பாடல் :
முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.
உரைநடை விளக்கம்:
இந்தப் பாடலில் சித்தர் மந்திரம் பற்றிய ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறார். முத்தி பெற வேண்டும் என்று நினைத்து மந்திரத்தை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டே இருந்தால், மனம் இரண்டாகிப் போகும் என்று அவர் எச்சரிக்கிறார். அதாவது மனம் ஒரு பக்கம் மந்திரத்தை நினைக்கும்; இன்னொரு பக்கம் உலகத்தை நினைக்கும். இப்படியாக மனம் இரண்டாகிப் போனால் அதில் நிலையான நிலை வராது.
உன் மனம் அமைதியாக வேண்டும். அது அலைந்து திரியாமல் ஒருமைப்பட வேண்டும். அதற்காக தான் அவர் “நித்திரையைத் தள்ளி” என்று சொல்கிறார். அதாவது அறியாமை தூக்கத்தை விட்டு விழித்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறார்.
மனம் ஒருமையாகி புத்தி பிரம்மத்தில் சென்று நிலைபெற்றால், மனிதனின் உள்ளம் தெய்வீகமாக. மாறிவிடும். அப்போது உலகம் அவனை அடிமையாக்காது; மாறாக அவன் பெற்று நிற்கின்ற நிலைக்கு உலகமே பணிந்து நிற்கும் என்று சித்தர் பெருமான் நமக்கு சுட்டுகிறார்.
இதற்கான வழி என்ன? அலைந்து திரியும் மனத்தை அடக்கி, பிடரி மார்க்கம் என்று சொல்லப்படும் அந்த நடு ஓட்டத்தில் வாசியை ஏற்ற வேண்டும். அதாவது மூச்சின் நுண்ணிய ஓட்டத்தை மேலே செலுத்தி நிலைநிறுத்த வேண்டும்.
அப்படி வாசி மேலே ஏறி நிலைபெற்றால் தான் யோகத்தின் உண்மையான கற்பம் — அதாவது நிலையான அனுபவம் — கிடைக்கும் என்று சித்தர் கூறுகிறார்.
சி. எஸ். சிவா