திங்கள், 2 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 9

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 9

பாடல் :

பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
  பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
  அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
  கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
  வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.

உரைநடை விளக்கம்:

இங்கே நமது சித்தர் பரப்பிரம்ம அனுபவத்தின் அடுத்த நிலையை எடுத்துச் சொல்கிறார். பரப்பிரம்மம் ஆனது ஒளியாக வெளிப்படும் போது, அந்த ஒளிச் சக்தி உடலின் நுண்ணிய நரம்பு வழியே பாய்கிறது என்கிறார். இது சாதாரண நரம்பு ஓட்டம் அல்ல; ஞான ஒளியின் ஓட்டம்.

அந்த ஒளி இரு கண்களின் விழி மையத்தில் தெளிவாக உணரப்படும் போது, உலகம் தனித்தனியாகத் தெரியாது. அண்டமெங்கும் ஒரே ஆதாரம் என்ற உணர்வு மேலோங்கி எழும். “ஏகம்” என்ற உண்மை அனுபவமாகி நிற்கும்.

“நரம்பென்ற விழுது வட்டம்” என்று கூறுவது, கபால மையத்தில் உருவாகும் ஒரு சுழற்சி அனுபவம் ஆகும். அதாவது ஞானம் பயிலுபவன் தலையின் நடு மையத்தில் ஒரு மைய சுழி போல சக்தி திரளும். அது மூன்று கூறுகளாகச் சுழலும் — இதுவே முன்பு கூறிய சூரிய, சந்திர, அக்னி சக்திகளின் ஒருமை நிலை பெற்று சுழுமுனை அனுபவம் சித்தி ஆகும்.

அடுத்ததாக அவர் காதும் நாவும் பற்றிக் கூறப் போவதாக சுட்டுகிறார். அதாவது, இந்த உள்நாதம், உள்ஒளி அனுபவம், உணர்வுகள் முற்றிலும் மாற்றும் பெறும். கேட்பதும், பேசுவதும் முந்தைய காலங்களைப் போல் சாதாரணமாக இருக்காது. 

ஞான யோகத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், இந்த நுண்ணிய மாற்றங்களை மாணவன் அறிந்திருக்க வேண்டும்.

இது வெறும் நூலறிவு அல்ல.ஒருவனது பயிற்சி அனுபவம் வளர வளர இவை தெளிவாகும்.

சி. எஸ். சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...