மௌன மொழி வேறு—

“உனக்கு என்ன இல்லை?”
என்று கேட்பதல்ல,
“உன்னிடம் நான் இருக்கிறேனே”
என்று உணரச் செய்வது.

கண்ணனை தேடுகிறவன்
கோயில்கள் சுற்றுவான்.
கண்ணனை உணருகிறவன்
உள்ளத்திலேயே அமர்வான்.

அங்கே
குறை கரைகிறது.
நிறை பிறக்கிறது.

போர் நிறைந்த குருக்ஷேத்திரத்திலும்
கண்ணன் அமைதியாக இருந்தான்.
ஏனெனில்
அவன் வெளிப்போரில் இல்லை;
உள்ளத்தின் மாயையை
அவன் கடந்திருந்தான்.

நம் வாழ்க்கையும் அப்படித்தான்.
பிரச்சினைகள் தீர வேண்டியதில்லை;
பிரச்சினைகளைப் பார்க்கும்
நம் பார்வை மாறினால் போதும்.

பார்வை மாறும்போது
புகார் மறைகிறது.
நன்றி பிறக்கிறது.
அந்த நன்றியில்
குறை என்ற சொல்லே இல்லாமல் போகிறது.

அப்போது மனம்
ஆழத்திலிருந்து சொல்கிறது—

“குறையொன்றுமில்லை கண்ணா…
நீ உள்ளத்தில் குடியிருக்க,
என்ன குறை?”

இது பக்தியின் உச்சம் அல்ல.
இது ‘நான்’ கரையும் தருணம்.
அகந்தை ஒளியும் பொழுது
அருள் நிறைகிறது.

அந்த நிறைவில்தான்
கண்ணன் தெய்வமாக இல்லை—
நம் உணர்வாக,
நம் மௌனமாக,
நம் சுவாசமாக மாறுகிறான்.

அப்போது தான்
ஆன்மீகம் ஆரம்பமாகிறது.
அப்போது தான்
குறையொன்றுமில்லை
என்ற உண்மை
உயிர் பெறுகிறது.

அன்புடன்,
சி. எஸ். சிவா

வெள்ளி, 23 ஜனவரி, 2026

நீங்கள் நல்லா இருக்கனும் நாடு முன்னேற

நீங்கள் நல்லா இருக்கனும் – நாடு முன்னேற

நீங்கள் நல்லா இருக்கனும்…
இது ஒரு தனிப்பட்ட ஆசை மாதிரி தோன்றலாம்.
ஆனால் உண்மையில்,
இது ஒரு நாட்டின் எதிர்காலத்துக்கான பிரார்த்தனை.

ஒரு மனிதன் நல்லா இருந்தால்
அவன் மனம் சுத்தமாகும்.
மனம் சுத்தமானால்
அவனின் சொல் சீராகும்.
சொல் சீரானால்
செயல் நேர்மையாகும்.
செயல் நேர்மையானால்
அந்த ஒரு வாழ்க்கை மட்டுமல்ல,
அதைச் சுற்றியுள்ள பல வாழ்க்கைகளும்
ஒளி பெறத் தொடங்கும்.

நாடு முன்னேறுவது
பெரிய திட்டங்களால் அல்ல.
பெரிய மேடைகளில் பேசப்படும்
பெரிய வார்த்தைகளாலும் அல்ல.
அது ஆரம்பிக்கிறது
ஒரு சாதாரண மனிதன்
“நான் நல்லா இருக்கனும்”
என்று உள்ளுக்குள் உறுதி கொள்வதில்.

நல்லா இருக்கிறேன் என்பதற்கு
பணம் மட்டும் காரணம் அல்ல.
புகழ் மட்டும் அடையாளம் அல்ல.
உள்ளத்தில் நிம்மதி,
சிந்தனையில் தெளிவு,
செயலில் கருணை —
இவை இருந்தால்
அவனே ஒரு வளர்ச்சியின் மையம்.

ஒரு வீட்டில் ஒருவர் நல்லா இருந்தால்
அந்த வீடு அமைதியாகும்.
ஒரு தெருவில் பலர் நல்லா இருந்தால்
அந்த தெரு பாதுகாப்பாகும்.
ஒரு சமூகத்தில் மனிதர்கள் நல்லா இருந்தால்
அந்த சமூகம் நியாயமாகும்.
அதுவே மெதுவாக
ஒரு நாட்டின் முதுகெலும்பாக மாறும்.

ஆன்மீகம் என்பதும்
உலகத்தை விட்டு ஓடுவது அல்ல.
உலகத்துக்குள் இருந்தே
உள்ளத்தை சீராக்கிக் கொள்வதே.
நான் அமைதியாக இருந்தால்
நான் யாரையும் காயப்படுத்த மாட்டேன்.
நான் நிதானமாக இருந்தால்
நான் அநீதிக்கு இடம் தர மாட்டேன்.
இதுவே ஆன்மீகம் சமூகமாக மாறும் தருணம்.

“நீங்கள் நல்லா இருக்கனும்”
என்று சொல்வது
ஒரு வாழ்த்தல்ல மட்டும்.
அது ஒரு பொறுப்பு.
ஏனெனில்
நீங்கள் நல்லா இருந்தால்தான்
இந்த நாடும் நிம்மதியாக
முன்னேற முடியும்.

நாடு என்பது
ஒரு வரைபடம் அல்ல.
நாடு என்பது
நீங்களும் நானும்.
நாம் நல்லா இருந்தால்
நிச்சயமாக
நாடு முன்னேறும்.

அன்புடன்,
சி எஸ் சிவா

வியாழன், 22 ஜனவரி, 2026

நிதானம் தான் உயர்ந்த தானம்

நிதானம் தான் உயர்ந்த தானம்:

ஆன்மீகப் பாதையில் மனிதன் தேடுவது அமைதியையே. ஆனால் அந்த அமைதிக்கு வழிகாட்டுவது நிதானம் தான். நிதானம் என்பது வெளிப்புற அமைதி அல்ல; அது உள்ளத்தின் சமநிலை ஆகும். சூழ்நிலைகள் எவ்வாறு மாறினாலும் மனம் தடுமாறாமல் இருப்பதே நிதானத்தின் அடையாளம்.

அவசரத்தில் பிறக்கும் சொற்கள் உறவுகளைச் சிதைக்கும்; நிதானத்தில் பிறக்கும் சொற்கள் உறவுகளைச் சீராக்கும். கோபம் எழும்போது அதைக் கட்டுப்படுத்தும் சக்தியும், துன்பம் வந்தபோது அதைத் தாங்கும் பொறுமையும் நிதானத்திலிருந்தே பிறக்கின்றன. இதுவே மனிதனை மனிதனாக்கும் தானம்.

பணம் பொருள் புகழ் என அனைத்தும் காலத்தால் அழியும். ஆனால் நிதானம் உள்ள மனிதன் எங்கு இருந்தாலும் ஒளியாய் விளங்குவான். அவன் வாழ்க்கை பிறருக்குப் பாடமாகும். நிதானம் என்பது ஒருவருக்குள் மட்டும் நிற்கும் செல்வம் அல்ல; அது சுற்றியுள்ளவர்களுக்கும் அமைதியைப் பரப்பும் அருள்தானம்.

ஆன்மீகம் என்பது மலையிலும் மடத்திலும் மட்டும் இல்லை. தினசரி வாழ்க்கையில் நிதானமாக நடப்பதே உயர்ந்த சாதனை. அதனால் தான் சொல்லலாம்—
தானங்களிலே தலைசிறந்த தானம் நிதானம் தான் என்று.

அன்புடன்,
சி எஸ் சிவா

குந்துக்கல் விவேகானந்தர் மடம்

18/01/2026 – என் அனுபவம்

ஞானத்துடன் எவர் வந்தாலும்
அவர் தலையில் கிரீடம் சூட்டி,
அவர் பாதங்களை கையில் ஏந்தி,
வரவேற்று அழகு பார்க்கவே
சூட்சுமமாய் பேராற்றல் கொண்ட
ஆன்மாக்கள் அலைஅலையாய் கூடும்
இடம்…
ராமநாதபுரம் மாவட்டத்தில்,
ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள
குந்துக்கல் விவேகானந்தர் மடம்.
சி. எஸ். சிவா

புதன், 21 ஜனவரி, 2026

திருமந்திரம் 1

திருமந்திரம் – பாடல் 1

பாடல் :

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.

உரைநடை விளக்கம் :

இந்தப் பாடலில், திருமூலர் மனித உடலுக்குள் நிகழும் முழு ஆன்மப் பயணத்தையும் எண்ணிக்கை மொழியில் மறைநூலாக வெளிப்படுத்துகிறார்.
இங்கு ஒன்று முதல் எட்டு வரை கூறப்படுவது கணக்கல்ல; அது அனுபவ நிலைகள்.

ஒன்று – மூலாதாரம் (ஓரிதழ்):
உயிர் உடலோடு உறைந்து நிற்கும் அடிப்படை நிலை.
சக்தி உறங்குகிறது. இருப்பு மட்டும் உள்ளது.

இரண்டு – சுவாதிஸ்டானம் (ஈரிதழ்):
இரட்டை இயக்கம் தொடங்குகிறது.
இன்ப–துன்பம், ஆசை–விருப்பு.
சக்தி விழிப்பெடுக்க ஆரம்பிக்கிறது.

மூன்று – மணிபூரகம் (மூவிதழ்):
செயல், விருப்பு, அறிவு ஆகிய மூன்று குணங்கள் இயங்கும் நிலை.
அக்னி சக்தி வலுப்பெறுகிறது.
சாதகனுக்குள் தன்னம்பிக்கை உருவாகிறது.

நான்கு – அநாகதம் (நாவிதழ்):
உணர்வு விரிவடைகிறது.
கருணை, சமநிலை, உள்ளுணர்வு மலர்கிறது.
‘நான்’ மெலிந்து, உயிர்கள் ஒன்றென உணரும் நிலை.

ஐந்து – விசுத்தி (ஐயிதழ்):
புலன்களின் பிடி தளர்கிறது.
சொல், மனம், உண்மை ஒரே ஓட்டமாகிறது.
நாத அனுபவம் தெளிவாகிறது.

ஆறு – ஆஜ்ஞை (ஈரிதழ், ஒளியுடன்):
அகங்காரம் வெல்லப்படுகிறது.
இருவிழி ஒன்றாகிறது.
உள் ஒளி அனுபவமாகிறது.
குரு அருள் தெளிவாக வெளிப்படும் நிலை.

ஏழு – சகஸ்ராரம் (ஆயிரம் இதழ்):
சக்தி எல்லையற்ற விரிவை அடைகிறது.
தனித்த ‘நான்’ இல்லை.
இருப்பே உணர்வாகிறது.

எட்டு – துரியம் (பிரபஞ்ச விரிவு):
உயிர், சக்தி, சிவம் ஒன்றாகிறது.
அனுபவிப்பவன் இல்லை.
அனுபவமும் இல்லை.
இருப்பு மட்டும்.

அதன் பின் :
முழுமையான வெட்டவெளி.
அங்கே அனுபவம் கூட இல்லை.
வேறொன்றுமில்லை.

இந்த முதல் பாடலிலேயே,
திருமூலர் —
முழு யோகப் பாதையையும்,
முழு ஞானப் பயணத்தையும்
ஒரே செய்யுளில் நமக்கு வெளிப்படுத்தி விடுகிறார்.

துணிச்சல்

துணிச்சலின் பயணம்.

வாழ்க்கை சில நேரம்
கடினக் காற்றாய் மோதும்,
நம்மை சிதறடிக்க நினைக்கும்
சோதனைகளின் வீச்சில்.

விழுந்த இடம் மண்ணல்ல,
எழும் இடம் நம்முள்ளம்,
தோல்வி நம்மை முடிக்காது,
துணிச்சல் தான் நம்மை உருவாக்கும்.

நாம் தப்பித்தவர்கள் அல்ல,
தாங்கி வந்த வீரர்கள்,
வலி கற்றுத் தந்த பாடமே
நம் வலிமையின் மூலவேர்.

வாழ்க்கை எதை எறிந்தாலும்,
அதை தாங்கும் நெஞ்சமுண்டு,
புயலும் பயம் காணும்
நம் மனத் துணிச்சலைக் கண்டு.

இன்று ஒரு புதிய நாள்,
நம்பிக்கை மலரும் நேரம்,
நம் நடை உலகம் காணும்,
நாம் வெல்லும் பாதையை.

சிவா 

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...