முன்னுரை:
எமது பெயர் சி. எஸ். சிவா.
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளையை கட்டமைத்து, இறைவன் அருளால் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், தாயுமான சுவாமிகள் அருளிய பராபரக்கண்ணி பாடல்களுக்கு உரையெழுதி வெளியிட வேண்டும் என்ற ஆவல் எம்முள் நீண்ட நாள்களாக இருந்து வந்தது.
அந்த ஆவல் இன்று நூலாக உருவெடுத்து, உங்கள் கைகளில் தவழ்வது, தாயுமான சுவாமிகள் மொழிந்ததுபோல் கூறின், பராபரத்தின் அருளாலேயே நிகழ்ந்ததாக நம்புகிறேன்.
எமது சபையின் அருளாளர்கள் மற்றும் அன்பர்கள் அளித்த பேருதவியின் காரணமாகவே இந்நூல் உருவெடுத்துள்ளது. குறிப்பாக,
தாயுமானவர் ஞான சபையின் பொருளாளர் தம்பி அ. அஜீத் குமார்,
தம்பி எஸ். விமல் பொன்ராஜ்,
மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாயுமான சுவாமிகள் அருளிய பராபரக்கண்ணியில் மொத்தமாக 389 கண்ணிகள் இருந்தாலும், இந்நூலில் தற்சமயம் எம்மால் இயன்ற அளவாக 130 கண்ணிகளுக்கு உரைநடை வடிவில் விளக்கங்களை அளித்துள்ளோம்.
எனது சிறுவயதிலிருந்தே வறுமை என்னைத் துரத்தியது. வாழ்க்கைச் சூழ்நிலைகளால் பல்வேறு இடங்களில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மனித உருவில் இருந்தாலும் விலங்கு மனம் கொண்ட சிலரின் கேலிக்கும், கிண்டலுக்கும், கடுஞ்சொற்களுக்கும் ஆளானதால், தாழ்வுமனப்பான்மை எனும் மனச்சுமை என்னுள் ஆழமாக வேரூன்றியது.
அந்தக் காலகட்டத்தில், இயற்கை ஞான சபையில் இணைந்து தீட்சை பெற்றது என் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. என்னை ஊக்கப்படுத்தி, ஆன்மீகப் பாதையில் வளர்த்தெடுத்ததில் பெரும்பங்கு ஆற்றியவர், அன்று சென்னை வில்லிவாக்கம் கிளைத் தலைவராக விளங்கிய திரு எம். ஜெகதீசன் அவர்கள் ஆவார்.
அந்த நாட்களில், சபையின் தலைவர் குருநாதர் தங்க சுவாமிகள் எனக்கு ஞானத் தந்தையாகவும், அண்ணன் ஜெகதீசன் அவர்கள் ஞானத் தாயாகவும் விளங்கினர். அந்த அனுபவக் காலங்களில், “தாயுமானவர்” என்ற பெயர் என் மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது.
ஒருநாள், சபையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் என்னை பேசுமாறு கேட்டார்கள். தாழ்வுமனப்பான்மையால் ஏற்பட்ட கூச்சத்தை அடக்கிக்கொண்டு,
“பிரியாத வரம் வேண்டும்” என்ற தலைப்பில் என் முதல் கன்னிப் பேச்சை வழங்கினேன்.
அந்தப் பேச்சில், “நீங்கள் இருவரும் எனக்கு தாயும் தந்தையும் ஆக இருந்து வழி நடத்துகிறீர்கள்” என்று மனம் திறந்து கூறினேன்.
எனது ஆன்மீக வளர்ச்சிக்காக பைபிள், நான்கு வேதங்கள், பகவத் கீதை போன்ற நூல்களை ஆராய்ந்து வருவதைக் கண்டு, அண்ணன் ஜெகதீசன் அவர்கள்,
“தாயுமானவர் நூல்களை ஆழ்ந்து படி; அது உன் ஆன்மீகத் தேடலுக்கு பெருந்துணையாக இருக்கும்” என்று அறிவுறுத்தினார்.
அந்தக் கணத்திலிருந்தே, என் கவனம் தாயுமானவர் பக்கம் முழுமையாகத் திரும்பியது.
பல காரணங்களால், அண்ணன் ஜெகதீசன் அவர்களே எனது நேரடிக் குருநாதராக அமைந்தார். அது நல்வினையின் பயன் என இன்றும் உணர்கிறேன். காரணம், இன்று தாயுமானவர் பாடல்களை உணர்ந்து வாசிப்பதோடு மட்டுமல்ல, அவற்றை எடுத்துரைக்கும் அளவிற்கு தேறியுள்ளேன் என்பதே எனக்கு அளவிட முடியாத நன்றியுணர்வும் ஆனந்தமும் அளிக்கிறது.
ஒரு நாளில், “பராபர வெளி என்றால் என்ன?” என்பதை என் குருநாதர் விளக்கிய அந்தக் கணமும், அந்த இடமும், இன்றும் என் நினைவில் மங்காத அனுபவமாகத் திகழ்கிறது.
அப்போது வரை, “எல்லாம் தலைக்குள் தான்” என்று நினைத்திருந்த என்னிடம்,
“மகனே, தலையும் உடலும் அழியும். அழியும் ஒன்றினுள் பேரானந்தப் பெருஞ்சுகம் தரும் சிவம் வந்து தங்குவதில்லை” என்று கூறி,
“கண்ணை மூடி, சும்மா இரு” என்றார்.
எந்தப் பயிற்சியும் இன்றி, அரைமணி நேரம் போல நான் வெளி உலகை மறந்து அமர்ந்திருந்தேன். மன அலைச்சல்கள் அடங்கி, ஒரு வாசல் திறந்தது போல் உணர்வு ஏற்பட்டது. இருளுக்குள் பயணிப்பது போன்ற, ஆனால் அச்சமற்ற, அலைவில்லா அனுபவம் அது.
பின்னர்,
“மண்டைக்குள் தான் எல்லாம் என்ற சிறையிலிருந்து நீ வெளியே வந்தாய். இப்போது பறக்கத் தொடங்கியிருக்கிறாய்” என்று அவர் கூறிய வார்த்தைகள் என் வாழ்க்கையை மாற்றின.
அந்த நாளிலிருந்து,
தாயுமான சுவாமிகளின் பாடல்களோடு,
அவர் மொழியில்,
அவர் எழுத்தில்,
உருகி, கரைந்து பயணிக்கத் தொடங்கினேன்.
தமிழ் எனும் அமுதக் கடலில் நான் இன்னும் கரையருகில்தான் நிற்கிறேன் என்ற உண்மையை உணர்ந்து, எமக்குத் தெரிந்த அளவில், சில உதவிகளையும் ஆதாரங்களையும் துணையாகக் கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளோம்.
குறைகள் இருப்பின், அருளாளர்கள் அருள்கூர்ந்து மன்னித்தருள வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
சி. எஸ். சிவா
நிறுவனர் & தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக