திருமூலர் அருளிய திருமந்திரம்
கடவுள் வாழ்த்து !.
---
1. பாடல்
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.
உரைநடை விளக்கம் :
இந்த பேரண்டம் ஒரு ஒழுங்கான இயக்கத்தில் இடைபடாமல் செயல்பட்டு வருகிறது என்றால், அதன் அடிப்படையில் ஒரே ஆதார சக்தி செயல்படுகிறது என்பதே ஆதியோகியரின் கண்டுணர்தல். அந்த ஆதார சக்தி ஒன்றாக இருந்தாலும், இயக்கத்தின் தேவைக்கேற்ப பல நிலைகளாக வெளிப்படுகிறது. உயிர், மனம், உடல், புலன், சிந்தனை, அனுபவம் என பல அடுக்குகளாகப் பிரிந்து இயங்கினாலும், அனைத்திற்கும் மூலமாக இருப்பது அந்த ஒரே பேராற்றல்தான். சாதகன் தனது விழிப்பை ஆழமாக்க ஆழமாக்க, இந்தப் பல நிலைகளையும் கடந்து, இறுதியில் அந்த ஆதார சக்தியோடு ஒன்றி நிற்கும் நிலையை அடைகிறான். அங்கே எண்ணிக்கையும் இல்லை, வேறுபாடும் இல்லை; இருப்பதே உண்மை.
---
2. பாடல்
போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
உரைநடை விளக்கம் :
உயிர்கள் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் ஈர்ப்பு விதி, வெளிப்படையான சக்தி போல தோன்றினாலும், அதன் பின்னால் இன்னொரு நுண்ணிய பேராற்றல் தொடர்ந்து செயல்படுகிறது. அந்தப் பேராற்றலே உயிராகவும், இயக்கமாகவும் இருந்து, எல்லாத் திசைகளிலும் சமமாகப் பரவி நிற்கிறது. அந்த சக்தியை உணர்ந்து அதோடு இணைந்து இயங்குபவன், இயற்கையின் ஒழுங்கோடு ஒத்திசைவடைகிறான். அப்போது பயம் குறைகிறது; மரணத்தின் பிடி தளர்கிறது. இதுவே காலனை வெல்வது என்று ஞானிகள் கூறிய உண்மை. இந்த நிலையை அடைந்தவனுக்குள், வாழ்க்கை ஒரு போராட்டமாக இல்லை; ஒரு ஒழுங்கான ஓட்டமாக மாறுகிறது.
---
3. பாடல்
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே.
உரைநடை விளக்கம் :
இந்த பேராற்றல் யாருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை. அனைத்திலும் சமமாகவே இயங்குகிறது. ஆனால் மனித மனம் எப்போதும் வெளிப்புற ஈர்ப்புகளால் கட்டுப்பட்டிருப்பதால், அருகிலேயே இருக்கும் அந்த சக்தியை உணர முடியாமல் போகிறது. ஆசையும் பயமும் குறையும்போது, அந்த சக்தி தன்னை வெளிப்படுத்துகிறது. இதையே ஆதியோகிகள் “நக்கன்” என்ற நிலை எனக் கூறினர். எதையும் பெற வேண்டிய அவசரம் இல்லாத நிலை, எதையும் இழக்கும் அச்சம் இல்லாத நிலை. அந்த நிலையில் உள்ளே நிலைத்திருப்பதே உண்மையான போற்றி; அதுவே பரம்பொருளை நேரடியாக அனுபவிக்கும் வழி.
---
4. பாடல்
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
உரைநடை விளக்கம் :
பேரண்டத்தின் விதை வெளியில் எங்கோ இல்லை; அது மனித உடலுக்குள்ளேயே செயல்பட்டு வருகிறது. மூச்சு, உயிர், விழிப்பு இவை ஒரே ஒழுங்கில் இயங்கத் தொடங்கும் போது, உள்ளே ஒரு பரந்த வெளி அனுபவமாகிறது. அந்த அனுபவம் அறிவால் புரிந்து கொள்ள முடியாதது; அது நேரடியாக உணரப்பட வேண்டியது. அந்த விழிப்பில் பகலும் இரவும் வேறுபடுவதில்லை. தொடர்ச்சியான கவனத்தில் நிலைத்திருக்கும் போது, அறியாமை தானாகவே கரைகிறது. இருளை அகற்ற முயற்சி செய்ய வேண்டியதில்லை; உண்மை வெளிப்பட்டால் இருள் நிலைக்காது.
---
5. பாடல்
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
உரைநடை விளக்கம் :
இப்பேரண்டத்தை ஆதியோகியர் நன்கு ஆய்ந்து, அனைத்து சுழற்சிகளும் இடைபடாமல் இயங்குவதற்கு ஈர்ப்பு விதியே ஆதார சக்தியாக இருப்பதை கண்டுணர்ந்தனர். அந்த ஈர்ப்பு சக்தியையும் ஒரு பேராற்றல் வெப்பகளமாக நின்று தன்னோடு இணைத்து இயக்கிக் கொண்டிருப்பதை ஞான விழிப்புணர்தல் மூலமாக தெளிவாக உணர்ந்தனர். இறுதியில், அந்த பேராற்றலுக்கே “சிவம்” என்று பெயரிட்டு வணங்கினர். இந்தப் பேராற்றலை வணங்குதல் என்பதன் பொருள், ஈர்ப்பு விதியின் விளையாட்டிலிருந்து மெதுவாக விலகி, பின்னர் முழுமையாக அந்த சிவப் பரம்பொருளின் ஒழுங்குக்குள் இணைவதே. இந்த நிலையில் அடைந்தவர்களை ஈர்ப்பு விதி கட்டுப்படுத்தாது; அவர்கள் அதையே தாண்டிய மகத்துவ நிலையை அடைகிறார்கள். அதனால்தான் ஞானிகள் கூறினர் — சிவத்தோடு ஒப்பிடத் தகுந்த தெய்வம் எதுவும் இல்லை என்று.
6. பாடல்
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.
உரைநடை விளக்கம் :
இறைவனைத் தவிர்த்து தனித்து நிற்கும் சக்தி எதுவும் இல்லை. தேவர்கள், ஞானிகள், தவசிகள் என்று எவராக இருந்தாலும் அவர்களது நிலை அவன் அருளின் வெளிப்பாடே. அவனை நினைவில் கொள்ளாமல் செய்யப்படும் தவம் வெளிப்புற முயற்சியாக மட்டுமே நிற்கும்; அக மாற்றத்தை அது தராது. படைப்பு, காப்பு, அழிப்பு என மூவரின் செயல்களும் அவன் பேருணர்வின் இயக்கமே. ஆகவே, அவனைத் தவிர்த்து வேறு வழி உண்டு என்ற எண்ணமே எனக்குத் தெரியாது என்கிற உறுதியே இப்பாடலின் மையம்.
---
7. பாடல்
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.
உரைநடை விளக்கம் :
காலத்திற்கும் முன், காரணத்திற்கும் அப்பால் நிற்கும் பரம்பொருள் அவன். அவனுக்கு ஒப்பானது எதுவும் இல்லை. ஆனாலும், அவன் எட்டாதவன் அல்ல. உள்ளம் அவனை எந்த உறவாக அழைக்கிறதோ, அந்த உறவாகவே அவன் வெளிப்படுகிறான். தந்தையாகவும் தாயாகவும் காத்தருளும் அவன், பொன்னைவிட மேலான ஞானமாக உள்ளத்தில் ஒளிரும் போதகனாக நிற்கிறான்.
---
8. பாடல்
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
உரைநடை விளக்கம் :
இறைவன் ஒரே குணத்தால் அளவிடப்பட முடியாதவன். அவன் தீயைப் போல கடுமையும், நீரைப் போல குளிர்ச்சியும் உடையவன். அறிவால் அவன் அருளின் ஆழத்தை அளக்க இயலாது. ஆனால் அன்போடு அவனை அணுகும் பக்தர்களுக்கு, அவன் மிக அருகில் நிற்கிறான். தாயைவிட மேலான கருணையுடன் உயிரைத் தாங்கும் அருள் வடிவமே தாழ்சடையோன்.
---
9. பாடல்
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
உரைநடை விளக்கம் :
ஒளிவிடும் சடையுடன், நந்தியாகவும் நாதமாகவும் நிற்கும் இறைவன் வெளிப்புற வடிவம் மட்டும் அல்ல. “என்னால் தொழப்படும் என் இறைவன்” என்ற சொல், ஒரு உள் அனுபவத்தின் சாட்சி. அந்த அனுபவத்தில் அவன் தான் எல்லாமாக நிற்கிறான். அவன் தன்னிச்சையான பரம்பொருள்; அவனை நிலைநிறுத்த வேறு யாரும் தேவையில்லை.
---
10. பாடல்
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.
உரைநடை விளக்கம் :
பூமியாகவும் ஆகாயமாகவும், தீயாகவும் சூரியன்–சந்திரனாகவும், மழையாகப் பொழியும் கருணையாகவும் அவன் தான் நிற்கிறான். மலைகளின் உறுதியாய், கடலின் ஆழமாய், அமைதியாய் விளங்கும் பரம்பொருளும் அவனே. இவை அனைத்தும் தனித்தனி அல்ல; ஒரே பேருணர்வு பல வடிவங்களில் விளையாடும் அருள் வெளிப்பாடுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக