வியாழன், 7 ஆகஸ்ட், 2025

பத்ரகிரியார் புலம்பல்



ஊமை கனாக் கண்டு உரைக்க அறியா இன்பம் அதை

நாம் அறிந்து கொள்வதற்கு நாள் வருவது எக்காலம்?


வாய் பேச முடியாத ஒருவர் தான் கண்ட இன்பம் நிறைந்த கனவை எப்படி பிறரிடம் சொல்லி விளக்க முடியாதோ! அதே போல் தான் 

ஆன்மீகத்தில் ஏற்படும் சுகானுபவங்களையும் பிறருக்கு வார்த்தைகள் மூலமாகவே அனைத்தையும் விளக்கிவிட முடியாது.

அப்பேற்பட்ட ஞானியை கண்டறிந்து அவரையே தனது குருநாதர் எனப் போற்றி அவரின் மௌனமும் நம் உயர்வுக்கு உண்டான பாடத்தை உணர்த்துகிறது என்று கண்டறிந்து உயர்வடைவது எக்காலம்?


சி.எஸ்.சிவா

வெள்ளி, 25 ஜூலை, 2025

தத்துவ நிலை

 பூநிலாயவைந்துமாய்ப் புணற்கண் நின்றநான்குமாய் 

தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் 

மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் 

நீநிலாயவண்ண நின்னையார் நினைக்கவல்லரே!.


                          சிவவாக்கியச் சித்தர்.


 பூமி எனும் நிலத்தோடு கூடிக் கலந்து நான்கு பூதங்களும் இருக்கிறது அதனாலேயே பூவுலகு என்று பெயர் பெற்று பல்வேறு படைப்புகளை உருவாக்குகிறது.


தீயில் மூன்று பூதங்கள் கலந்து நிற்கிறது.,

இடகலை,பிங்கலை என்கிற வெப்பம் மற்றும் ஈரப்பதக் கொண்ட குளிர்க் காற்றாகவும் அதுவே ஒன்றுகூடி செயல்படும்போது சுழுமுனைக் காற்றாகவும் செயல்படுகிறது.


இந்தவாறே ஐம்பூதங்களும்  ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு வெவ்வேறு தன்மையாக இவ்வுலகில் காட்சி அளிக்கிறது.


ஆகாய பூதமாகியது  அனைத்து பூதங்களிலும் ஊடுருவி கலந்து நின்று செயல்படுகிறது.ஆனால் ஆகாய பூதமோ மற்றெந்த பூதங்களின் குணங்களோடும் ஒட்டாமல் நின்று அதன் பணியைச் செய்யும்.


நீலவண்ண கண்ணா நீயே அனைத்திலும் கலந்து நின்று காத்தருளுகிறாய் ! 


பரந்தாமா நீ இந்தவாறு இருப்பதை எண்ணி உணர வல்லவர் எவரோ?


சிவா 

நிறுவனர்/தலைவர் 

தாயுமானவர் ஞான சபை

புதன், 28 மே, 2025

அபிராமி அந்தாதி பாடல் 16

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

                 அபிராமி அந்தாதி பாடல் 16

 பச்சை பசுங்கிளியே!
என்றும் மாறாத இளமையுடன் திகழ்கின்ற வாலைத் தாயே! உணர்கின்ற மனதில் உணர்வாகி எனக்கு ஞானத்தை உணர்த்துகின்ற ஒளிவெள்ளமே!

 ஒளிர்ந்து கொண்டே இருக்கும் ஒளிகளின் ஆதாரமே! அம்மா!
நினைத்து பார்க்கையில் காட்சிக்கு ஏதுமில்லா வெட்டவெளியாகி நீ நிற்கின்றாய்!
 
வெட்டவெளியில் இருந்து ஐம்பூதங்கள் ஆகவும், பல்வேறு வகையான உலகங்களாகவும் விரிந்து நிற்பது நீயே! அம்மா!

 எவ்வித பெரிய பக்தியும்,யோகங்களையும் செய்தவனா நான் என்று எனக்குத் தெரியவில்லை.அப்படி இருந்தபோதிலும் உன்னை அறிந்து கொள்ளும் அறிவை நீ எனக்கு அளித்தது எனக்கு பேரானந்தம் தாயே!
என்னை எனக்குள் பெருமைப் படுத்தும் தாயே உனக்கு என் பெரு வணக்கம்.

 சிவனணைந்த பெருமாள்

ஞாயிறு, 25 மே, 2025

அபிராமி அந்தாதி 15

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

 "தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே"

                                      அபிராமி அந்தாதி.

 மனிதர்கள் வேண்டுதலுக்கு ஏற்றவாறு இம்மண்ணுலக இன்பங்களையும், பெரும் பதவிகளையும் மட்டும் அல்ல! தவத்தில் சிறந்து விளங்கும் மாதவர்களுக்கு விண்ணுலக செல்வமான  அழியா ஒளியுடம்பையும் அருள்பவளும் அன்னை அபிராமித் தாயே! ஆதலால் 
 அபிராமித் தாயை நோக்கித் தவம் புரிவோம் அருள் பெற்றுவுயர்வோம்.

 சிவனணைந்த பெருமாள்

தாயுமானவர் பாடல்

ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ் செனவுமன
தலையுங் காலம்
மோசம் வரும் ; இதனாலே கற்றதுங்கேட் டதுந்நூர்ந்து
முத்திக் கான
நேசமுநல் வாசமும்போய்ப், புலனாயிற் கொடுமைபற்றி
நிற்ப ரந்தோ!
தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே! நிராசையின்றேற்
றெய்வமுண்டோ?

                         தாயுமான சுவாமிகள் .

 ஆசை எனும் பெருங்காற்று இலவம் பஞ்சு என்ற நிலையில் இருக்கும் மனிதனை அலைக்கழிக்கின்றது !
அம்மனிதன் கற்ற கல்வியும் கேட்டுக்கொண்ட உபதேசங்களும் கெட்டுப்போய் நல்ல முக்தியை நோக்கி அழைத்துச் செல்கிற நல்லுறவுகளையும் கெடுத்துக் கொள்கிறானே!
ஐயோ இது புரிந்தும் பரிதாபமாக நிற்க வேண்டியதாகிறதே!

 பழுத்த பழத்தை போல இருக்கும் பரபரமே! ஆசைகள் அனைத்தும் நிறைவேறாது என்பதாலேயே மனிதர்கள் தெய்வத்தை நோக்கி கை தொழுகின்றனர்.

 சிவனணைந்த பெருமாள்

வியாழன், 15 மே, 2025

அபிராமி அந்தாதி பாடல் 14

தலைமை நிலையைப் பெற!

வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.

                   அபிராமி அந்தாதி பாடல் 14

 வான்காந்த அலைவரிசையில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு வாழும் வானவர்களும்:

,தன்னையறிந்து தலைவனை உணர்ந்து, தலைவர்கள் ஆனவர்களும்,சிந்தினையை செயல்படுத்தும் பிரம்மாக்களும், விளைவுகளை காப்பாற்றி வருகின்ற நாராயணர்களும் ஆகிய அனைவரும் உன் சித்தத்தினாலே இயக்கம் ஆகின்றனர்.

 இந்தவாறு இயங்கும் பிரபஞ்ச உண்மையை உணர்ந்து அறவழியில் நடப்பவர்கள் பரவெளி தருகின்ற பேராணந்த பெருஞ்சுகத்தை அனுபவிக்கும் பரமானந்தர் என்று பெயர் பெற்று வாழ்வர்.இவ்வாறு வாழ்ந்து வருகின்ற பரமானந்தர்கள் இவ்வுலகம் எங்கும் உன்னை சந்தித்து கலந்துரையாடி மகிழ முடியும் என்பதை உணர்த்திய பேரொளி காட்டும் தண்மையான தீயே! எனது அபிராமித் தாயே!

சிவனணைந்த பெருமாள்
நிறுவனர் & தலைவர் 
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை

புதன், 14 மே, 2025

அபிராமி அந்தாதி பாடல் 13

பக்தி வைராக்கியம் ஆக!!!

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

                              அபிராமி அந்தாதி 13.

 அன்பால் பூவைப் போன்ற மலர்ந்த முகத்துடன் ஈரேழு பதினான்கு உலகங்களையும் காத்து அருள்கின்ற அம்மா!!
அரனுக்கும் முன்பிருந்தே அருள்பாலிக்கின்றாய் நீ!
இளமை குன்றாதவன் என்று புகழ் பெற்ற முகுந்தன் ஆகிய நாராயணனுக்கும் இளையவளாகவும் விளங்கி கன்னியாகுமரி எனவும் விளங்குகிறாய் மூத்த முன்னோடியே அம் மா பரம்பொருளே!பராபரமே!

 மாதவம் புரிந்து அறிந்து கொள்ளலாம் உன்னை அன்றி வோறொரு தெய்வம் இல்லை !

 அனைத்தும் உன்னில் இருந்தே உன்னால் உருவாக்கப்பட்டது ஆகும் .
அனைத்தும் உன்னிலே அடக்கமும் ஆகும்.
உணர்ந்து கொண்டேன் அபிராமித்தாயே! ஆதலால் என்னை அடக்கி ஆண்டுகொள்ளே!

 சிவனணைந்தபெருமாள்
நிறுவனர் . தலைவர்                                                     
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை .

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...