செவ்வாய், 16 டிசம்பர், 2025

முன்னுரை

முன்னுரை:

எமது பெயர் சி. எஸ். சிவா.

தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளையை கட்டமைத்து, இறைவன் அருளால் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், தாயுமான சுவாமிகள் அருளிய பராபரக்கண்ணி பாடல்களுக்கு உரையெழுதி வெளியிட வேண்டும் என்ற ஆவல் எம்முள் நீண்ட நாள்களாக இருந்து வந்தது.


அந்த ஆவல் இன்று நூலாக உருவெடுத்து, உங்கள் கைகளில் தவழ்வது, தாயுமான சுவாமிகள் மொழிந்ததுபோல் கூறின், பராபரத்தின் அருளாலேயே நிகழ்ந்ததாக நம்புகிறேன்.


எமது சபையின் அருளாளர்கள் மற்றும் அன்பர்கள் அளித்த பேருதவியின் காரணமாகவே இந்நூல் உருவெடுத்துள்ளது. குறிப்பாக,

தாயுமானவர் ஞான சபையின் பொருளாளர் தம்பி அ. அஜீத் குமார்,

தம்பி எஸ். விமல் பொன்ராஜ்,

மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தாயுமான சுவாமிகள் அருளிய பராபரக்கண்ணியில் மொத்தமாக 389 கண்ணிகள் இருந்தாலும், இந்நூலில் தற்சமயம் எம்மால் இயன்ற அளவாக 130 கண்ணிகளுக்கு உரைநடை வடிவில் விளக்கங்களை அளித்துள்ளோம்.


எனது சிறுவயதிலிருந்தே வறுமை என்னைத் துரத்தியது. வாழ்க்கைச் சூழ்நிலைகளால் பல்வேறு இடங்களில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மனித உருவில் இருந்தாலும் விலங்கு மனம் கொண்ட சிலரின் கேலிக்கும், கிண்டலுக்கும், கடுஞ்சொற்களுக்கும் ஆளானதால், தாழ்வுமனப்பான்மை எனும் மனச்சுமை என்னுள் ஆழமாக வேரூன்றியது.


அந்தக் காலகட்டத்தில், இயற்கை ஞான சபையில் இணைந்து தீட்சை பெற்றது என் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. என்னை ஊக்கப்படுத்தி, ஆன்மீகப் பாதையில் வளர்த்தெடுத்ததில் பெரும்பங்கு ஆற்றியவர், அன்று சென்னை வில்லிவாக்கம் கிளைத் தலைவராக விளங்கிய திரு எம். ஜெகதீசன் அவர்கள் ஆவார்.


அந்த நாட்களில், சபையின் தலைவர் குருநாதர் தங்க சுவாமிகள் எனக்கு ஞானத் தந்தையாகவும், அண்ணன் ஜெகதீசன் அவர்கள் ஞானத் தாயாகவும் விளங்கினர். அந்த அனுபவக் காலங்களில், “தாயுமானவர்” என்ற பெயர் என் மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது.


ஒருநாள், சபையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் என்னை பேசுமாறு கேட்டார்கள். தாழ்வுமனப்பான்மையால் ஏற்பட்ட கூச்சத்தை அடக்கிக்கொண்டு,

“பிரியாத வரம் வேண்டும்” என்ற தலைப்பில் என் முதல் கன்னிப் பேச்சை வழங்கினேன்.

அந்தப் பேச்சில், “நீங்கள் இருவரும் எனக்கு தாயும் தந்தையும் ஆக இருந்து வழி நடத்துகிறீர்கள்” என்று மனம் திறந்து கூறினேன்.


எனது ஆன்மீக வளர்ச்சிக்காக பைபிள், நான்கு வேதங்கள், பகவத் கீதை போன்ற நூல்களை ஆராய்ந்து வருவதைக் கண்டு, அண்ணன் ஜெகதீசன் அவர்கள்,

“தாயுமானவர் நூல்களை ஆழ்ந்து படி; அது உன் ஆன்மீகத் தேடலுக்கு பெருந்துணையாக இருக்கும்” என்று அறிவுறுத்தினார்.

அந்தக் கணத்திலிருந்தே, என் கவனம் தாயுமானவர் பக்கம் முழுமையாகத் திரும்பியது.


பல காரணங்களால், அண்ணன் ஜெகதீசன் அவர்களே எனது நேரடிக் குருநாதராக அமைந்தார். அது நல்வினையின் பயன் என இன்றும் உணர்கிறேன். காரணம், இன்று தாயுமானவர் பாடல்களை உணர்ந்து வாசிப்பதோடு மட்டுமல்ல, அவற்றை எடுத்துரைக்கும் அளவிற்கு தேறியுள்ளேன் என்பதே எனக்கு அளவிட முடியாத நன்றியுணர்வும் ஆனந்தமும் அளிக்கிறது.


ஒரு நாளில், “பராபர வெளி என்றால் என்ன?” என்பதை என் குருநாதர் விளக்கிய அந்தக் கணமும், அந்த இடமும், இன்றும் என் நினைவில் மங்காத அனுபவமாகத் திகழ்கிறது.


அப்போது வரை, “எல்லாம் தலைக்குள் தான்” என்று நினைத்திருந்த என்னிடம்,

“மகனே, தலையும் உடலும் அழியும். அழியும் ஒன்றினுள் பேரானந்தப் பெருஞ்சுகம் தரும் சிவம் வந்து தங்குவதில்லை” என்று கூறி,

“கண்ணை மூடி, சும்மா இரு” என்றார்.


எந்தப் பயிற்சியும் இன்றி, அரைமணி நேரம் போல நான் வெளி உலகை மறந்து அமர்ந்திருந்தேன். மன அலைச்சல்கள் அடங்கி, ஒரு வாசல் திறந்தது போல் உணர்வு ஏற்பட்டது. இருளுக்குள் பயணிப்பது போன்ற, ஆனால் அச்சமற்ற, அலைவில்லா அனுபவம் அது.


பின்னர்,

“மண்டைக்குள் தான் எல்லாம் என்ற சிறையிலிருந்து நீ வெளியே வந்தாய். இப்போது பறக்கத் தொடங்கியிருக்கிறாய்” என்று அவர் கூறிய வார்த்தைகள் என் வாழ்க்கையை மாற்றின.


அந்த நாளிலிருந்து,

தாயுமான சுவாமிகளின் பாடல்களோடு,

அவர் மொழியில்,

அவர் எழுத்தில்,

உருகி, கரைந்து பயணிக்கத் தொடங்கினேன்.


தமிழ் எனும் அமுதக் கடலில் நான் இன்னும் கரையருகில்தான் நிற்கிறேன் என்ற உண்மையை உணர்ந்து, எமக்குத் தெரிந்த அளவில், சில உதவிகளையும் ஆதாரங்களையும் துணையாகக் கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளோம்.


குறைகள் இருப்பின், அருளாளர்கள் அருள்கூர்ந்து மன்னித்தருள வேண்டுகிறேன்.


இப்படிக்கு,

சி. எஸ். சிவா

நிறுவனர் & தலைவர்

தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை

ஔவையார் நல்லாரை பாடல்

" நல்லாரைக் காண்பதும்
நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதும்
நன்றே- நல்லார்
குணங்கள் உரைப்பதும்
நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும்
நன்று."

ஔவையார்.

விளக்கம்:
நல்ல மனிதர்களைக் காண்பதும், அவர்களின் நல்ல சொற்களைக் கேட்பதும், அவர்களுடைய நற்குணங்களைப் பேசுவதும் மனிதனுக்கு நன்மை தரும். குறிப்பாக நல்லவர்களோடு இணங்கி வாழும்போது, அவர்களின் பண்புகள் நம்மையும் நல்லவர்களாக மாற்றுகின்றன. ஒருவர் யாருடன் பழகுகிறாரோ, அதன்படி அவருடைய வாழ்க்கையும் வடிவமைக்கப்படுகிறது. ஆகவே நல்ல வாழ்க்கைக்கான எளிய வழி நல்ல மனிதர்களைத் தேர்ந்து கொண்டு அவர்களுடன் பழகுவதே என ஔவையார் எடுத்துரைக்கிறார்.

சி எஸ் சிவா

திங்கள், 15 டிசம்பர், 2025

இடைக்காடர் பைபிள் 2

எல்லா வுலகமு மெல்லா வுயிர்களும்
எல்லாப் பொருள்களு மெண்ணரிய
வல்லாள னாதி பரம சிவனது
சொல்லா லாகுமே கோனாரே


1. கலாத்தியர் 1:16
"ஏனெனில் அவர் மூலம் வானமும் பூமியும், தோன்றும் அனைத்து விஷயங்களும் படைக்கப்பட்டன."

இது “எல்லாப் பொருள்களும் வல்லாள நாதியில் உள்ளது” என்ற சிந்தனைக்கு இணையானது.


2. யோவான் 1:3
"அவர் மூலம் எல்லா விஷயங்களும் உருவானது; உருவான ஒன்றும் அவரோடு இல்லாமல் உருவானதில்லை."

 இது “எல்லா உயிர்களும் அவரால் இயங்குகின்றன” என்பதற்கான நேரடி உபதேசம்.


3. ரோமர் 11:36
"எல்லாம் அவருடையவை; எல்லாம் அவரிடமிருந்து வருகிறது; எல்லாம் அவருக்கே இருக்கும்."
— பரம்பொருள் அனைத்தையும் ஆளுகிறது, எல்லாவற்றையும் உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

சி எஸ் சிவா 

இடைக்காடர் பைபிள்

ஆதி யந்தமில் லாதவ னாதியைத்
தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்
மோ துறும்படி முப்பொறி யொத்துறக்
காத லாகக் கருத்திற் கருதுவாம்.

இடைக்காட்டுச் சித்தர் பாடல் 1

இந்த பாடலுக்கு ஏற்றவாறு பைபிள் வசனம்


1. ஆதி யந்தமில் லாதவ னாதியைத்

> ஆரம்பத்தில் இருந்து எம்மை நேசிக்கும் ஆதிபரமேயே, அவரைப் பின்பற்ற வேண்டும்.

பைபிள் வசனம்:
“ஆரம்பத்தில் தேவன் வார்த்தையோடு உலகத்தை உருவாக்கினார்; அவர் வார்த்தையே எல்லாவற்றிற்கும் ஆதாரம்.”
– யோவான் 1:1-3


2. தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்

> தீமை விட்டு தூய்மையை தேர்ந்தெடு, போலியான ஆசைகள் விட்டு விலகு.

பைபிள் வசனம்:
“மனத்திலும் செயலிலும் தூய்மையாக இருக்குப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவர்; அவர்கள் தேவனை காண்பர்.”
– மத்தேயு 5:8


3. மோ துறும்படி முப்பொறி யொத்துறக்

> உலகப் பொறிமுறைகளை விட்டு, இறைவனை பின்பற்றுங்கள்; முயற்சி செய்து நிலைத்திருங்கள்.

பைபிள் வசனம்:

“உலகத்தைச் சீறாதீர்கள்; மனமும் சிந்தனையும் தேவனுக்கே இருக்கட்டும். உங்கள் மனங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.”
– ரோமர் 12:2

4. காத லாகக் கருத்திற் கருதுவாம்

> அன்பும் நம்பிக்கையும், மனப்பூர்வமான சிந்தனைகளும் கடைசியாக அனைத்து செயல்களையும் வழிநடத்தட்டும்.

பைபிள் வசனம்:
“எல்லா விஷயங்களிலும் அன்பை முன் வையுங்கள்; அன்பு அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றும்.”
– கொரிந்தியர் 13:13

சி எஸ் சிவா 

தாயுமானவர் அருளிய திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் 1,2,3 பாடல்கள்

தாயுமான சுவாமிகள்
திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளோடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கு இச்சை வைத்து உயிர்க்குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமய கோடிகளெல்லாம்
தம் தெய்வம் எம் தெய்வமென்று
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளதெது மேல்
கங்குல்பகல் அற நின்ற எல்லையுளதெது அது
கருத்திற்கு இசைந்ததுவே
கண்டன எல்லாம் மோனவுரு வெளியதாகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்!

உரைநடை விளக்கம் :

பரசிவம் என்பது பரவெளி — எல்லையற்ற ஆனந்த வெளி. அது “இங்கே–அங்கே” என்ற வேறுபாடின்றி எங்கும் பரந்து ஒளிர்கிறது. அந்தப் பரவெளியே அருளின் வடிவமாக இருந்து, எண்ணிலடங்கா உலகங்களையும் தாங்கி நிற்கிறதாகும்.

அவனே எல்லா உயிர்களுக்கும் உயிராய், உள்ளிருந்து இயக்கும் ஆதார சக்தியாக திகழ்கிறான். மனம், வாக்கு, உடல்—எதிலும் தடைபடாமல் நிற்கும் நிரந்தர உண்மை அவனே.

பல்வேறு சமயங்கள் தத்தம் தெய்வத்தை உயர்த்திப் பேசினாலும், அவை அனைத்துக்கும் அடிப்படையான ஒரே பரம்பொருள் இதுவே. எங்கும் நிறைந்து, அனைத்தையும் அறிந்த சித்துச் சக்தியாக இருந்து, என்றுமென்றைக்கும் இன்பமாக நிலைத்திருக்கிறான்.

இரவு–பகல், ஆரம்பம்–முடிவு போன்ற எல்லைகளையும் தாண்டி, காலத் தாண்டிய தத்துவ நிலையாக விளங்குவான். உண்மையைத் தேடும் சுத்தமான எண்ணங்களுடன் ஒத்துப்போய் அவற்றை வழிநடத்துவதும் இதுவே.

நாம் காண்பதெல்லாம் மௌன வடிவில் விளங்கும் அந்தப் பரவெளியின் வெளிப்பாடே என்று உணர்ந்து, நெஞ்சார வணங்குவோம்.

பாடல் 2

ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும்
உறவனந் தம்வினையினால்
உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத்
தோஅனந் தம்பெற்றபேர்
சீரனந் தஞ்சொர்க நரகமும் அனந்தநற்
றெய்வமும் அனந்தபேதந்
திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான
சிற்சத்தியா லுணர்ந்து
காரனந் தங்கோடி வருஷித்த தென அன்பர்
கண்ணும்விண் ணுந்தேக்கவே
கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநங்
கடவுளைத் துரியவடிவைப்
பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம்.

---

உரைநடை விளக்கம்

இந்தப் பாடலில் தாயுமானவர், மனிதன் அனுபவிக்கும் உலக வாழ்க்கை முதல் இறைஞான அனுபவம் வரை உள்ள நிலைகளை ஒரே பார்வையில் எடுத்துரைக்கிறார்.

உலகத்தில் எண்ணற்ற ஊர்கள் உள்ளன. மனிதனுக்கு பல பெயர்களும், பல உறவுகளும் உண்டு. இவை அனைத்தும் முன் செய்த கர்மாவின் பயனாக உருவானவை. உடலும், உடலால் செய்யப்படும் செயல்களும், மன எண்ணங்களும் முடிவில்லாதவையாகத் தோன்றினாலும், அவற்றின் அடிப்படையும் வினைச் சங்கிலியே. எனவே இவை அனைத்தும் நிலையான சத்தியம் அல்ல என்பதை சுவாமிகள் உணர்த்துகிறார்.

அதேபோல் சொர்க்கமும் நரகமும், பலவிதமான தெய்வங்களும், பல சமயங்களும் — இத்தனை வேறுபாடுகளும் இந்த உலகில் எண்ணிலடங்காத அளவில் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் அஞ்ஞானத்தின் விளைவுகளே. இவற்றின் பின்னால் நிற்கும் ஒரே சத்தியத்தை “சிற்சத்தியம்” எனப்படும் ஞான அனுபவத்தின் மூலம் தான் உணர முடியும் என்று அவர் கூறுகிறார்.

அந்தப் பரம்பொருள் என்பது கோடி கோடி வருடங்களாகச் செய்யப்பட்ட தவங்களாலும் எளிதில் அறிய முடியாதது. ஆனால் அன்பு நிறைந்த மனதுடையவர்கள் மீது ஆனந்த மழையாக பொழியும் துரிய நிலை வடிவத்தில் அது வெளிப்படுகிறது. இந்த துரிய நிலை என்பது விழிப்பு, கனவு, நித்திரை ஆகிய நிலைகளைத் தாண்டிய உயர் ஆன்மீக நிலையாகும்.

வேதங்களும் மறைகளும் அந்தப் பரம்பொருளைப் பற்றி பேசினாலும், அவைகள் இறுதியில் சுட்டிக்காட்டுவது சொல்லால் விவரிக்க முடியாத பெரிய மௌன நிலையைத் தான். அந்த மௌனத்தில்தான் உண்மையான ஞானமும், எல்லையற்ற ஆனந்தமும் ஒன்றுபட்டு விளங்குகின்றன.

இதனால், சொல்லாலும் சிந்தனையாலும் எட்ட முடியாத
அனந்த ஞான ஆனந்தத்தின் உருவான
அந்தப் பரம்பொருளையே நாம் பணிந்து வணங்க வேண்டும்
என்ற ஆழ்மையான இறுதி உண்மையை
இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது.

பாடல்.3

அத்துவித வத்துவைச் சொப்ரகாசத்தனியை
அருமறைகள் முரசறையவே
அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான
ஆதியை அநாதியேக
தத்துவ சொருபத்தை மதசம்ம தம்பெறாச்
சாலம்ப ரகிதமான
சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப
சாந்தபத வ்யோமநிலையை
நிர்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ் சப்பொருளை
நிர்விஷய சுத்தமான
நிர்விகாரத்தைத் தடத்தமாய் நின்றொளிர்
நிரஞ்சன நிராமயத்தைச்
சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு
திவ்யதே சோமயத்தைச்
சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர
தேவதையை அஞ்சலிசெய்வாம்.

உரைநடை விளக்கம்

இந்தப் பாடலில் தாயுமானவர் கூறும் பரம்பொருள் — இரண்டல்லாத ஒரே சத்தியம். அது பரவெளி / வெட்டவெளி போல வடிவமற்ற, எல்லையற்ற உண்மை. அந்த உண்மை தன்னாலேயே பிரகாசிப்பதால் “சொப்ரகாசம்” எனப்படுகிறது. அதையே வேதங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

அவன் மனிதனின் அறிவைத் தாண்டி அல்லாமல், அறிவுக்குள்ளேயே அறிவாய் இருப்பவன். எப்போதும் ஆனந்தமயமாகவும், தொடக்கமற்ற ஆதியாகவும் விளங்குகிறான்.

அவன் தத்துவத்தின் சொந்த வடிவம். எந்த ஒரு மத எல்லையாலும் முழுமையாக அடக்கப்படாதவன். எதையும் சாராமல் இருப்பவன்; அதே சமயம் அனைத்திற்கும் ஆதாரமானவன். அவனது நிலையே சாந்தபதம் — அமைதியால் நிரம்பிய வியோம நிலை, அதாவது எல்லையற்ற பரவெளி.

அந்த பரம்பொருள் களங்கமற்றவன்; புலன்சார்ந்த அனுபவங்களிலிருந்து விலகிய தூய்மையானவன். எந்த மாற்றமும் இன்றியவன். தடையின்றி தானாகவே ஒளிரும் நிரந்தர சத்தியம். அவன் கறை இல்லாதவன், துன்பமற்றவன்.

அத்தகைய பரம்பொருள் வெளியில் தேடி அடைய வேண்டியவர் அல்ல. சித்தம் அறியாமலேயே சித்தத்துள் ஒளிர்பவன். சுத்த சிந்தனையின் பரவெளியில் இயல்பாகவே வெளிப்படும் தெய்வ ஒளியே அவர்.

அந்தச் சுத்த சித்வெளிக்குள் (பரவெளியில்) உயர்ந்து விளங்கும்
பரசிவத் தத்துவமான அந்தப் பெரிய பரம்பொருளுக்கு
நாம் பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறோம் என
இந்தப் பாடல் நிறைவுறுகிறது.

சி எஸ் சிவா 





துரியாதீதம்

துரியாதீதம் – உரைநடை விளக்கம்

துரியாதீதம் என்ற சொல்லை நாம் அடிக்கடி கேட்கிறோம். நூல்களில் படிக்கிறோம். உரைகளில் விவாதிக்கிறோம். ஆனால் உண்மையில் அது நமக்கு அனுபவமாக இல்லை. அதனால் தான் அது நம்மிடம் ஒரு உயிருள்ள உண்மை ஆகாமல், சொல்லாடலாக மட்டுமே நிற்கிறது.

மெய்ஞ்ஞானிகள் முன்னிலையில் நாம் இருப்பது ஒரு தனி அனுபவம். அங்கே நம்முடைய முயற்சி, சாதனை, பயிற்சி எல்லாம் பின்னால் தள்ளப்பட்டு விடுகிறது. மனம் தானாகவே அடங்குகிறது. சிந்தனை ஓசை குறைகிறது. “நான்” என்ற உணர்வு மெலிதாகிறது. அந்த நிலையில் தியானம் செய்வதில்லை; தியானம் நிகழ்கிறது. இதுவே துரியம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் துரியாதீதம் அப்படியல்ல. அது தியானத்தின் உச்சம் கூட அல்ல. தியானமே அங்கே இல்லை. அனுபவிப்பவன் இல்லை. அனுபவம் இல்லை. “நான் அமைதியாக இருக்கிறேன்” என்ற உணர்வுகூட அங்கே எஞ்சாது. இருப்பது ஒன்றே — அமைதியாய் நிற்கும் பரிபூரண நிலை.

அந்த நிலையில் நிற்கும் ஆற்றல், மெய்ஞ்ஞான மகத்துக்களுக்கு மட்டுமே இயலும். அவர்கள் அந்த நிலையை அடைந்து மீண்டும் வந்தவர்கள் அல்ல; அங்கேயே நிலைத்திருப்பவர்கள். அதனால் தான் அவர்கள் எதையும் செய்யாமல், எதையும் சொல்லாமல், அவர்களது இருப்பினாலேயே மற்றவர்களுக்கு அருளை வழங்க முடிகிறது.

நம்மைப் போன்றவர்களுக்கு துரியாதீதம் ஒரு கருத்து. ஒரு விளக்கம். ஒரு உயர்ந்த சொல். ஆனால் அனுபவமல்ல. இதை ஒப்புக்கொள்வதே ஆன்மீக நேர்மை. அனுபவிக்காத ஒன்றை அனுபவித்ததாகக் கூறுவது ஞானம் அல்ல; அது அகந்தையின் இன்னொரு வடிவம்.

இதனால் துரியாதீதம் நமக்கு இல்லை என்று அர்த்தமல்ல. அது நம்முள் இல்லை என்பதுமல்ல. அது மறைந்திருக்கிறது. மனம், நான், முயற்சி, சாதனை ஆகிய அனைத்தும் முழுமையாக விலகும் போது மட்டுமே அது தானாக வெளிப்படும்.

அதனால் சித்தர்கள் வழி சொல்லும் உண்மை இது: துரியாதீதம் அடைய வேண்டிய பொருள் அல்ல;
அது, நம்மை இல்லாமல் செய்யும் நிலை.

துரியம் துரியாதீதம்

துரியம், துரியாதீதம்;

உள்ளமே கோயில்; உயிரே இலிங்கம்;
வெளியே தேடுதல் வீணென்றுணர்.
சொல்லென நிற்கும் சிந்தை ஒடுங்கின்
மௌனமே ஆகும் மந்திரமதானே.

காணும் கண்களும் காண்பதும் ஒன்றாய்
நாணும் நானும் நீங்கிட நின்றால்
யோகமும் இல்லை யோகியும் இல்லை
ஆகமமாய் நிற்கும் அருளது ஒன்றே.

மூச்சின் நடை நின்று மனம் அமைந்தால்
ஆசான் உள்ளே அசையாது நிற்பான்;
துரியமும் கடந்து துரியாதீதம்
பெயரின்றி நிற்கும் பெருநிலை அது.

அறிவால் அறியார்; அனுபவம் சொல்லார்;
அறிந்தேன் என்பதே அஞ்ஞானம் ஆம்.
அறியாமை தெளிந்த இடத்தினிலே
அறிவாய் நிற்கும் அருளது காண்.

சி எஸ் சிவா 

காகபுஜண்டர் ஞானம் பாடல் 24

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24 பாடல் : தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்   தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்...