திங்கள், 2 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 9

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 9

பாடல் :

பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
  பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
  அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
  கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
  வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.

உரைநடை விளக்கம்:

இங்கே நமது சித்தர் பரப்பிரம்ம அனுபவத்தின் அடுத்த நிலையை எடுத்துச் சொல்கிறார். பரப்பிரம்மம் ஆனது ஒளியாக வெளிப்படும் போது, அந்த ஒளிச் சக்தி உடலின் நுண்ணிய நரம்பு வழியே பாய்கிறது என்கிறார். இது சாதாரண நரம்பு ஓட்டம் அல்ல; ஞான ஒளியின் ஓட்டம்.

அந்த ஒளி இரு கண்களின் விழி மையத்தில் தெளிவாக உணரப்படும் போது, உலகம் தனித்தனியாகத் தெரியாது. அண்டமெங்கும் ஒரே ஆதாரம் என்ற உணர்வு மேலோங்கி எழும். “ஏகம்” என்ற உண்மை அனுபவமாகி நிற்கும்.

“நரம்பென்ற விழுது வட்டம்” என்று கூறுவது, கபால மையத்தில் உருவாகும் ஒரு சுழற்சி அனுபவம் ஆகும். அதாவது ஞானம் பயிலுபவன் தலையின் நடு மையத்தில் ஒரு மைய சுழி போல சக்தி திரளும். அது மூன்று கூறுகளாகச் சுழலும் — இதுவே முன்பு கூறிய சூரிய, சந்திர, அக்னி சக்திகளின் ஒருமை நிலை பெற்று சுழுமுனை அனுபவம் சித்தி ஆகும்.

அடுத்ததாக அவர் காதும் நாவும் பற்றிக் கூறப் போவதாக சுட்டுகிறார். அதாவது, இந்த உள்நாதம், உள்ஒளி அனுபவம், உணர்வுகள் முற்றிலும் மாற்றும் பெறும். கேட்பதும், பேசுவதும் முந்தைய காலங்களைப் போல் சாதாரணமாக இருக்காது. 

ஞான யோகத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், இந்த நுண்ணிய மாற்றங்களை மாணவன் அறிந்திருக்க வேண்டும்.

இது வெறும் நூலறிவு அல்ல.ஒருவனது பயிற்சி அனுபவம் வளர வளர இவை தெளிவாகும்.

சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 8

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 8

பாடல் :

வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
  வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகி
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
  கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
  வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
  நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.

உரைநடை விளக்கம்:

இங்கே நமது சித்தர் மிகவும் நுண்ணிய யோக ரகசியத்தைத் திறந்து சொல்கிறார். “பிரமத்தின் நடுவே” என்று கூறுவது, சுத்த சித்த நிலையின் நடுமையத்தைச் சுட்டுகிறது. அந்த நடுமைய அனுபவத்தில்தான் சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை எனச் சொல்லப்படும் மூன்று ஒளிச் சக்திகளும் தலையில் ஒன்றாய் உணரப்படுகின்றன.

இந்த மூன்று சக்திகள் தனித்தனியாக இல்லாமல், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து உடலின் கீழ்நிலைகளுக்கு ஓடுகின்றன என்றும் அவர் கூறுகிறார். இதை வெளியில் தேட முடியாது; 

“இருக்கண்ணில் ஒளி” என்று சொல்வது உள் பார்வையை. இரண்டு கண்களின் இடையே தோன்றும் நுண்ணிய ஒளி அனுபவத்தை உணரச் சொல்கிறார்.

அண்டத்தின் (தலை) உச்சியிலிருந்து ஒரு நரம்பு விழுது போல இறங்குகிறது என்கிறார். இது உடல் நரம்பு பற்றி அல்ல; சூட்சும உடலின் ஓட்டத்தின் வழியே அந்த ஓட்டம் நேராக இரு கண்களின் மையத்தில் பின்னிப் பிணைந்து ஒளியாக வெளிப்படுகிறது. அதுவே தியானத்தில் அனுபவிக்கும் அகஒளி ஆகும்.

இந்த ஒளி கற்பனையால் அல்ல. மனம் நிசப்தமாகி, மூச்சு சீராகி, சிந்தனை ஒருமையடைந்தால், அது நிச்சயமாகத் தோன்றும். அப்போது மனிதன் வெளி ஒளியைப் பார்க்கவில்லை; தன்னுள் நிரம்பிய ஒளியைப் பார்க்கிறான்.

இந்த நிலையை அடைந்தவன் தேடுபவன் அல்ல; கண்டவன்.
அவன் உள்ளம் ஒளியாகி நிற்கும்.

சி. எஸ். சிவா

வியாழன், 26 பிப்ரவரி, 2026

கார்மேகம்

கார்மேகம்;

கார்மேகம் — வெளிப்படையாக அது இருளின் அடையாளம் போலத் தோன்றினாலும், ஆன்மீகக் கண்ணோட்டத்தில் அது கருணையின் வடிவமாகும்.

வெயிலின் வெப்பம் நிலத்தை வாட்டுவது போல வாழ்க்கையின் சோதனைகள் மனதை வாட்டுகின்றன. அப்போது வானத்தின் எல்லையில் மெதுவாக கருமேகம் திரண்டு வருவது போல, மனிதனின் உள்ளத்தில் ஒரு தேடல் எழுகிறது. அந்த தேடலே ஆன்மீகப் பயணத்தின் முதல் அறிகுறி.

கார்மேகம் முதலில் வெளிச்சத்தை மறைக்கிறது. அது இருள் அல்ல; ஓய்வு. அது முடிவு அல்ல; மாற்றத்தின் தொடக்கம். அதன் கருமை, ஒளி பிறக்க வேண்டிய கருவறை.

மின்னல் பளிச்சென்று ஒளிரும் ஒரு கணத்தில் உலகம் தெளிவாகத் தெரியும். அதுபோல் தியானத்தின் சில தருணங்களில் உண்மை மின்னல் போல உள்ளத்தைத் துளைக்கிறது. அந்த ஒரு அனுபவமே பயணத்தைத் தொடர வைக்கும் சக்தியாகிறது.

மழை பொழியும் போது வறண்ட நிலம் உயிர்ப்பெடுக்கிறது. இறை அருள் பொழியும் போது உலர்ந்த மனம் நனைகிறது. “நான்” என்ற அகம்பாவம் மெதுவாக கரைகிறது.

கார்மேகம் கலைந்தபின் வானம் மேலும் தெளிவாகிறது. சோதனைகள் கடந்தபின் மனிதன் மேலும் ஆழமாகிறார்.

ஆக, கார்மேகம் என்பது இருளின் அடையாளமல்ல; அது புதுப்பிறப்பின் அறிகுறி.

அன்புடன்,
சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 7

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 7

பாடல் :

காணலாம் பிரமத்தில் நிர்ணயந்தான்
  காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
  பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
  தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
  அண்டமடா அனந்தனந்த மான வாறே.

உரைநடை விளக்கம்:

பிரம்ம நிலை அனுபவம் என்பது கற்பனை அல்ல; அது தீர்மானமான அனுபவ நிலை. அதை காண முடியும் என்று சித்தர் தெளிவாகச் சொல்கிறார். ஆனால் கேட்பவன் “வாசி”யோகப் பயிற்சியின் கருவை அறிந்திருக்க வேண்டும். மூச்சின் நுண்ணிய ஓட்டத்தை உணராமல் இந்த அனுபவம் என்பது கிடையாது.

அண்ட உச்சியில் நிலைபெறுவது என்றால், சிந்தனை தன் மூலத்திற்கே திரும்புவதாகும். அங்கே இருந்துதான் உணர்வுகளின் பொறிகள் உருவாகின்றன. கண், காது, மூக்கு போன்ற உடல் பொறிகள் மட்டுமல்ல; அறிவுப் பொறிகளும் அங்கேயே தோன்றுகின்றன.

அந்த  சித்தசக்தியே புவனமெங்கும் பரவி நின்று “உயிர்” எனும் பயிராக வெளிப்படுகிறது. ஒரே ஆதாரத்திலிருந்து தான் பல உயிர்கள் தோன்றுகின்றன. “எழு தோற்றம்” என்று சொல்லப்படுவது, உயிர் வெளிப்படும் பல நிலைகள். பிறப்பு, வளர்ச்சி, மாற்றம், சிதைவு போன்ற அனுபவங்கள் அனைத்தும் அதற்குள் அடங்கும்.

“நாலுவகை யோனி” என்பது உயிர் தோன்றும் வகைகள் — முட்டையிலிருந்து, கருவிலிருந்து, ஈரப்பதத்திலிருந்து, விதையிலிருந்து — என உலக வாழ்க்கையின் பரவலைக் குறிக்கும். இவை அனைத்தும் ஒரே ஆதாரத்தின் வெளிப்பாடுகள்.

அண்டம் என்பது வெறும் விண்மீன் கூட்டம் அல்ல. அது அனந்தமான சித்தத்தின் விரிவு. அந்த அனந்தம் தான் எல்லாமாகவும் விளங்குகிறது.

இந்த ரகசியம் புரியும்போது, மனிதன் தனித்தனியாகக் கண்டு வருகின்ற உலகம் கரைந்து விடும்.
ஒரே ஆதாரம் — பல தோற்றங்கள் — அதுவே அண்டத்தின் மெய்.என்பதை உணர்ந்து விடுவான்.

 சி. எஸ். சிவா

புதன், 25 பிப்ரவரி, 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 6

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 6

பாடல் :

கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
  கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
  அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
  வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
  நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே.

உரைநடை விளக்கம்

“அண்ட உச்சி” என்பது தலையின் உச்சியில் அனுபவிக்கப்படும் சுத்த சிந்தனை நிலை. மூச்சு நிசப்தமாகி, மனம் ஒருமையாகி, சிந்தனை ஓட்டம் அடங்கும் போது அந்த உச்சி உணரப்படும். அந்த நிலையைத் தெளிவாகக் கண்டவனுக்கே மவுனம் வாய்க்கும். வாயை மூடிக் கொள்வது மவுனம் அல்ல; மனம் அசையாமல் இருப்பதே மவுனம் ஆகும்.

பரப்பிரம்ம யோகம் என்பது கீழிருந்து மேலே செல்லும் உள்சாதனை. ஆதாரத்திலிருந்து உச்சிவரை சக்தி உயரும்போது, உள்ளத்தில் அனுபவப் போதம் படிப்படியாக உயர்கிறது. இதை அனுபவிக்காதவன் நூறு புத்தகம் படித்தாலும் பயன் என்பது இல்லவே இல்லை.

“விந்து” என்பது உயிர்சக்தியின் மையம். “நாதம்” என்பது அதின் அதிர்வு. சக்தி மேலெழும்பும் போது, உள்ளத்தில் ஒளியும் ஒலியும் ஒன்றாய் அனுபவமாகும். சிலருக்கு அது மெல்லிய ஓசையாகத் தோன்றும்; சிலருக்கு தெளிவான நாதமாக உணரப்படும். அது காதால் கேட்பதல்ல — சித்தத்தில் எழும் அதிர்வு.

சக்தி உறுதியாக மேலே திரண்டு நிற்கும் போது, உடல் லேசாகும். மூச்சு மெல்ல அடங்கும். அப்போது அண்டமே சக்தியின் நடனமாகத் தோன்றும். “சிலம்பொலி” என்று சொல்வது, அந்த உள்நாதத்தின் அனுபவம். அது வெளியில் இல்லை; உள்ளே.

இந்த அனுபவம் வந்த பின், மனிதன் அமைதியாகி விடுகிறான். ஏனெனில் அவன் தேடியது முடிந்துவிட்டது.

— சி. எஸ். சிவா

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 5

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 5

பாடல் :

செய்யப்பா வாசிமுனி மகனே கேளு
  தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில்
மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம்
  மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப்
  புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம்
  வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே.

உரைநடை விளக்கம்:

“வாசி முனியின் மகனே” என்று அழைப்பது சாதாரண அழைப்பு அல்ல; அது சுவாசத்தின் ரகசியத்தை உணர்ந்தவரை நோக்கி உரைக்கும் அழைப்பு. கேட்பவனின் தகுதியை நினைவூட்டும் குரல் இது.

முன்னதாக ஆயிரம் விதமாக விரிவாக உரைத்ததை இங்கே சுருக்கமாகச் சொல்கிறேன் என்று அவர் கூறுகிறார். உலகச் சரக்குகள் — ஆசை, அகம்பாவம், பற்றுகள் — இவற்றை நீக்கினால் தான் உண்மை வெளிப்படும். உலோகத்தை உருக்கி சுத்தமாக்குவது போல, மனக் கட்டுகளையும் உருக்க வேண்டும்.

“பொய் சொல்லவில்லை” என்று அவர் வலியுறுத்துகிறார். இது அனுபவத்தின் மொழி. ரத்தினம் போல மதிப்புடைய பாதையை புனிதமாய், தெளிவாய் கூறியுள்ளேன் என்று உறுதி அளிக்கிறார்.

இந்த நூலில் “மவுனம்” பற்றியும் வகையாகச் சொல்லப் போகிறேன் என்கிறார். மவுனம் என்பது பேசாமல் இருப்பது அல்ல; மனம் அசையாமல் இருப்பது. அந்த நிலையை அறிய பணிவுடன் கேட்க வேண்டும்.

ஞானம் வாதத்திற்கு அல்ல; பணிவிற்கு தான் திறக்கிறது.
கேட்பவன் பணிவுடன் இருந்தால், மவுனமே அவனுக்குள் பேசத் தொடங்கும்.

— சி. எஸ். சிவா

திங்கள், 23 பிப்ரவரி, 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 4

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 4

பாடல் :

காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
  கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
  பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
  விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
  சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே.

உரைநடை விளக்கம்:

“தலம்” என்று நீ தேடும் இடமெல்லாம் அண்டத்தின் உச்சியில் ஒன்றாக முடிகிறது. வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் பயணம், இறுதியில் உள்ளுக்குள் திரும்பவேண்டும். “பதினெட்டாம் கோட்டை” என்பது உணர்வின் உச்சநிலை – அங்கே தான் கமலம் முழுமையாக மலர்கிறது.

மனதை அசையாமல் காத்து, பிசகாமல் பிடித்து, பரம்பொருளில் நிலைநிறுத்த வேண்டும். மனம் அலைபாயாமல் இருந்தால், அது தானாகவே பிரம்மத்தில் இனைந்து விடும்.

மந்திரங்கள் பல என்று தேட வேண்டாம். விதி உண்டு, மதியம் உண்டு, கெதி உண்டு என்று எண்ண வேண்டாம். உண்மையில் இவை அனைத்தும் மனத்தின் கட்டுக்கதைகள். மனம் அமைந்த இடத்தில் தான் வழி தெரியும்.

மனம் ஒன்றாகி சுத்தமடைந்தால், அதுவே தவம். தனியாக மலைக்குச் செல்ல வேண்டியதில்லை; மனம் சுத்தமாய் இருந்தால் எங்கிருந்தாலும் அது தவமே.

உள்ளம் ஒருமைப்பட, சுத்தமுடன் நிலைபெற்று, பரம்பொருளில் ஆழ்ந்திரு — அதுவே யோகமும், அதுவே ஞானமும்.

— சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...