சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே.
காகபுசுண்டர் 1
எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது பராபரமே ஆகும்.
அதுவே சூரிய, சந்திர அக்கினியாக பரந்து விரிந்து நின்று அருள்கிறது.
ஐம்பூதங்கள்; ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம்.
பராபரத்தின் துணையோடு மறைந்து நின்று விளங்குகின்ற மகா சக்தி என்றும் அறிஞர்களால் போற்றப்படும் மாயா சக்தியே பல்லாயிரம் கோடி அண்டங்களைப் படைத்து சீரமைப்புடன் இயக்கி வருகிறது.
அம்மாயா சக்தியே அதே ஐம்பூதங்களைக் கொண்டு உயிர்களையும் படைத்தருளுகிறது.
அதே மாயா சக்தி தான் ஒரே இறைவனை வணங்கும் முறையைக் கூட பல்வேறு வடிவத்தில் உள்ள சமய வேற்றுமை கொண்டு நம்மை வணங்கிடச் செய்கிறது.
பிராணன் எனப்படும் உயிர்க்காற்று நம்மில் பெருக வேண்டும்.
மாயா சக்திக்கும் நாயகனாக விளங்குகின்ற எம்பிரானே எங்கும், எப்போதும் உண்மையான ஆனந்தத்தை தருகிறார். என்பதை உணர்ந்து ,புரிந்து கொண்டு அந்த சச்சிதானந்தப் பெருங்கடவுளையே பேதமையை நீக்கிக் கொண்டு ஒற்றுமை உணர்வுடன் என்றும் வணங்கி மகிழ்வோமாக!.
சி.எஸ்.சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக