தெருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ்
சேர்ந்துவளர் சித்தாகிஅச்
சித்தெலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த்
திரமாகி நானாவிதப்
பொருளாகி யப்பொருளை யறிபொறியு மாகிஐம்
புலனுமாய் ஐம்பூதமாய்ப்
புறமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப்
போக்கொடு வரத்துமாகி
இருளாகி யொளியாகி நன்மைதீ மையுமாகி
இன்றாகி நாளையாகி
என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய்
இவையல்ல வாயநின்னை
அருளாகி நின்றவர்க ளறிவதல் லாலொருவர்
அறிவதற் கெளிதாகுமோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே.
:
விளக்கவுரை:
மனித மனம் சில நேரம் தெளிவாகவும், சில நேரம் குழப்பத்திலும் இருக்கும்.
ஆனால் அந்த மனமே உயர்ந்து நல்ல அறிவு (சித்த நிலை) பெறுகிறது.
எல்லாவற்றுக்கும் அடிப்படை சக்தி — பரம்பொருள்.
உலகில் உள்ள எல்லாப் பொருளும், அதை உணர்கிற அறிவும், நம் ஐம்புலன்களும், ஐம்பூதங்களும் எல்லாம் அதே சக்தியே.
புறமும் உள்ளும், தூரமும் அருகும், போகுதலும் வருதலும் — அனைத்திலும் அதுவே இருக்கிறது.
இருளும் ஒளியும், நல்லதும் கெட்டதும், இன்றும் நாளையும், என்றும் — அனைத்தாகவும் அது தோன்றுகிறது.
அது ஒன்றாகவும் பலவடிவமாகவும், எல்லாவற்றாகவும் இருக்கிறது; ஆனால் எந்த ஒரு வர்ணனையாலும் கட்டுப்படுத்த முடியாதது.
அத்தகைய பரம்பொருளை உணருவது அறிவால் சுலபமில்லை — அருளால் மட்டுமே தெரியும்.
முழு பிரபஞ்சமும் அடங்கும் ஒரே நிறைவு, ஆனந்தமான பரம் அதுவே!
சி எஸ் சிவா