மண் உடல் மாயை என்று
மறந்திடும் நாள்வரைக்கும்,
எண்ணம் என்னும் குரங்கு
ஏறி இறங்கி ஆடும்.
ஆசை என்னும் தீயில்
அகம் எரிந்து போகும்,
மோகம் என்னும் இருளில்
மெய்ஞ்ஞானம் மறையும்.
சுக்கு போல் காய்ந்த மனம்
சுழல்பிறவி அறுக்கும்,
இஞ்சி போல் ஈர மனம்
மீண்டும் மண்ணில் முளைக்கும்.
உள்ளே தேடு சிவனை,
ஊர்தோறும் அலையாதே;
அகம் சுத்தி செய்துவிட்டால்
அவனே நீயாய் நிற்பான்.
காயம் பொய்யென கண்டால்
காலன் உனை தொடான்;
வாய்மை வழி நின்றால்
வாழ்வு வீடாம் ஆகும்.
சி எஸ் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக