சிவவாக்கியரின் ஞானப் புரட்சிப் பாடல்.
பாடல் 50.
"தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே."
சிந்திக்கும் திறனில் ஏழைகளாக இருக்கும் அப்பாவி மக்களே !
தூமை என்றால் அது தீட்டு என்று கூறி ஆமை நீருக்குள் மூழ்கி வருவதுபோல் வந்து அநேக வேத மந்திரங்கள் ஓதும் பட்டர்கள் ஏமாற்றி வைத்துள்ளார்கள்!
அப்பாவிகளை ஏன் பயமுறுத்தி வைத்து இருக்கிறீர்கள் பட்டர்களே ! சாமியார் வேடத்தில் அலையும் வேடதாரிகளே! .
உங்கள் தாயின் உடலில் மாதாமாதம் சுழற்சி முறையில் கழிந்திட வேண்டிய உதிரக்கழிவுகள் உங்கள் தாயின் வயிற்றில் நீங்கள் கருவாகி தங்கியவுடன் நின்று விட்டது தானே ?
அந்த உதிரக் கழிவாக வேளியேற வேண்டிய உதிரத்தில் தானே உங்கள் உடலே உருவாகி இங்கே வந்துள்ளீர்கள்.
இந்த வகையில் உருவாகிய நீங்கள் நீருக்கடியில் போய் குளித்து வந்து விட்டால் மட்டும் உதிரக் கழிவைக் கொண்டு உருவாகிய உங்கள் உடல் சுத்தம் ஆகி விடுமா என்ன?
அப்படி என்றால் நீருக்கடியில் வாழும் ஆமை உங்களைவிட சுத்தமான உயிராகாதா? சட்டநாதப் பட்டரே?
ஆதலால் மக்களே வேதம் ஓதுபவன் அவன் பிழைப்புவாதி இந்த வகையில் அவர்களைப் பார்த்தால் போதும்.அவர்களை ஞானத்திற்கான வழிகாட்டும் குரு என்று நினைத்து நீங்கள் பெற வேண்டிய ஞானத்தை கொன்று அழிக்காதீர்கள்.
உனக்குள் பயணித்து உனக்கான ஆன்ம வளர்ச்சிப் பாதையை நீயே உருவாக்கிக் கொள்ள சுட்டிக் காட்டிக் கொடுப்பவரே குரு ஆவார்.
ஆன்மீகத்திற்கு உடல் முக்கியம் இல்லை.உள்ளம் தான் முக்கியம்.உள்ளம் தெளிவாக இருந்தால் போதும்.
சி எஸ் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக